திங்கள், 21 ஜூன், 2010

எப்போதும் இன்புற்றிருக்க...

வாரத்தில் ஒரு நாளேனும் ஏதேனும் ஒரு வகையில் மோசடி குறித்த செய்திகள் வருகின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும், மீண்டும் மீண்டும் ஏமாந்துதான் தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர்.

எல்லா ஏமாற்றத்தின் அடிநாதமாகவும் ஒளிந்திருப்பது என்ன? பேராசை! எப்படியேனும் பணம் சம்பாதித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்கலாம்’ என்று, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சம்பாதித்ததை எல்லாம் எவரையோ நம்பிக் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு மொத்தமாக இழந்து நிற்பவர்கள் பலர்.

சிறுவயது முதல் பழமொழிகள் பலவும் நமக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவற்றில் மகிழ்ச்சிக்கான உபாயங்கள் ஒளிந்திருக்கின்றன. எது உண்மையான மகிழ்ச்சி என்பதை அறிய, எளிய வழி உண்டு. அந்த நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிட்டுப் பிறகு உபத்திரவம் தரும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியே இல்லை; இன்னும் 20 வருடங்கள் கழிந்தாலும நினைத்து இன்புறத்தக்க நிகழ்வு எதுவோ... அதுவே பேரானந்தம்! சில செயல்களைச் செய்யும் அந்தத் தருணத்தில், அவை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். பின்னர், அவற்றை நினைவுகூரும் போது நீங்காத வலியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

பேராசையால் ஏமாறுகிறவர்கள் குறித்து எனக்கு எந்த வருத்தமோ, பரிதாபமோ இல்லை. ஒருவேளை... பணம் அவர்கள் கைக்கு வந்திருந்தால், ஏமாற்றுபவர்களாக அவர்களே இருந்திருப்பார்கள்.

இரண்டு பேராசைக்காரர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி... அவ்வளவுதான்! அதே நேரம், புதுப்புது வகைகளில் மக்களைச் சிக்க வைக்கும் மாய வலைகளைக் கண்டுபிடிக்கும் மனிதர்களை நினைத்தால்... ‘இவர்கள் ஏன் தங்களின் சாமர்த்தியத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தக் கூடாது? எனத் தோன்றும். ‘மாட்டிக்கொள்வோம்’ என்பது தெரிந்தும் துணிச்சலாக இறங்கும் இவர்கள், மசால் வடைக்கு ஆசைப்பட்டு எலிப்பொறிக்குள் எட்டிப் பார்க்கும் சுண்டெலிகளைப் போன்றவர்கள்!

நாம் சம்பாதிக்கும் பணம், வியர்வையால் அழுக்குப்படும்போதுதான் அதற்கான மதிப்பு உதயமாகிறது. அது ஒருபோதும் குற்ற உணர்வால் நம்மைக் குன்றவைக்காது. அதனைச் செலவு செய்யும்போது விழிப்பு உணர்வு கூடுகிறது. தேவையற்றதைத் தவிர்க்கவும், அவசியமானவற்றை நுகரவும் மனமானது கண்காணிப்பாளராக மாறுகிறது.

உலகில் எல்லாரும் எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சிற்சில தடங்கல்கள் நேரலாம். ஆனால், அது சளியைப்போல நீங்கிவிடுமே தவிர, சனியைப்போல முடக்காது! தற்காலிக மகிழ்ச்சிக்காகத் தனது வாழ்நாளையே காவு கொடுப்பவர்களுக்காக நம் கண்களின் விளிம்பில் அரும்பும் நீரும் ஆவியாகிவிடும்.

ஏமாற்ற நினைப்பவர்களே ஏமாந்து போகின்றனர் என்பதற்குச் சிறிய சம்பவம் ஒன்று...

பழங்காலத் தனியார் சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அது! அங்கே வந்தான் ஒருவன். நடனப் பெண் ஒருத்தியின் நளினமான சிற்பத்தைக் காட்டி, “ஐயா, இந்தப் பல்லவர் காலச் சிற்பம், பரம்பரை பரம்பரையாக எங்கள் வீட்டில் உள்ளது. இது எங்களின் குடும்பச் சொத்து. எத்தனையோ பேர் ஒரு லட்சம் ரூபாய் வரை விலைக்குக் கேட்டும், விற்க மனம் வரவில்லை.

இப்போது சின்ன நெருக்கடி, இந்தச் சிற்பத்தை வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் கைமாற்றாகக் கொடுங்கள்; ஒரு மாதத்தில் மீட்டுக்கொள்கிறேன்” என அருங்காட்சியக மேலாளரிடம் தெரிவித்தான்.

அந்த மேலாளர் கலைகளின் ரசிகர். சிற்பத்தைக் கண்டு சொக்கிப்போனவர், பணத்தைக் கொடுத்து சிற்பத்தை வாங்கிக்கொண்டார். ‘சிற்பம் பத்திரம் ஐயா’ என்று சொல்லிச் சென்றான் அவன்.

ஒரு வாரம் கழித்து, அருங்காட்சியகத்துக்கு வந்த தொல்லியல் வல்லுநர் ஒருவரிடம் நடனச் சிற்பத்தைக் காட்டினார் மேலாளர். அதைப் பார்த்துவிட்டு,

“இது பல்லவர் காலச் சிற்பமே இல்லை; கற்சிற்பமாகக் கூடத் தெரியவில்லை இரும்புத் துண்டை உள்ளே வைத்துச் செய்யப்பட்ட காகிதக் கூழ் சிற்பம். இது ஆயிரம் ரூபாய்கூடப் பெறாதே” என்றார் அந்த வல்லுநர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேலாளர் சற்று யோசித்தார். சில நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலருக்கு “பழங்கால நடனச் சிற்பம் ஒன்று தற்சமயம் அருங் காட்சியகத்தில் உள்ளது அதைக் காண உங்களை ஆவலோடு வரவேற்கிறேன்” என்று ஓர் அழைப்பு அனுப்பினார்.

அவ்வளவுதான்... அருங்காட்சியகத்தில் ஏகத்துக்கும் கூட்டம்! அவர்களின் பார்வைக்காக அந்தச் சிற்பத்தை அருங்காட்சியக மேலாளர் பெருமையுடன் எடுத்து வரும்போது, கீழே விரித்திருந்த கம்பளம் தடுக்க... சிற்பம் கைநழுவி விழுந்து உடைந்து சுக்குநூறானது. அனைவரும் அதிர்ந்தனர்.

மேலாளரும் சோகத்தில் ஆழ்ந்தார். அதையடுத்து, பல்லவர் கால நடனச் சிற்பம் கைநழுவி உடைந்த விவரம், மறுநாள் சில செய்தித் தாள்களில் வெளியானது. சிற்பத்தை அடகு வைத்தவன், மறுநாளே அருங்காட்சியகத்துக்கு வந்தான். பத்தாயிரம் ரூபாயை எடுத்து மேலாளரிடம் கொடுத்தவன், “நான் தங்களிடம் அடகு வைத்த நடனச் சிற்பம் உடனே எனக்கு வேண்டும்” என்றான். மேலாளர் உள்ளே சென்று, அதை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கி, உற்று உற்றுப் பார்த்தான். அது அவன் அடகு வைத்த சிற்பமேதான்! எனவே, எதுவும் பேச வழியின்றி, ஏமாற்றத்துடன் சிற்பத்தை எடுத்துச் சென்றான் அவன்.

உண்மையில், அன்று உடைந்தது அவன் தந்த சிற்பமே அல்ல; அதைப் போலவே தயாரிக்கப்பட்ட போலியான சிற்பம். வேண்டுமென்றேதான் அந்த போலியான சிற்பத்தை உடைத்தார் மேலாளர். அதுபற்றி அறிந்ததும், உடனே சென்று சிற்பத்தைக் கேட்போம். மேலாளர் உடைந்துவிட்டது என்று கையைப் பிசைவார். அப்படியானால் நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாய் கொடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் மீது கேஸ் போடுவேன்’ என மிரட்டி வாங்கிவிடலாம் எனும் பேராசையுடன் அவன் வந்தான். அவன் நினைத்தது நடக்கவில்லை. பேராசையே அவனை ஏமாற்றிவிட்டது.

மேலாண்மையில்... ஒரு நிறுவனம் லாபம் ஈட்ட இரண்டு வழிகளைச் சொல்லித் தருவார்கள். ஒன்று, உற்பத்தியைப் பெருக்குவது; அடுத்தது, செலவைக் குறைப்பது. சொந்த வாழ்வில் சேமிப்பை அதிகப்படுத்த விரும்புகிறவர்கள், இரண்டாவது முறையைக் கையாளவேண்டியது அவசியம்.

குறுக்கு வழி என்பது, சில தருணங்களில் எதிர்பாராத லாபத்தைத் தரலாம். உடனே சிலர், அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். உயர்வதற்கான பாதை அதுவே என எண்ணிப் புதைகுழியில் சிக்கிக்கொள்வார்கள்.

பகுத்தறிவு என்பது, இறைமை குறித்த கேள்விகளை எழுப்புவது மட்டுமல்ல; நமது புலன்களைக் கூர்மையாக்கி, அபரிமிதமாகக் கிடைக்கும் எதையும் கேள்விக்கு உட்படுத்துவதும், சந்தேகப்படுத்துவதும்கூட பகுத்தறிவுதான்!

அறிவியல் ரீதியான எந்தவொரு நிகழ்வையும் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் பகுத்தறிவு.

இவ்வளவு வட்டி கொடுப்பது என்பது எப்படிச் சாத்தியம்? இத்தனை விரைவாக நோய் எப்படிக் குணமாகும்?, 4}Z’தி இல்லாமல் பொருட்களை எப்படித் தரமுடியும்? என்பவை அறிவியல் ரீதியான தர்க்கங்கள் சரி... சாத்தியம் எனில், அப்படி வருகிற முன்னேற்றம் தேவையா? அது நிலைக்குமா? எனத் தீவிர சிந்தனையை முடுக்கிவிட வேண்டும். திருக்குறளின் அறத்துப்பாலில் மட்டுமின்றி, பொருட்பால் மற்றும் காமத்துப்பாலில்கூட அறக் கருத்துக்கள் உள்ளன. வாங்குவதற்கு ஒரு தராசும் விற்பதற்கு ஒரு தராசும் பயன்படுத்தும்படி வியாபாரிகளை வலியுறுத்துகிறது அர்த்த சாஸ்திரம். திருக்குறளோ. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்’ என்றும் தவறான முறையில் பணத்தை ஈட்டுவது, சுடப்படாத மண் பாத்திரத்தில் தண்ணீரைப் பாதுகாக்க நினைப்பதுபோல என்றும் எச்சரிக்கிறது.

பணம் இலக்காக இல்லாமல், வழியாக மட்டுமே இருப்பின், ஏமாற்றம் என்பதே இல்லை. அதுதான் உச்சபட்ச எல்லை என எண்ணுபவர்கள் இருக்கிற மகிழ்ச்சியையும் இழப்பார்கள்.

இவர்கள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம் எனும் நப்பாசையில், நிகழ்கால இனிமைகளைத் துறப்பார்கள்; எதிர்காலத்தையும் கோட்டைவிடுவார்கள்.


புருஷோத்மன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல