சனி, 6 மார்ச், 2010

செக்ஸ் சாமியார்களை சட்டம் என்ன செய்யும்?

சாமியார்கள் பற்றி சமீபத்தில் வந்த இரண்டு நிகழ்வுகள், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை, "யூ டியூப்' பற்றி கேள்விப்பட்டிராதவர்கள் கூட, இப்போது அதிலேயே 24 மணி நேரமும் லயித்துக் கிடக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் இருவர். முதலாமவர், காஞ்சிபுரம் கோவிலின் கர்ப்பகிரகத்தை, "கர்ப்ப' கிரகமாக்கிய தேவநாதன். இரண்டாமவர், "ரஞ்சிதா புகழ்' நித்யானந்தர்.

இவ்விருவரின் செயல்பாடுகள், வீடியோக்கள் மூலம், உலகம் முழுவதும் பரவின. "யூ டியூப்'பின் சர்வர், "ஜாம்' ஆகும் அளவுக்கு, நேயர்கள் விரும்பிப் பார்த்த, "நம்பர் ஒன் வீடியோ' காட்சிகளாக இவை அமைந்தன. இந்த பரபரப்புகள் ஒரு புறம் இருக்க, இந்தப் பிரச்னையில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன? தேவநாதன் (36), திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ) மதத்தை களங்கப்படுத்துதல், 153 (ஏ) சமூக அமைதியைக் குலைத்தல், 506 (2) மிரட்டல், 376 கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்யானந்தர் (32) "கட்டை' பிரம்மச்சாரி. இவர் மீதும் கிட்டத்தட்ட இதே போல, 295 (ஏ), 420 மோசடி, 376, 377 இயற்கைக்கு முரணான புணர்ச்சி, 506 (1) மற்றும் 120 (பி) சதித் திட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை, மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை விரிகிறது. சட்டப் பிரிவெல்லாம் சரி தான். இவற்றை நிரூபிக்க முடியுமா? என்றால், அங்கு தான் இருக்கிறது சிக்கல். இரண்டு வழக்குகளுமே, பொதுமக்களால் வீடியோவில் பார்க்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டவை.

தேவநாதன் வழக்கில் நான்கு பெண்கள் சாட்சியமளித்தனர். இவர்களில் ஒரு பெண், பிரதான வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, கற்பழிப்பு புகார் கொடுத்தார். நித்யானந்தர் வழக்கில், அவருடைய பிரதான சிஷ்யராக இருந்த லெனின் கருப்பன் (எ) நித்ய தர்மானந்தா புகார் கொடுத்துள்ளார். இவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் கடுமையானது கற்பழிப்பு புகார். நிரூபிக்க கடினமானதும் அதுவே. தேவநாதன் மீது புகார் கொடுத்த பெண், மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டதை, வீடியோவை பார்த்தவர்கள் உணர முடியும். எனவே, "தேவநாதன் தனக்கு மயக்க மருந்து கொடுத்ததால், என்ன நடந்தது எனத் தெரியவில்லை' என அவர் கூறுவது, கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே.

ரஞ்சிதா எப்படியும் நித்யானந்தர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்போவதில்லை. அப்படியே கொடுத்தாலும், ஆட்டையாம்பட்டி முருகேசனே முன்வந்து, அவர் சொல்வது பொய் என சாட்சியம் சொல்லுவார். அப்புறம், இந்த வழக்குகளின் கதி என்ன ஆகும்?

இதுகுறித்து, மூத்த வக்கீல் விஜயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பொதுவாகவே, கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினம். சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் இருந்தால், அது கற்பழிப்பிலேயே சேராது. யாரோ ஒரு மனிதர், எவளோ ஒரு பெண்ணை கற்பழித்ததாக மூன்றாவது மனிதர் கொடுக்கும் புகாரும் செல்லாது; பாதிக்கப்பட்ட பெண் தான் கொடுக்க வேண்டும். அதை விட முக்கியமான விஷயம், நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளில், வெறும் ஆறு சதவீதம் வழக்குகள் மட்டுமே நிரூபிக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு அதீத ஆர்வம் இருப்பதால், இத்தகைய வழக்குகள் பிரபலமடைந்துவிடுகின்றனவே தவிர, வேறொன்றுமில்லை. விசாரணை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிஜமானால் மட்டுமே, குற்ற வழக்குகள், நிரூபணங்களை நோக்கிச் செல்ல முடியும். அதுவரை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவது தொடரத்தான் செய்யும். இவ்வாறு விஜயன் கூறினார்.

அப்படியென்றால், தேவநாதன், நித்யானந்தர் வழக்குகளின் கதி? எதிர்காலத்தில் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தால் கூட, அவர்களின் மானம் போனது போனது தான். தண்டனைகளிலேயே பெரிய தண்டனை அவமரியாதையே என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

ஆர்.ரங்கராஜ் பாண்டே -

தினமலர்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல