செவ்வாய், 30 மே, 2017

மாட்டிறைச்சி தடை: ஒருங்கிணைந்த தென் இந்தியா கோரிக்கையை எழுப்பிய டிவிட்டர்வாசிகள்

நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள சூழலில், இதனை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் சமூகவலைதளத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.


தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 'திராவிட நாடு' மற்றும் யுஎஸ்எஸ்ஐ (யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா) என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன:
 டிவிட்டரில் வைரலான யுஎஸ்எஸ்ஐ ஹேஷ்டேக்

ஏரளாமான கேரளவாசிகள் டிவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டதிருத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த டிவிட்டர்வாசிகள் மலையாளிகளையும் தனி நாடு கோஷம் போட வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை என்று கூறியுள்ளனர்.

கேரளவாசிகள் மட்டுமல்ல பல தமிழர்களும் இந்த ஹேஷ்டேக்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் இந்த கோரிக்கைகள் குறித்து நகைச்சுவையாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கேரளவாசிகள் சமூக வலைத்தளத்தில் தீவிரமாக தெரிவித்து வரும் இக்கருத்துக்கள் குறித்து பிபிசி தமிழிடம் உரையாடிய மலையாள பத்திரிக்கையாளர் சைஃபுதின் கூறுகையில், ''கேரளாவில் இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரும் விரும்பி உண்பது மாட்டிறைச்சியாகும். இது மலையாளிகளின் வாழ்வில், கலாசாரத்தில் கலந்து விட்ட ஒன்று'' என்று தெரிவித்தார்.

''இதனை தடுப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் இங்கு யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதுவே கேரளவாசிகள் 'திராவிட நாடு' மற்றும் 'யுஎஸ்எஸ்ஐ' டிவிட்டர் ஹேஷ்டேக்களில் தீவிரமாக இருப்பதற்கு காரணமாகும். சங்பரிவார் அமைப்புகள் கேரள மக்களின், தென் இந்திய மக்களின் கலாசாரத்தை எளிதாக எடுத்துக் கொள்வதை இங்குள்ள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.

எங்களுக்கு வட இந்திய தலைவர்கள் வேண்டாம். தனி தேசம் வேண்டும் என்பது போன்ற கோபக் குரல்களும் டிவிட்டரில் ஒலிக்கின்றன.

 'தனி தேசம் வேண்டும்'

தமிழகமே மறந்து விட்ட திராவிட நாடு கொள்கையை கேரளம் இப்போது நினைவுபடுத்துகின்றது என்று இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 சுப. வீரபாண்டியன் விடுத்த டிவிட்டர் செய்தி

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதைத் தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் குறித்தும், சமூக வலைத்தளத்தில் எழுந்த கோபக் குரல்கள் குறித்தும் பிபிசி தமிழிடம் உரையாடிய மலையாள பத்திகையாளர் கங்காதரன் கூறுகையில், ''கேரளாவில் இது போன்ற தனி நாடு கோரிக்கைகள் எழுவது அரிது. கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை தடை போன்ற சங்பரிவார் அமைப்புகளின் செயல்கள் மக்களை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்துக்களும் கேரளாவில் மாட்டிறைச்சியை உண்பது வழக்கம். நானும் ஒரு இந்துதான். எங்கள் குடும்பத்திலும் பல ஆண்டுகளாக மாட்டிறைச்சி உண்டு வருகிறோம் என்று தெரிவித்த கங்காதரன், இத்தடையால் கேரள மக்கள் மாட்டிறைச்சியை உண்பதை கைவிடப்போவதில்லை என்றும் கூறினார்.

அதே வேளையில், திராவிட நாடு என்பது வேலையில்லாத சில கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யும் வீண் வேலை என்றும், திராவிட நாடு போன்ற கோஷங்களால் தாங்கள் அவமானம் அடைவதாகவும் ஓரிருவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 திராவிட நாடு கோஷத்துக்கு எதிரான டிவிட்டர் கருத்து

பொதுவாக தேசிய பார்வையிலிருந்து விலகி தனி நாடு கோஷத்தை எடுத்தறியாத கேரளவாசிகள், திராவிடநாடு கோஷத்தையும் , ஒருங்கிணைந்த தென் இந்தியா கோஷத்தையும் சமூகவலைத்தளத்தில் எடுத்துரைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல