வியாழன், 7 ஏப்ரல், 2016

தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“: “கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்!

இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தியும் ஏன் அது தோல்வியில் முடிந்தது? இவ்வளவு இழப்புகளும் ஏன் மதிப்பற்றுப் போயின? போராட்டத்தில் என்ன நடந்தது? யார் இதற்கெல்லாம் பொறுப்பாளிகள்?

மிகக் கடினமான ஒரு போராட்டத்துக்காக அதிகளவில் இழப்புகளைச் சந்தித்த மக்கள், ஏன் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பதிலாக தோல்வியையும் துயரத்தையும் பெற்றார்கள்?



உண்மையில் என்ன நடந்தது? என்ற விசயங்களைத் தன்னுடைய அறிதல்களின் வழியாகவும், தன்னுடைய அனுபவங்களின் துணைகொண்டும் விளக்க முற்படுகிறது.

அவரே சொல்வதைப்போல, “இது எமது போராட்டத்தின் முழுமையான வரலாறு அல்ல. …. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் என் தொண்டைக்குள் அடைத்துக் கிடக்கும் உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

ஒரு இனத்தின் அரசியல் அபிலாஷைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட எமது போராட்டமானது, இலட்சோபலட்சம் உயிர்களின் தியாகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது.

இறுதியில் அதன் போக்கிடம் ஏனிப்படிப் புச்சியமானது? உலகமே அதிர்ந்து போய்க் கேட்டுக்கொண்ட கேள்வி இது“ என்பதற்கு தன்னளவில் விடைகாணுவதற்கும் அந்த விடையை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் தமிழினி முயன்றிருக்கிறார்.

இப்பொழுது உருவாகியிருக்கும் சர்ச்சை நாம் மேலே பார்த்தவாறு “இந்தப் புத்தகம் உண்மையில்லை“ எனவும் “இடைச்செருகல்கள் செய்யப்பட்டுள்ளன“ என்றும் “புலிகளின் மீது அபகீர்த்தியை உண்டாக்குவதற்காக தமிழினியின் பெயரில் இந்தப் புத்தகத்தில் சில விசயங்கள் வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளன“ எனவும் சொல்லப்பட்டதிலிருந்தே உருவானது.

இதற்கெல்லாம் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் துரதிருஷ்டமாக அமைந்து விட்டது.

இந்தப் புத்தகம் இலங்கையில் ஒரு பதிப்பாகவும் இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் இன்னொரு பதிப்பாகவும் சமகாலத்தில் வெளியானது.

இரண்டு பதிப்பிலும் புத்தகத்தின் உள்ளடக்கம் ஒன்றாகவே உள்ளது. அட்டைப்படத்தில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்திலுள்ள அட்டைப்படத்தின் பின் பக்கமாக உள்ள குறிப்பை எழுதியவர் தமிழினி என உணரக்கூடியதாக அமைந்த குறிப்பானது பிரேமா ரேவதி என்பவரால் எழுதப்பட்டது.

அதைத் தன்னுடைய புத்தகத்தில் பின்னட்டைக்குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார்.

ஆனால் தமிழினி இறந்த பின்னர் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதால் இதைப்பற்றிய சரியான விவரத்துடன் பதிப்புக்குக் கொடுக்க முடியவில்லை அவருடைய கணவரால்.

இதனால் அந்தக் குறிப்பு தமிழினியின் பெயரிலேயே அச்சாகி விட்டது. அந்தக் குறிப்புக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.

பதிலாக அந்தக் குறிப்பு பெண்போராளிப் புலிப்பெண்களைப்பற்றிய வரலாற்று நோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விமர்சனத்தின் முக்கியமான பகுதி. அதைத் தன்னுடைய புத்தத்தின் – சிந்தனையின் பொருத்தம் கருதி தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார்.

இதைப் பிரேமா ரேவதி சுட்டிக்காட்டியதை அடுத்து இதைப்பற்றிய விளக்கத்தை ஜெயக்குமாரனும் காலச்சுவடு பதிப்பகத்தின் இயக்குநர் கண்ணனும் அளித்திருக்கிறார்கள்.

இப்படி நேர்ந்த தவற்றினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, புத்தகத்தையும் புத்தகத்தை வெளியிட்ட கணவரையும் பதிப்பாளரையும் பின்னி எடுக்க முற்படுகிறார்கள் சிலர்.

உண்மையில் என்ன நடந்தது என்ற விளக்கத்தை உரியவர்கள் பொதுவெளியில் அளித்த பின்னும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையிலிருந்தே ஏற்படுகிறது. தாங்கள் விரும்பும் ஒன்றை, அது பொய்யாக இருந்தாலும் அதை நிறுவி விடவே முயற்சிக்கின்றனர்.

இவர்கள் மலத்தை அமுது என்றெண்ணி அதையே உண்டு வாழ விரும்புகிறார்கள். விசத்தை அமுதமென்று ஏற்றுக்கொள்கிறார்கள். இது வரலாற்றுக்கும் வாழ்வுக்கும் நேரெதிரானதாகும்.

இது ஏன்? உண்மைகளைப் பேசுவது தமது அரசியல் இருப்புக்கு பாதகமானது என்று கருதுவதன் விளைவே இது.

நடந்தவைகளை எழுதுவதும், பேசுவதும் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பது பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நடந்தவைகளைப் பற்றி எழுதுவதையும், பேசுவதையும் விவாதிப்பதையும் தடுப்பதன் மூலம் தாம் எதிர்காலத்தில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு துரோகம் செய்கின்றோம் என்பதைப் பற்றி இந்தத் தரப்பு கவலைப்படவில்லை.

பதிலாகத் தமது அரசியல் இருப்புப் பற்றி மட்டுமே அது கவலைப்படுகிறது. இதனால் உண்மைகளையும் படிப்பினைகளையும் எழுதுபவர்களை எந்த அளவிற்கும் கேவலப்படுத்துவதற்கு அது தயாராக இருக்கிறது.

எழுதுபவர்களையும் உண்மைகளை உரைப்போரையும் அது துரோகி என்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், அவர்கள் அதை எழுதவே இல்லை என்றும் சொல்லி விடுகிறது.

ஆனால், முப்பது ஆண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டம் மிகப் பெரிய அழிவுகளை தந்து விட்டதன் பின்னர், நடந்த நிகழ்வுகள், சரி மற்றும் தவறுகள், அறம் சார்ந்தவை, சாரதவை பற்றிய ஆழமான கற்கைகளை மேற்கொள்ளாமல் தீவிரம் மிக்க போராட்டங்களில் தமிழ் மக்கள் இறங்கப் போவது இல்லை.

போராட்டங்களைச் சரியாக நடத்தவும் முடியாது. படிப்பினைகளையும் உண்மைகளையும் திறந்த மனதுடன் வரவேற்கும்போதே வரலாறும் நிகழ்காலமும் செழுமை அடையும். அந்தச் செழுமையிலிருந்தே எதிர்காலத்தைப் பலமாக அமைக்க முடியும்.

முப்பது ஆண்டு காலப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள், நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று எல்லோரிடம் இருந்தும் தமிழ் மக்கள் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் வெளிப்படையாக நடந்தவைகளை எழுத வேண்டும், பேச வேண்டும்.அதன் அடிப்படையில் நடந்தவைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்தி, அதில் இருந்து பெறுகின்ற கற்கைகளின் அடிப்படையிலே தமது அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தயாராவார்கள் என்பதுதான் அது.

அதுதான் அவசியமானதும் கூட. இதற்கான அடிப்படையாகவே தன் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு போராட்டத்தை மறுபார்வை செய்யும் தமிழினியின் பங்களிப்பு முக்கியமாகிறது. தமிழினியைப் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைய வேண்டும்.

தமிழினி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். பரந்தன் இந்து ம.வியில் கல்வி கற்றவர். பாடசாலைக் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்.

ஆரம்பத்தில் போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களையும் கொண்டவர். தமிழினியின் குடும்பம் மிக வறிய பொருளாதார நிலையைக் கொண்டது. அவருடைய இறுதி நிகழ்வுகளை நடத்தக் கூடிய வீட்டு வசதியைக்கூட கொண்டிருக்காத குடும்பம்.

இதேவேளை தமிழினியைப்போல அவருடைய இன்னொரு தங்கையும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியாகப் போராளி போர்க்களத்தில் சாவினைத் தழுவிக் கொண்டவர்.

இப்படியான பங்களிப்பைக் கொண்ட தமிழினி தான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலேயே இந்தப் புத்தத்தை எழுதித் தந்திருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த கொடையாகும்.

இந்தப் புத்தகம் தமிழ்ச்சூழலில் எதிர்மறையான அடையாளத்தையும் பிம்பத்தையும் தனக்குத் தரும் என்று அவர் தெரிந்தே வைத்திருந்தார்.

இதைப்பற்றிக் கூட அவர் தன்னுடன் உரையாடியவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், போராளியாக இருந்தபோது அவர் எப்படி ஓர்மமாகவும் விடுதலையைப் பெற வேண்டும் என்பதில் விசுவாசமாகவும் இருந்தாரோ அதே அளவுக்கு, ஓர்மமாகவும் துணிச்சலாகவும் இருந்து கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இது அவரை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அடையாளம் காண வைக்கிறது.

இதனால் தமிழினியின் இந்த நூல் தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றுக்கும் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் முக்கியமான ஒரு பங்களிப்பாகும்.

ஆனால் இதை உய்த்துணரக் கூடிய நிலையில் தமிழ் அறிவுச் சூழலும் இல்லை. தமிழ் அரசியற் சூழலும் இல்லை. ஒரு காலம் மகிமைக்குரிய போராளியாக கொண்டாடப்பட்ட தமிழினியையும் அவர் முன்னிறுத்தும் அரசியல் உண்மைகளையும் காண மறுக்கும் தமிழ் அரசியற் சூழலையும் தமிழ் அறிவுச் சூழலையும் என்னவென்று சொல்வது?

தமிழ் அறிவியலும் அரசியலும் இன்னும் தடுமாற்றங்களிலும் பின்னோக்கிய திசையிலும் இருப்பதன் விளைவுகளே இதுவாகும்.

இந்த நூலைப்படிப்பதற்கு ஒவ்வொருவரும் பெரிய ஆர்வத்தோடிருக்கிறார்கள். பலரும் இந்தப் புத்தகத்தைத் தேடித்திரிகிறார்கள்.

ஆனால் இதை வெளிப்படையாகச் செய்யும் துணிச்சல் பலருக்கும் இல்லை. இவர்கள் கள்ளத்தனமாகவே படிக்கவும் அறியவும் விரும்புகிறார்கள்.

இன்பத்தை ருசிக்கவும் அனுபவிக்கவும் கள்ள உறவை வைத்துக் கொள்ளும் கூட்டம் அதைப் பகிரங்க வெளியில் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதன் தொடர்ச்சியே இது. இது எவ்வளவு கேவலமானது? உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற மனம் எப்படியெல்லாம் நாடமாடுகிறது என்று பார்த்தீர்களா?

ஒரு பக்கத்தில் தமிழினியின் புத்தகத்தைச் சந்தேகிக்கிறது. மறுபக்கத்தில் அதை அறிய விரும்புகிறது. இது தமிழினிக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும் அநீதியல்ல.

முன்னர் ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, அற்புதன், டி.பி.எஸ். ஜெயராஜ், தராகி, சி. புஸ்பராஜா, சுகன், கற்சுறா போன்றோருக்கும் பின்னர், சாத்திரி எழுதிய ஆயுத எழுத்துக்கும் நிலாந்தனின் எழுத்துகளுக்கும் கருணாகரனின் கவிதைகளுக்கும் யோ. கர்ணனின் கதைகளுக்கும் தமிழ்க்கவியின் ஊழிக்காலம் நாவலுக்கும் நடந்ததே. இப்பொழுது தமிழினிக்கு.

ஆனால், பகுதி பகுதியாகப் பல உண்மைகள் வெளியாகிக் கொண்டேயிருக்கும். இதை யாராலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.

’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல