செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கொள்ளையர்களுக்கு ஓர் அன்பு மடல்

கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அன்பு வணக்கம். கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு; நீதிபரிபாலனத்துக்கு என எழுதிக் களைத்த நிலையில் உங்களுக்குக் கடிதம் எழுவதுதான் ஒரே வழி என்ற முடிவில் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
உங்களின் திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடாநாட்டு மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.



எந்த நேரம் எது நடக்கும் என்று தெரியாத சூழ் நிலையில் நிம்மதியாக உறங்க முடியாத நிலைமை கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.
கொள்ளைச் சம்பவங்களை பொலிஸார் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பியது போதும் என்றாயிற்று.

கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் உள்ளது.

நீதித்துறையும் நிலைமையை சுமுகமாக்க எத் தனையோ உத்தரவுகளை பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவுகள் எந்த விதமான முன்னேற்றத்தையும் தந்ததாகத் தெரியவில்லை.

நீதிபரிபாலனத்தின் உத்தரவை அமுல்படுத்துகின்ற பொறுப்பு பொலிஸாரிடமே இருப்பதால் நிலைமை மோசமாகி வருவதையே உணர முடிகிறது.

ஆகையால்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்ற உங்களுக்கே ஓர் அன்பு மடலை எழுதுவது என்று முடிவு செய்தோம்.

தமிழினத்தின் கடந்த 30ஆண்டுகால வாழ்க்கை என்பது துன்பத்திலும் வேதனையிலும் கடந்து போகிறது.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்பான தமிழ் மக்களின் வாழ்வு திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை உணர முடியும். போதைவஸ்து, மதுபாவனை, கொள்ளை, திருட்டு என்பவற்றின் ஊடாக இன்று யாழ். குடாநாட்டு மக்கள் நடுங்கிப்போயுள்ளனர்.

அதிலும் கொள்ளைச் சம்பவத்தில் நீங்கள் நட த்துகின்ற வாள்வெட்டு, தாக்குதல்கள் உயிருக்கே உலைவைத்து விடுகின்றன. மற்றையவர்களை கொலை செய்து அவர்களின் உழைப்பை கொள் ளையடித்து நீங்கள் வாழ முடியும் என்று நினைத்தால் அது மிகப்பெரும் தவறாகும்.

மக்கள் சமூகத்துடன் நீங்கள் இணங்கி வாழ முடியாமல் போனமைக்கு பல காரணங்கள் இருக் கலாம். ஆனாலும் உழைத்து வாழ்வதில் இருக்கக் கூடிய நிம்மதியை நீங்கள் எந்த இடத்திலும் பெற்று விட மாட்டீர்கள்.

நீங்களும் உங்கள் குடும்பங்களும் பிள்ளைகளும் நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைப்பீர்களாயின் மற்றவர்களும் பயமற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.

ஆகையால் யுத்தத்தால் நொந்து கெட்டுள்ள தமிழினத்தை நீங்களும் பயமுறுத்தி; இருப்பதையும் எடுத்து விட்டால் அந்தக் குடும்பங்களின் நிலைமை என்னாகும் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்; மனம் திருந்தி வாழுங்கள்.

இந்த உலகில் கொள்ளையர்களுக்கே ஓர் அன்பு மடல் எழுதிய வரலாறு நம்முடையதாக இருந்தாலும் அதிகாரம் உள்ள இன்னொரு இனத்தவரிடம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கேட்பதை விட, எங்களவர்களைப் பார்த்து மனம் திருந்தி நடவுங்கள் மக்காள்.உங்கள் திருத்தம் தமிழினத்தை நிம்மதிப்படுத்தும் என்று கேட்பதில் தவறில்லையல்லவா?

ஆகையால் இந்த மடல் ஒரு மாற்றத்தை தந்ததாக அமைய உதவுங்கள்.

வலம்புரி இணையம்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல