செவ்வாய், 6 ஜூன், 2017

ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண் – பதறவைக்கும் சி.சி.டி.வி காணொளி..

இந்தியா – மும்பை – குர்லா ரயில் நிலையத்தில் ‘ஹெட்போன்’ மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடந்த இளம்பெண் ஒருவர் ரயில் மோதியும் தப்பியுள்ளார்.

இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.



19 வயதான இளம்பெண் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

தோழியை பார்ப்பதற்காக குர்லா ரயில் நிலையத்திற்கு மின்சார ரயிலில் வந்து இறங்கிய குறித்த பெண் பின்னர் 7-ம் எண் பிளாட்பாரத்திற்கு நடைமேம்பாலம் வழியாக செல்ல சோம்பல்பட்டு தண்டவாளத்தில் இறங்கினார்.

காதில் ‘ஹெட்போனை’ மாட்டிக்கொண்டு, தான் சந்திக்க செல்லும் தோழியுடன் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் 7-ம் எண் பிளாட்பாரத்தையொட்டி உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

தோழியுடன் பேசிக்கொண்டு சென்ற மும்முரத்தில் குறித்த பெண் ரயில் வருவதை கவனிக்கவில்லை. ரயில் சத்தம் எழுப்பியதும் அவர் காதில் விழவில்லை.

ரயில் தன்னை நெருங்கியபோது தான் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்த குறித்த பெண் பிளாட்பாரத்தை நோக்கி ஓட்டம் பிடித்தார்.

பதற்றத்தில் பிளாட்பாரத்தில் ஏற முடியாமல் தவித்தார். ரயில் நெருங்கியதை பார்த்து பீதியில் அலறிய அவர், செய்வதறியாது ரயிலை நிறுத்தும் முயற்சியில் என்ஜினை நோக்கி ஓடினார்.

இனி ரயில் தன் மீது மோதுவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் நொடிப்பொழுதில் திரும்பி நின்று கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையால் தலையை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் நின்றார்.

அப்போது சரக்கு ரயில் என்ஜின் குறித்த பெண் மீது மோதியது. இதில் நிலைகுலைந்து அந்தப் பெண் தண்டவாளத்தில் குப்புற விழுந்தார். என்ஜினை அடுத்து ஒரு ரயில் பெட்டியும் அவரை கடந்து சென்றது. பின்னர் ரயிலும் நின்றது.

இந்த திகில் காட்சி பிளாட்பாரத்தில் நின்ற பயணிகளின் நெஞ்சை பதை, பதைக்க செய்து விட்டது.

அந்த பெண் ரயில் மோதி இறந்து விட்டதாகவே அனைவரும் கருதினார்கள். ஆனால் அதிசயமாக அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டார்.

பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தண்டவாளத்தில் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இளம்பெண் ஓடியதை பார்த்து சரக்கு ரயில் என்ஜின் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்த முயற்சித்து உள்ளார்.

நிற்கும் முன் குறைந்த வேகத்தில் தான் அப்பெண் மீது ரயில் மோதியதும் தெரியவந்தது.

இதனால் தான் அந்தப் பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பியதும் தெரியவந்தது.

ஆனாலும் அவர் உயிர் தப்பியது அதிர்ஷ்டத்தின் பலனே என்று விபத்தை கண்கூடாக பார்த்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலவீனமானவர்கள் இந்த காணொளியை பார்ப்பதை தவிர்க்கவும்..

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல