வியாழன், 28 செப்டம்பர், 2017

‘கிழவா ரெடியா’என்று எம்.ஜி.ஆரை கிண்டல் செய்த திரைப்பிரபலம்!

நகைச்சுவைக் கலைஞர்களுக்கான புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் நடிக்க வேண்டுமானால் அழகான முகம் இருக்க வேண்டும். அழகு தான் பிரதானம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மெல்லிய உருவத்துடன் நுழைந்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார் அவர். இன்றுவரை ரசிகர்கள் மனதில் வாழும் நடிகர் நாகேஷ் அவர்களின் சில சுவாரஸ்ய தகவல்கள்....



அப்பா ரயில்வே மாஸ்டர். ஊர் ஊராக சுற்றும் வேலை அம்மாவுடன் தாராபுரத்தில் வாழ்ந்தார் நாகேஷ். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் நாகேஷ். வீட்டில் செல்லமாக குண்டப்பா என்று அழைக்கப்படுகிறார். சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மீதும் நடிப்பின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். மேடை நாடகங்களில் எல்லாம் இவரது நடிப்புத் திறமையை காண முடியும். இளவயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதிராபாத்துக்கு வந்துவிட்டார் அங்கே ரேடியோ கடை, ஊறுகாய் கடையில் எடுபிடி வேலை, மில்லில் வேலை என பல வேலைகள் பார்த்திருக்கிறார்.

எம்மதமும் சம்மதம் :

ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களுக்கும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய முதல் திரைப்படமான தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கின் போது, நாகேஷ் சரியாக நடிக்கவில்லை என்று கண்டித்திருக்கிறார்கள். இதனை உடன் நடித்துக் கொண்டிருந்த எம். ஆர்.ராதாவிடம் சொல்லியிருக்கிறார்.

உடனே அவர், மத்தவன் எல்லாம் நடிகன் நீ மட்டும் தான் கலைஞன் கவலைப்படாம நடி... என்று சொல்லி தேற்றினாராம்!

திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். ‘கிழவா ரெடியா' என்று எம்.ஜி.ஆரை கேலி செய்து தப்பி வந்த ஒரே நடிகர் நாகேஷ்.

முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!.

கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு, நகைச்சுவையில் மட்டுமல்ல 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் அவ்வை சண்முகி திரைப்படத்தில் மேக்கப் மேன் என்று வெளுத்துக்கட்டியவர்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, தனுஷ் என பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்ட இக்கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது.

தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லை.

நாகேஷ் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலம் அது. மூன்று வருடத்தில் 500 படங்கள் என வரிசையாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அம்மா, உடல்நலம் சரியில்லாது இறந்து விட இறந்த 3 நாட்களாகியும் நாகேஷை தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

வேறு வழியின்றி நாகேஷின் மாமாவே கொள்ளி வைத்திருக்கிறார்.

ஒரு முறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம் உங்களுக்கு ஹீரோ மாதிரியான பெர்ஸ்னாலிட்டி எல்லாம் இல்லையே என்றிருக்கிறார் அதற்கு பதில் சொன்ன நாகேஷ், உங்கள் வீட்ல ஆட்டுக்கல்லை நன்றாக அரைக்க கொத்து வைப்பார்கள் தானே

அதைப்போலவே ஆண்டவன் அம்மை என்கிற உளியைக் கொண்டு முகம் முழுக்க இப்பிடி செஞ்சுட்டாரு. அதனால தான் இட்லின்ற நடிப்பு பிராமதமா வருது என்று சொல்ல தலை குனிந்து கொண்டாராம் அவர்.

எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சொற்களின் முதல் ஒலியை மட்டும் தவறாக மாற்றி மாற்றி உச்சரித்து நடித்திருப்பார். இதனை ஆங்கிலத்தில் ஸ்பூனரிசம் (spoonerism)என்று சொல்வார்கள். தமிழ் திரைப்படங்களில் ஸ்பூனரிசம் பேசி நடித்த ஒரே நடிகர் நாகேஷ்.

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் குறுநாவலை திரைப்படமாக்க விரும்பிய இயக்குநர் ஸ்ரீதர் அதற்கான அனுமதியை கேட்டபொழுது ஜெயகாந்தன் மறுத்துவிட்டார். பின்னர், அந்த கதையில் வரும் திருட்டுமுழி ஜோசப் என்ற கதாப்பாத்திரத்துக்கு நகேஷை தேர்வு செய்து படப்பிடிப்பையும் தொடங்கி வைத்திருக்கிறார்.

மர்ம மரணம் :

மனைவி ரெஜினாவின் சகோதரன் ஒருவனின் மர்ம மரணம் அவரது குடும்பத்தில் பெரும் புயலையே ஏற்படுத்திவிட்டது. நாகேஷின் மனைவி உட்பட சில குடும்ப உறுப்பினர்கள் போலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது நாகேஷ் எந்த சமயத்திலும் கைதாவார் என்ற வதந்தி பரவிக்கொண்டிருந்தது.

அதனால் ஏ.பி. நாகராஜன் தனது தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் ஒத்திவைக்கத் தீர்மானித்தார். காரணம், அந்த படத்தில் நாகேஷ் நடிக்கும் பாத்திரத்திற்கு அவரைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தான்.

நாகேஷ் மீது கமலுக்கு தனி மரியாதை இருந்தது. இதனாலோ என்னவோ நாகேஷின் கடைசிப் படமாக கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரமாக அமைந்துவிட்டது.

'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honored-டா கமல்!'என்றிருக்கிறார்.

கமலைப் போலவே நாகேஷின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ரஜினி நாகேஷ் இறந்த பிறகு தன்னுடைய கோச்சடையான் திரைப்படத்தில் நாகேஷை உயிர்த்தெழ வைத்து திரையில் காண்பித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல