திங்கள், 27 பிப்ரவரி, 2012

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது?

தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும்.

திக்குவாய் உடல்ரீதியான பிரச்சினை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சினையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும்போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.

எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும்போது எவ்வித மனபயம் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும்.
“அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே' என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.
ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்.

அப்பையன் வளர வளர திக்குவாய் தோன்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம். வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும்போது மட்டும் திக்கிப் பேசுவார்.

ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார். பிறர் முன்னிலையில் பேசும்போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சினை. குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறடம் பேச வைக்க வேண்டும். அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறடம் பயமின்றி உரையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று. மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வித மனப்பதட்டம் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும்.
இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும்போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு “எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சினையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்' என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சினையை விரைவில் தீர்த்துவிடலாம்.

தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே!.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல