வியாழன், 28 டிசம்பர், 2017

பிட்காயினில் சம்பளம் வாங்க நீங்கள் தயாரா?

பிட்காயின். பலரும் பேசி வரும் விஷயம். இதை சிலர் மட்டுமே வைத்துள்ளனர்.

பிட்காயின்களில் சம்பளம் பெறுவதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

அடுத்த ஆண்டில், ஆரம்பகாலம் முதல், ஜப்பானிய நிறுவனமான ஜி.எம்.ஓ குரூப், ஊழியர்களுக்கு பிட்காயின்களில் சம்பளம் அளிக்கவுள்ளது.



நான்காயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு, தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பிட்காயினில் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இருந்ததைவிட, இத்தகைய பொருளாதார தொழில்நுட்பத்தின்மீது உலகளாவிய விருப்பம் அதிகமாக உள்ள நிலையில், இவ்வாறான அறிவிப்பு என்பது, ஒரு சந்தைப்படுத்தல் நகர்வு என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சிக்கல்களும் உள்ளன. கடந்த வாரம் சரிந்த பிட்காயினின் மதிப்பு, மீண்டும் 50 சதவிகித்ததிற்கு மேல் எழுச்சி அடைந்துள்ளது.

ஆனால், பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இதனால் என்ன ஆகும்?

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பிட்காயின் மூலமாக அளிக்கப்படும் சம்பளம் என்பது, ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் காலத்தில் உள்ள பணத்தின் மதிப்பை கணித்து வழங்க ஒப்புக்கொள்ளப்படுபவை.

தெளிவாக கூறவேண்டும் என்றால், பிட்காயினின் விலை 10 ஆயிரம் டாலர் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பணியாளர் ஆயிரம் டாலர்களை பிட்காயினாக பெற்றுகொள்ளும்போது, அவருக்கு 0.1 பிட்காயின் சென்றடையும்.

ஏற்கனவே விற்பனைக்காக பேசி தயார் நிலையில் வைத்திருக்கும் சூழலில், அந்த பிட்காயினை உடனடியாக விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு அதே தொகை கிடைக்கும்.

விற்பனை செய்யாமல் பிட்காயினை ஒரு நாளோ, வாரமோ, ஆண்டோ தேக்கி வைத்தால், 1000 டாலர்கள் உள்ள அதன் மதிப்பு 5000 டாலர்கள் வரைகூட செல்லலாம் அல்லது ஒன்றுமே இல்லாமல் போகலாம்.

இதனால், பிட்காயின்கள் மூலமாக சம்பளம் அளிக்கப்படுவதால், மக்கள் சூதாட ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

இன்சீட் வணிகப்பள்ளியில் பேராசிரியராக உள்ள மஸ்ஸிமோ மசா, "ஒரு பணியாளர் பிட்காயின்களால் சம்பளத்தை வாங்குகிறார் என்றால், அவருக்கான லாட்டரி சீட்டும் கிடைக்கிறது என்றே அர்த்தம்" என்று கூறுகிறார்.

"அவர்கள் ஒரு விளையாட்டில் பங்கேற்கிறார்கள்."

இந்த பிட்காயின்களின் விலை உயரும், மதிப்பு உயரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பணியாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும், காரணம் அவற்றை ஆதரிக்கும் வகையில் எதுவும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

பணியாளர்கள் விருப்பமாக உள்ளார்களா?

பிட்காயின்கள் சரிவு என்பது நடந்துகொண்டு இருக்கின்றன என்று பொருளாதார நிபுணர்களும், ஆய்வாளர்களும் தொடர்ந்து கூறியும், நம்மில் பலர் ஒருமுறையேனும் இதை முயன்று பார்க்கவே நினைப்பதுபோல தெரிகிறது.

பிட்காயின்களின் விலை தொடர்ந்து உயர்வதால், சம்பளத்தை பிட்காயின்களாக மாற்றும் தளமான பிட்வேஜ்ஜில், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான புதிய பயணாளர்கள் இணைந்துள்ளனர்.

"இந்த காலத்தில், பலரும் இதில் பங்கெடுக்க விரும்புகிறார்கள், சில நேரங்களில் அவர்களின் முழு சம்பளமும் பிட்காயின்களாக அளிக்கப்படுகின்றன" என்கிறார், இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜானத்தன் செஸ்டர்.

இந்நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில், இந்த ஆண்டு 20 ஆயிரம் பணியாளர்களின் முப்பது மில்லியன் மதிப்புள்ள சம்பளப் பணத்தை இவ்வாறு மாற்றியளித்துள்ளது.

இதில், கூகுள், பேஸ்புக், அமெரிக்க கடற்படை பணியாளர்களும் அடங்குவர்.

வரிகளின் நிலை?

உலகில் எங்கு இருந்தாலும், அப்போது, பிட்காயின்களின் விலை என்னவோ, அதற்கு ஏற்ப பணியாளர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

பங்குசந்தைகளில், எவ்வாறு பணியாளர்கள் தங்களின் முதலீட்டு வருமான வரிசெலுத்துகிறார்களோ, அவ்வாறு பிட்காயின்களிலும், தங்களின் பணம் எவ்வளவு லாபமீட்டியுள்ளதோ அதற்கு ஏற்ப வரிகள் மாறும் அமையும்.

பணியாளர்களுக்கு என்ன லாபம்?

கிரிப்டோ பணங்களில் பணியாற்றும் சில நிறுவனங்கள், பல ஆண்டுகளாக தங்களின் பனியாளர்களுக்கு பிட்காயினில் சம்பளம் அளித்து வருகின்றனர்.

பிட்காயின்களின் விலை குறைவாக இருக்கும்போது உங்களின் சம்பளம் பிட்காயினில் வந்தால், அதனை உடனடியாக விற்பதே நல்ல நகர்வு.

ஆனால் மற்றவர்களுக்கோ, இவை எல்லாமே ஒரு வணிக நகர்வுமுறை.

பிட்காயின்கள் தான் ஒரே வழியா?

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைகளை கொண்டுவரும் சந்தை என்பது விரிவடைந்து வருகிறது.

சிங்கப்பூரை சேர்ந்த டென் எக்ஸ் நிறுவனத்தில், பனியாளர்களின் அடிப்படை சம்பளம் மட்டுமே அவர்களின் வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. கூடுதல் தொகைகள், அந்நிறுவனம் உருவாக்கும் பே டோக்கன்களாகவே அளிக்கப்படுகின்றன.

இந்த டோக்கன்களை எந்த டிஜிட்டல் சந்தைகளும் மாற்ற முடியும். ஜூன் மாதம் அறிமுகமான இந்த பணத்தால், அந்நிறுவனம் 80 மில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது.

தன் நிறுவனமே சொந்தமாக ஒரு பணத்தை உருவாக்கும்போது, பிட்காயின்களில் சம்பளம் பெறுவது என்பது அர்த்தமற்றதாகும் என்கிறார், டென் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜூலிஅன் ஹாஸ்ப்.

கூடுதல் தொகையையும் தாண்டி, அடிப்படை சம்பளத்திலும் ஒரு பகுதியை டோகன்களாக பெறுகிறார், டென் எக்ஸ் சமூக மேலாளரான மைக் ஃபெர்ரர்.

இதில் சிக்கல் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளும் இவர், தன்னால் என்ன முடியுமோ அதில் மட்டுமே முதலீடு செய்வதாக கூறுகிறார்.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல