சனி, 31 டிசம்பர், 2016

பாடகர் ஜேசுதாஸுக்கு பாத பூஜை செய்த எஸ்பி பாலசுப்பிரமணியம்!

இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன் விழா காணும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் மிகவும் மதிக்கும் கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாத பூஜை செய்தார். கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.



இவர் தமிழில் 'ஹோட்டல் ரம்பா' திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார். பின்னர் சாந்தி நிலையம் படத்தில் 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலைப் பாடினார். ஆனால் அமரர் எம்ஜிஆரின் அடிமைப் பெண் படத்தில் அவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல்தான் எஸ்பிபியை பிரபலமாக்கியது.

தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார் எஸ்பிபி.

பின்னர் எஸ்பிபி பேசுகையில், "இசை உலகில் 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் என் இசை முன்னோடிகள் அனைவருக்கு மரியாதையை செலுத்திக் கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால், அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம். என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

என் மனதுக்கு மிகவும் பிடித்தவர் பாடகர் முகம்மது ரஃபி. அவருக்குப் பின் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அண்ணன் ஜேசுதாஸ். இந்த தருணத்தில் அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசையை ஏற்றுக் கொண்டு அவர் வந்ததற்கு நன்றி. இந்தக் கடனை எந்த ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது. என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும் இருப்பதாக நினைக்கவில்லை.

இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள் வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.

இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும்," என்றார் எஸ்.பி.பி.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல