வியாழன், 2 ஆகஸ்ட், 2018

செத்தா பாடை வாங்க ஆள் இல்லையா.. டோன்ட் ஒர்ரி (worry).. அமேசானுக்கு ஆர்டர் போடுங்க.. பார்சல் வரும்!

செத்தா பாடை வாங்க ஆள் இல்லையா ? இதோ இருக்கு அமேசான்

அமேசான் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இறுதி சடங்குகள் செய்வதற்கு தேவையான அனைத்து பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கலி முத்திவிட்டதாக கூறுகின்றனர்.



இன்று ஜட்டி முதல் செல்போன் வரையும் அனைத்தும் ஆன்லைன் ஷாப்பிங்கில் குறைந்த விலையில் வாங்கி மகிழ்ந்து வருகிறோம். இது மட்டுமல்லாது அன்றாட காய்கறிகளும் ஆன்லைன் மூலம் கிடைக்கின்றன.
என்னதான் விஞ்ஞானம் முன்னேறி வந்தாலும் இயற்கையாக கிராமங்களில் கிடைக்கும் பொருட்களையும் நாம் ஆன்லைனில் வாங்கும் அளவுக்கு நம் நிலைமை மோசமாகியுள்ளது என்றே கூறலாம்.

வறட்டி எனப்படும் ஒரு பொருளானது மாட்டின் சாணத்தை காயவைப்பதன் மூலம் செய்யப்படுவதாகும். இவ்வாறு காயவைத்து அதை அடுப்பெரிக்க பயன்படுத்துவது வழக்கம். இந்த வறட்டிகள் நம் ஊர்களில் இரண்டு எண்ணிக்கை கொண்டவை ரூ.10-க்கு கிடைக்கிறது. இன்னும் பழகியவர்கள் என்றால் இனாமாகவே கிடைக்கும். ஆனால் இந்த வறட்டிகளும் தற்போது விற்கப்படுகின்றன.

ஏதாவது யாகம், பொங்கல் வைப்பது, அடுப்பெரிப்பது என்றால் நம் ஊர்களில் மாடு வைத்திருப்பவர்களிடம் காசு கொடுத்தோ அல்லது நம் வீட்டில் உள்ள மிச்சமாகும் உணவுகள் சேர்ந்த தண்ணீர் (கழிநீர் தண்ணீர் என்பர்) கொடுத்தோ பெற்று கொள்வோம். ஆனால் இன்று கிராமங்களும் நகரமயமாதலாலும், நகரத்தை நோக்கி மக்கள் சென்றதாலும் இதுபோல் இயற்கையாக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கூட அமேசானில் நாம் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரட்டிதான் விற்கிறது என்றால் இறந்தபின்னர் இறுதி சடங்குகள் செய்ய தேவையான அனைத்து பொருட்களும் அமேசானில் கிடைக்கின்றன. மொத்தம் 38 வகையான பொருட்கள் நமக்கு கிடைக்கும். உலகிலேயே முதல் முறையாக வெளியிடுகின்றனராம். இதன் விலை ரூ. 2950 மட்டுமேதான்.

1பாடைக்கு தேவையான மூங்கில் கொம்புகள், முக்காலி, வெள்ளை வேட்டி, துண்டு, மாலை, 2 பானைகள், கற்பூரம், பஞ்சு, பஞ்சு பட்டி, ஊதுவத்திகள், விபூதி, கோமியம், வாசனை திரவியம், பன்னீர், கங்கை தீர்த்தம், தேன், வத்தி பெட்டி, கயிறு, வெள்ளை நூல், பூணூல், உளுந்து, பார்லி, குங்குமம், மஞ்சள், வரட்டி, சந்தனம், அரிசி, வெற்றிலை, பிளேடு, ஓலை பாய் உள்ளிட்ட 38 பொருட்கள் கிடைக்கிறது.

இந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாம். பாடையானது 100 சதவீதம் மூங்கிலால் ஆனதாம். இவற்றை தனித்தனியாக கொடுத்தாலும் யார் உதவியும் இன்றி 2 நிமிடங்களில் அசம்பிள் செய்து கொள்ளலாமாம். தற்போது ஸ்டாக் இல்லையாம். விரைவில் இந்த பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று அமேசான் கூறுகிறது.

கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் ஈசியாக கிடைக்கும் பொருட்களை நமது சோம்பேறித்தனத்தை கொண்டு லாபம் பார்க்க நினைக்கிறது இந்த வெளிநாட்டு நிறுவனம். ஒரு சந்தேகம்தான்... இந்த பொருள்கள் எப்போது டோர் டெலிவரி செய்யப்படுகிறதோ அன்றைய தினம் சாகவேண்டுமா அல்லது இப்பொருட்கள் கிடைக்கும் நேரத்தில் நாம் சடலத்துக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமா என்பதுதான். இப்படியே போனால் இன்னும் அப்பா, அம்மா, குழந்தை உள்ளிட்ட உறவுகளையும் இவர்கள் விற்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல