வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்

பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை. இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், நேற்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எலிசபெத் மகாரணி பிறந்தார்.



இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு கடவுச்சீட்டு இல்லாமல் பயணித்துள்ளதுடன் அதிக காலம் ஆட்சியிலிருந்தும் சாதனை படைத்துள்ளார்.

இராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரை இங்கிலாந்தின் இராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது ஆட்சி காலம் 63 ஆண்டுகள் 216 நாட்கள் ஆகும்.

இராணி விக்டோரியா தான் இதுவரை இங்கிலாந்திலேயே மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமை பெற்று இருந்தார். அந்த சாதனையை தற்போதைய இராணி எலிசபெத் முறியடித்தார்.

இராணி எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஆறாம் ஜோர்ஜ், 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு எலிசபெத், இங்கிலாந்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழா 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்றது.

இதனால், கடந்த ஆண்டில் தனது முப்பாட்டியின் சாதனையான 63 ஆண்டுகள் 216 நாள் ஆட்சி என்ற சாதனையை இராணி எலிசபெத் முறியத்தார்.

சாதனை இராணி எலிசபெத், இங்கிலாந்து நாட்டின் இராணியாக ஆட்சிபீடம் ஏறியதில் விதி செய்த விளையாட்டு என்ன என்பதைப் பார்த்தோமானால்,

இங்கிலாந்து நாட்டின் மன்னராட்சி முறைப்படி, அந்த நாட்டின் மன்னர் அல்லது இராணியின் மூத்த மகன் அடுத்து அரியணை ஏறுவார்.

ஆட்சியில் இருப்பவருக்கு மகன் இல்லை என்றால் ஆட்சிப் பதவி மகளுக்கு சென்றுவிடும். இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், எலிசபெத் மகாராணியின் விடயத்தில் நடந்ததே வேறு.

இங்கிலாந்தை ஆட்சி செய்த 5 ஆம் ஜோர்ஜ் மன்னருக்கு இரண்டு மகன்கள். இவர்களில் மூத்தவர் பெயர் எட்வேர்ட் . இளையவர் பெயர் அல்பர்ட்.


இந்நிலையில், 5 ஆம் ஜோர்ஜ் மன்னரின் மறைவுக்குப் பின்னர், ஏற்கனவே இருந்த இங்கிலாந்து வழக்கப்படி, மூத்தவரான எட்வேர்ட் மன்னராக ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது பரம்பரை தான் அரியணை ஏறி இருக்க வேண்டும்.

அந்த சமயத்தில் தான் விதி விளையாடியது. மன்னர் எட்வேர்ட்டுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்ற விவாகரத்தான ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. முறையற்ற காதலை அரண்மனை நிர்வாகம் ஏற்றுக்கொள்வது இல்லை.

எனவே மன்னர் எட்வர்ட்டுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. காதலுக்காக மன்னர் பதவியைத் துறப்பதா? அல்லது காதலியை கைவிட்டு மன்னராக நீடிப்பதா? என்ற பெரிய கேள்வி எழுந்தது. அப்போது மன்னர் எட்வேர்ட், துணிந்து ஒரு முடிவு செய்தார். எனக்கு மன்னர் பதவி தேவையில்லை. எனக்கு எனது காதலிதான் முக்கியம் என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் அவர் மணி முடியைத் துறந்து, ஆட்சி பீடத்தில் இருந்து இறங்க வேண்டியதாகி விட்டது. அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், அடுத்து மன்னராக பதவி ஏற்கும் வாய்ப்பு, அவரது பரம்பரைக்கு இல்லாமல், 5 ஆம் ஜோர்ஜ் மன்னரின் இளைய மகன் அல்பர்ட்டுக்கு கிடைத்தது. அதாவது, ஒரு காதல் விவகாரத்தால், ஆட்சி முறை என்ற வழித்தடமே அப்போது மாறிவிட்டது.

தற்போதைய மகாராணி எலிசபெத்தின் தந்தை, அல்பர்ட், ஆறாம் ஜோர்ஜ் மன்னராக முடி சூடிக்கொண்டார். மன்னர் ஆறாம் ஜோர்ஜுக்கு இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவர் தான் தற்போதைய மகாராணி எலிசபெத். இளையவர் மார்க்கிரெட்.

மன்னர் ஆறாம் ஜோர்ஜின் மூத்த மகள் என்பதால், எலிசபெத், இங்கிலாந்தின் அடுத்த ராணி ஆகும் வாய்ப்பு உருவானது.

எலிசபெத்தின் பெரியப்பா எட்வேர்ட், தனது காதலியை கைவிட்டு, அரியணையில் தொடர்ந்து வீற்றிருந்தால், எலிசபெத், இங்கிலாந்தின் ராணியாக வந்து இருக்கவே முடியாது. பெரியப்பாவின் காதல் விவகாரத்தால் எலிசபெத், இங்கிலாந்தின் ராணி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இதேவேளை, மகா இராணி எலிசபெத் காலத்தில் இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் முதல் டேவிட் கேமரூன் வரை மொத்தம் 12 பிரதமர்களை அவர் சந்தித்துள்ளார்.

எலிசபெத் உலகம் முழுவதும் 117 நாடுகளில் 1.7 மில்லியன் கிலோமீற்றர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கடவுச்சீட்டு இல்லை.

எலிசபெத்தின் மற்றும் கணவர் பிலிப் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி 68 வருடங்கள் ஆகியுள்ளன.

இதேவேளை, மகாரணியார் பிறந்த ஆடம்பரமான வீடு இரண்டாம் உலகக் போரில் குண்டு மழையில் இடிந்து அழிந்தமை குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல