வியாழன், 13 ஏப்ரல், 2017

ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு.


■ உங்கள் கைபையில் மிளகாய் தூள், பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

■ ஏய் ஆட்டோ என்றோ நீ, வா, போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர்.
(இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). மாறாக

அண்ணா, தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ அழைக்கவும்.
(இதனால் உங்கள் மீது நல்ல அபிப்பிராயமும் உடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் ஏற்படலாம்)

■ ஆட்டோவில் ஏறும் முன் நாம் போகும் இடத்தை தெளிவாக கூறி அதற்கான வாடகை பேசி கொள்ள வேண்டும்.

(இதனால் பிறகு வாடகை தகராறு ஏற்படாமல் தவிர்க்கலாம்).

■ நீங்கள் ஏறும் முன் ஆட்டோவின் பெயரையோ அல்லது பதிவு நம்பரையோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

(இதனால் நாம் ஏதாவது பொருளை விட்டு சென்றால் பிறகு அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து கண்டு பிடித்துவிடலாம்)

■ ஆட்டோவில் ஏறிய பிறகு ஓட்டுனரின் காது கேட்கும் படி சத்தமாக உங்கள் உறவினருக்கோ (உறவினர் இல்லாத பட்சத்தில் சும்மா டயல் பன்னாமல்) போனில் “நான் இந்த பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறிவிட்டேன் இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடுவேன்” என்று கூறவும்.

■ பயனம் செய்யும் போது ஓட்டுனரிடம் குழைந்தோ அல்லது தேவையற்ற விடயமோ அல்லது ஏதும் பேசாமல் இருப்பது நல்லது.

■ ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல் நடு பகுதியில் இருக்கவேண்டும்.

■ உங்கள் அரைகுறை ஆடையே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆதலால் ஆடைகள் ஒழுங்கான முறையில் உடுத்திகொள்ளுங்கள்.

■ புடவை உடுத்திய பெண்கள் முந்தானையை சரிசெய்து காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்கவேண்டும்.
(ஏனெனில் ஓட்டுனர் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வாகனத்தை பார்க்க முயற்சிக்கும் போது புடவை காற்றில் பறந்தால் அவரின் கவனம் திசைதிருப்பும் அதுவே மிக பெரிய பிரச்சினை ஆகிவிடும்.

■ நீங்கள் போய் சேரும் வரை உங்கள் கவனம் எப்போதும் ஓட்டுனரை நோக்கியே இருக்கவேண்டும்.அவரின் சிறு சிறு நடவடிக்கை கண்காணிக்க வேண்டும்.

■ முதல் தடவையாக போகும்போது நமக்கு அதன் வழி தெரியாது ஆதலால் செல்போன் எடுத்து நான் இந்த இடம் வந்தாகி விட்டது என்று ஓட்டுனரின் காதில் விழும்படி உறவினரிடம் பேச வேண்டும் அல்லது பேசுவது போல் பாவலா காட்டவேண்டும்.

■ நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தவறான வழியில் போகிறது என்றால் பதட்டபடாமல் நிதானமாக ஏன் என்று காரணம் கேட்க வேண்டும். ஓட்டுனர் கூறும் காரணம் (சாலை வேலை, சாலை மூடல்) சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தாலோ அல்லது வராவிட்டாலோ மறுபடியும் செல்போன் எடுத்து இந்த ரூட் சரியில்லை வேறு வழியாக வருகிறேன் என்று உறவினருக்கு பேசுவது போல் பாவலா காட்டவேண்டும்.

■ அதையும் மீறி தவறான பாதையில் போகிறது என்றால் எந்த காரணம் கொண்டும் பதட்டபடாமல் சமயோஜித புத்தியை கொண்டு சில வழிமுறையை கையாளவேண்டும்.

■ தங்கள் இருக்கையின் கீழ்தான் பெட்ரோல் திறக்க, மூட, ரிசர்வ் செய்ய பைக்கில் இருப்பது போல் “நாப்” இருக்கும் (பார்க்க படம்-1) அதை அடைத்து விட்டால் போதும் சிறிது தூரம் சென்றவுடன் அதுவே தானாகவே ஆஃப்பாகிவிடும். மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்குள் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

■ அது டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுனரின் வலது பக்கத்தில் சிகப்பு கலரில் ஆஃப் சோக் உள்ளது (பார்க்க படம் -2) அதை இழுத்தால் ஆஃப்பாகிவிடும்.

■ சில ஆட்டோக்களில் ஓட்டுனரின் முன் பகுதியில் சிகப்பு கலரில் லிவர் உள்ளது (பார்க்க படம் -3) அதை இழுத்தால் ஆஃப்பாகி விடும்.

■ இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால் உங்கள் துப்பட்டாவோ புடவையின் முந்தானையோ கொண்டு ஓட்டுனரின் கழுத்தில் போட்டு பின்னால் இழுத்தால் நிச்சயமாக ஆட்டோவை நிறுத்துவது அவருக்கு பாதுகாப்பு இல்லையெனில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழும் வாய்ப்புள்ளது.

■ அவ்வாறு ஆட்டோ கவிழ போகும் என்று தெரிந்தால் தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம். நடு பகுதியில் இறுக்கமாக பிடித்து கொண்டு இருங்கள். அடி ஒன்றும் படாது காயங்கள் இல்லாமல் உங்களால் எழமுடியும்.
இறுதியாக…

இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானவர்கள் படித்தவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் குடும்ப வறுமை காரனமாகவும் இத்தொழிலுக்கு வருவதால் பெண்களிடம் வரம்பு மீறாமல் கண்ணியமாக நடக்கின்றனர்.
மேலும் போலிசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால் மது அருந்தும் ஓட்டுனர்கூட பணி நேரத்தில் அருந்துவதில்லை.
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஓட்டுனரும் குற்றவாளி இல்லை.

அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. உங்களை நம்பி தான் அவர்கள் வாழுகிறார்கள்.

உங்களுக்காகவே இந்தப் பதிவு
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல