செவ்வாய், 1 மார்ச், 2016

ரேஷன் கார்டு இல்லாததால் நின்ற இருதய ஆப்பரேஷன்

சிவகங்கை: ரேஷன் கார்டு இல்லாததால், சிவகங்கை சிறுவனுக்கு, சென்னை அரசு மருத்துவமனையில் நடக்க இருந்த இதய ஆப்பரேஷன் நிறுத்தப்பட்டது. இதனால, புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த சிறுவனின் தாய்க்கு, 'எக்ஸ்பிரஸ்' ரேஷன் கார்டு வழங்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.



சிவகங்கை அருகேயுள்ள நாமனுார் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர், லதா; ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் இளங்கோவன், உடல்நல பாதிப்பால் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மகன் கவுதம், 13, நாமனுார் அரசு நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறான்.

கவுதமிற்கு, 10வது வயதில் திடீர் நெஞ்சு வலி ஏற்படவே, கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தனர். பரிந்துரைப்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுவனின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்து, ஆப்பரேஷனுக்காக சென்னை செல்ல கூறினர்.

ரேஷன் கார்டால் பாதிப்பு:

லதா, தன் மகனை காப்பாற்றுவதற்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆப்பரேஷன் செய்ய, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டையை கேட்டுள்ளனர். இருப்பிட உறுதிக்கு, ரேஷன் கார்டுடன் கட்டாயம் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கார்டு இல்லாததால், ஆப்பரேஷன் செய்யாமல் வீடு திரும்பினார். தன் மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய முடியாத நிலையை கூறி, சிவகங்கை ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் நேற்று மனு அளித்தார்.

இதையறிந்த ஆட்சியர், லதா, அவரது மகன் கவுதம் பெயரில் புதியதாக, 'எக்ஸ்பிரஸ் ரேஷன் கார்டு' வழங்க, டி.எஸ்.ஓ.,வுக்கு பரிந்துரைத்து, இரண்டு நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவிட்டார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல