திங்கள், 19 நவம்பர், 2012

வயிற்றுக்கு உணவில்லாதபோது (தமிழ்) உணர்வுக்கு இடம் ஏது?

தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் என்ற செய்தி ஆச்சரியத்திற்குரியதுதான். தமிழர்கள் என்றால் அவர்களை பொலிஸில், இராணுவத்தில் இணைக்கக்கூடாது என்பது அரசின் இறுக்கமான கொள்கையாக இருந்தது. அதேநேரம் இராணுவத்தில், பொலிஸில் இடம் பெற்றிருந்த தமிழர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் கடும் கோபம் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக படைச் சேவையில் இருந்து இடைவிலகிய-ஓய்வுபெற்ற தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். எனினும் இத்தகையவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வரமுடியாதவர்களாக, அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல முடியாதவர்களாக இருந்தனர் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.
இவ்வாறு ஒருபுறத்தில் தமிழர்களை படையில் இணைத்துக் கொள்ள அரசு மறுத்த நிலையும், ஏற்கெனவே படையில் இணைந்துகொண்ட தமிழர்களை துரோகம் இழைப்பவர்களாக புலிகளும் கருதிக்கொண்ட காலமும் மலையேறி, இப்போது தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள அரசு முன்வந்துள்ளது.

அதேநேரம் விடுதலைப் போராட்டத்தின் கோட்டையாக இருந்த வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் எந்தவித பின்னடிப்புகளும் இன்றி இராணுவத்தில் இணைந்துள்ளனர். இப்போது தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் அரசு கால ஓட்டத்தில், தமிழ் இளைஞர்களையும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும். யுத்தத்திற்குப் பின்பான அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக ஏற்பட்டதல்ல.
தமிழ் இனம் – தமிழர் தாயகம் என்ற விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் யுத்தத்தால் அழிந்துபோன தமிழ் மக்களின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசு தனது வியூகத்தை நகர்த்திச் செல்கின்றது. தமிழர் பிரதேசத்தில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுகை பெறுவதற்கு வாய்ப்புண்டு எனக்கூறும் அரசு, இன்னொரு பக்கத்தில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்கிறது.

எங்கள் அரசியல் தலைமைகள் ஏதோ பேசிக் கொள்ள, வயிற்றுக்கு உணவின்றி வாடும் தமிழ்க் குடும்பங்கள் படையில் சேர்ந்தேனும் எங்கள் சீவியத்தைப் பார்த்துக் கொள்வோம் என்ற முடிபுக்கு வந்துவிட்டன. இத்தகையதொரு முடிபை திட்டமிட்டு ஏற்படுத் திய அரசு அந்த முடிபை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள சிறிது காலம் சென்ற பின் தமிழ்த் தேசியம் பற்றி யார் கதைத்தாலும் அவர்களை நோக்கி ஓங்கப்படும் கரங்கள் படைத்தரப்பில் இருக்கக் கூடிய தமிழர்களாகவே இருப்பர். என்ன செய்வது! எங்களின் நிலையை அறிந்து எங்கள் வாழ்வாதாரத்தை எப்படிக் கட்டியயழுப்புதல் என்பது பற்றிச் சிந்திக்காத தமிழ் அரசியல் தலைமைகள், எதிர்காலம் பற்றி சிந்திக்கவா போகின்றன!

வலம்புரி அன்கோ பத்திரிகை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல