புதன், 27 ஏப்ரல், 2016

வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்யப்படுமா?

வாட்ஸ் அப் செயலிதான் இன்று பன்னாட்டளவில், உடனடியாக செய்திகளை, போட்டோக்களை அனுப்ப அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. அண்மையில், இதில் பதிந்து அனுப்பப்படும் தகவல்கள், முழுமையாக 'என்கிரிப்ட்' (தரவுமுறையினை மறைக்கப்பட்ட குறியீடாக மாற்றி அனுப்பும் முறை) செய்யப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தபோது, பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தியாவில் இது அனுமதிக்கப்படாது என்றே தெரிகிறது.



2007 ஆம் ஆண்டு, இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை, எந்த தனியார் நிறுவனமும், 40 பிட்களுக்கு மேலான அளவி, தரவு மறைக் குறியீட்டு முறையைக் கையாளக் கூடாது என விதி ஒன்றினை அறிவித்தது. நாட்டின் பாதுகாப்பு சார்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டது. அரசு அல்லாத நிறுவனங்கள், இது போல 40 பிட்களுக்கு மேலான மறைக் குறியீட்டினை அமைக்க வேண்டும் எனில், அரசின் சிறப்பு அனுமதியினை வாங்கியாக வேண்டும். வாட்ஸ் அப் அண்மையில் அறிவித்திருப்பது, 256 பிட் தரவு மறைக் குறியீட்டு முறையாகும். எனவே, அரசு விதிகளின் படி, இது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால், ஒரு தனியார் நிறுவனம், தான் 40 பிட்களுக்கு மேலான தரவு மறைக் குறியீட்டினைப் பயன்படுத்துகையில், அதனைத் திறந்து தரவுகளைக் காண வழி செய்திடும் திறப்பு வழிக்கான ”சாவியை” (Key File) அரசிடம் கொடுத்தாக வேண்டும்.

ஆனால், இந்த கீ வழங்கும் முறையினால், அரசு ஒன்றும் செய்திட முடியாது என வாட்ஸ் அப் நிறுவனத்திற்கான புரோகிராமர்கள் தெரிவித்துள்ளனர். புரோகிராமினை வடிவமைத்தவர்களே கூட, என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களைக் காண இயலாது என்று கூறுகின்றனர். வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்புபவர்களும், பெறுபவர்களும் மட்டுமே அவற்றைப் பெற்று காண இயலும். எனவே, பிரித்தறியும் செயலினை, கீ மூலம் அரசும் கூட மேற்கொள்ள முடியாது.

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு, இந்தியாவில் பெரிய சந்தை ஏற்பட்டுள்ளது. உலக அளவில், வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களில், 10% பேர் இந்தியாவில் இயங்குகின்றனர். இந்தியாவில், இணையம் பயன்படுத்துவோரில், 50% பேர், தினந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு மாதத்தில், இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாகும்.

அரசு விதிமுறையை அறிவித்திருந்தாலும், இன்னும் விதிமுறை மீறல் மீதான நடவடிக்கையினைத் தொடங்கவில்லை. ஆனால், அதற்காக வாட்ஸ் அப் செயலியை அப்படியே அரசு விட்டு வைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே, 2011 ஆம் ஆண்டில், இதே போல ஒரு பிரச்னையில், பிளாக் பெரி நிறுவனத்தின் தரவு மறைக் குறியீட்டுத் திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல், அதனை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு. பின்னர், மும்பையில், பிளாக் பெரி நிறுவனம் தன் சர்வர் ஒன்றை இந்தியாவிற்கென அமைத்து, அதனை அணுகுவதற்கான அனுமதியை அரசுக்குக் கொடுத்தது. அதே போல, திடீரென வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சட்ட விதி மீறல் குற்றச் சாட்டு அனுப்பப்படலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல