ஞாயிறு, 6 மார்ச், 2016

நடிகர் கலாபவன் மணியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

டெல்லி: நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த கலாபவன் மணி நேற்று இரவு மரணம் அடைந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மணியின் மரண செய்தி குறித்த அறிந்த பிரதமர் நரேந்திர மோடி வேதனைப்பட்டு அதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திறமையான நடிகரின் பயணம் பாதியில் முடிந்துவிட்டது. கலாபவன் மணி பன்முகத் திறமை கொண்டவர், பிரபலமானவர். அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. முன்னதாக அவரது அண்ணன் வேலாயுதன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாபவன் மணியின் மரணம் இயற்கை அல்ல என்று அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊரான சாலக்குடியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கலாபவன் மணியின் அண்ணன் வேலாயுதன்(51) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டில் எரிந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிப்பழக்கம் உள்ள கலாபவன் மணி அண்மையில் உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு வரும்போது எல்லாம் மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

என்ன மணி திடீர் என்று இப்படி ஒல்லியாகிவிட்டீர்கள். எப்பொழுது பார்த்தாலும் சோர்ந்து காணப்படுகிறீர்கள் என்று சக நடிகர்கள் கேட்டதற்கு நான் டயட்டில் உள்ளேன் அதான் ஒல்லியாகிவிட்டேன். நான் சோர்வாக எல்லாம் இல்லையே என்று கூறி சிரித்துள்ளார்.

கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ டிரைவராக இருந்து மலையாள திரையுலகில் நுழைந்தவர் கலாபவன் மணி.

தமிழ் சினிமாவால் வெறும் வில்லனாகவும், கோமாளித்தனமான காமெடியனாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட, ஆனால் நிஜத்தில் சகலகலா வல்லவன்.. கலாபவன் மணி.

இவரது திரையுலக வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். வசந்தியும், லட்சுமியும் பின்னே, ஞானும் படத்திற்கு முன்பு, பின்பு என.மலையாளத் திரையுலகில் ஜாம்பவான்களாக கருதப்பட்ட மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவருக்கும் கடும் போட்டியாளராக கலாபவன் மணி பிறப்பெடுத்தது இந்தப் படத்தில்தான்.

1999ம் ஆண்டு வெளியான படம் வசந்தியும், லட்சுமியும். பார்வையற்ற பாடகராக இதில் நடித்திருந்தார் மணி. நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்று சொல்வதுதான் மணியின் திறமைக்கு மரியாதையாக இருக்கும்.

அதுவரை சிறு சிறு வேடங்களில் வந்து போய்க் கொண்டிருந்த மணியை, இந்தப்படம்தான் ஒரு திறமையாளராக தூக்கி நிறுத்தியது. கலாபவன் மணியின் நடிப்பைப் பார்த்து பலரும் மிரண்ட படம் வசந்தியும் லட்சுமியும்.

இப்படத்தில் கலாபவன் மணியுடன் காவேரி, பிரவீனா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த பிரவீனாதான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் தொடரில் தாய் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் கலாபவன் மணியின் நடிப்பு மொழிகளைத் தாண்டியும் பெரும் பாராட்டுப் பெற்றது ஒரு திறமையாளராக மணிக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம் ஆகும். இப்படத்துக்காக தேசிய ஜூரி விருதை வென்றார் மணி. இப்படத்திற்கும் 2 விருதுகள் கிடைத்தன.

பின்னர் இப்படம் தமிழில் விக்ரம் நடிக்க காசி என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் கலாபவன் மணிக்கு ஈடாக நடிக்கவில்லை என்றாலும் கூட தனது பாணியில் அந்த பாத்திரத்துக்கு வலு சேர்த்திருந்தார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் என இப்படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.

கலாபவன் மணி ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல குணச்சித்திர நடிகர், அட்டகாசமான வில்லன், அருமையான காமெடியன், அற்புதமான பாடகர் என பல அவதாரம் கொண்டவர்.

இவரது நாடன் பாடல்கள் அதாவது நாட்டுப் புற பாட்டுகள் கேரளத்தில் மிகப் பிரபலம். அப்படி அட்டகாசமாக பாடுவார் நாட்டுப் புறப் பாடல்களை. இசையமைக்கவும் செய்வார்.

கலாபவன் மணி மறைவு.. மலையாளத்துக்கு மட்டுமல்ல கலையுலகுக்கும் ஒரு இழப்புதான்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல