சனி, 7 ஆகஸ்ட், 2010

கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே. பிரபாகரனுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டுள்ளார்.

7 ஆம் திகதி சனிக்கிழமை வெளியான டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் முதல் பகுதியின் தமிழ் வடிவம் இது:

கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சிடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால் நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO வின் (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?

ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் நான் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?

ப: இல்லை நான் நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?

ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?

ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துகொண்டது. ஒருவர் "வெரி சொரி மிஸ்டர் கே.பி". என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் - 2 பகல்களும் 2 இரவுகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடுகடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்காக, இந்தியாவுக்கா, அமெரிக்காவுக்கா அல்லது வேறெங்குமா கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின் நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007 ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

ப: நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லர் இடங்களிலுமிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது. உண்மையில்நான் 2007 இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைதுசெய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

-Dailymirror-
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல