வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஈழத் தமிழர் எதிர்காலம்..?



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்திருக்கும் உணர்வலைகள்,

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதான விவாதங்கள், பலவும் உணர்ச்சிகரமான உரையாடல்களாகவே முடிந்து போவதை அவதானிக்க முடிகிறது. இந்த உணர்ச்சிகர உரையாடல்களில் ஈழத் தமிழினத்தின் மீது தொடர்ந்து கட்டமைக்கப்படும், நுண்ணரசியல் ஆளுமை குறித்த அவதானிப்பு அற்றுப் போவதையும் காணமுடிகிறது.

வெளியாகியுள்ள பாலச்சந்திரனின் கொலை தொடர்பான படங்கள் நடந்த கொடுமையைச் சொல்லும் அதேவேளை, இதே காலப் பகுதியில் வெளியாகியுள்ள மற்றுமொருபடம் நடக்கவிருக்கும் அரசியற் கொடுமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிகர உரையாடல்கள் எவற்றிலும் அந்தப் படம் உணர்ந்தும் அச்சம் பேசப்படவில்லை.

உணர்ச்சிகரமான தமிழர்களாக இருப்பதனாலேயே பலவேளைகளில் தமிழ்மக்கள் பலமிழந்து போகின்றார்கள் என்பது இன்னமும் உணரப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ' மே17 ' அமைப்பினைச் சேர்ந்த திருமுருகன் காந்தியின் பேஸ்புக் தளக்குறிப்பொன்றில் இந்த நுன்னரசியல் குறித்த அச்சம் பற்றி எழுதியுள்ளார்.

தமிழர் எதிர்ப்பு ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்சேவிற்கு எதிராக தலையங்கம் முதல் நடுபக்க கட்டுரை வரை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் ஊடாக வர இருப்பது இலங்கையில் ஆட்சி மாற்றமே. அதுவே மேற்குலகம் விரும்புவது. இந்த கோரிக்கைக்கு இந்தியா தலையசைத்திருக்கிறது. தி இந்து முதல்பக்கத்தில் செய்தி வெளியிடுவதன் காரணம்.

இவர்களின் ராஜபக்சே எதிர்ப்பில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கான தமிழீழ விடுதலைத் தொடர்பான எந்த ஒரு குறிப்பும் இல்லை. சேனல்4இன் இயக்குனர் கல்லம் மக்கரேயின் கட்டுரையின் இறுதியில் அவர் முடிப்பது, ‘ சர்வதேசவிசாரணை நடந்தால் தான் உண்மையான அமைதியும், நல்லிணக்கமும் இலங்கையில் (ஒன்றுபட்ட) சாத்தியம்.’.... எகனாமிக் டைம்ஸ், தி இந்து, டைம்ஸ் நவ், திமுக உள்ளிட்ட கும்பல்கள் இதைத்தான் வழிமொழிகின்றன.

ராசபக்சேவினை மாற்றி ரணில் விக்ரமசிங்கேவை கொண்டு வருவது என்பதற்கே இத்தனை நாடகங்களும் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ்காரன் கூட பாலச்சந்திரன் படுகொலைக்காக வருத்தப்படுவது எல்லாம் இதற்காகவே.

ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேவினை விட மோசமானவன். ஆர்பாட்டம் இல்லாமல் இனப்படுகொலையை நடத்தும் வல்லமை வாய்ந்தவன். நல்லினக்க ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது போல நாடகம் நடத்திவிட்டு தமிழரை அழிக்கக் கூடியவன். ஆக நமது போராட்டம் என்பது இரண்டு பேர்களையும் குறிப்பிட்டு இலங்கை அரசின் வரலாறே இனப்படுகொலை வரலாறு என்று ஆரம்பித்தல் அவசியம். இந்தியாவே -காங்கிரஸே இதன் முதுகெழும்பு என்பதும் நினைவுட்டப்படல் வேண்டும். (இதற்காகவே 23ம் தேதி சத்திய மூர்த்திபவன் முற்றுகை. )

இந்தியன் எக்ஸ்பிரஸில் ‘ரனில் காலில் தமிழீழ தாய் ஒருவர் விழுந்து கதறுவது என்பதன் நுண் அரசியல் இதுவே’.. ராஜபக்சேவிற்கு எதிராக கூக்குரல் இடும் எந்தா ஒரு கட்டுரையும் தமிழீழ விடுதலை பற்றி பேசுகிறதா எனப் பாருங்கள். பிறகு புரியும்..

ஐ. நாவிற்கு எதிரான ஆவணங்களை வெளிக்கொணர்ந்த பிறகும், ஆர்பாட்டம் நடத்திய பிறகும், முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகும் தமிழக ஊடகங்கள் ஐ. நா அதிகாரிகளைப் பற்றிய விவரங்களை வெளியிடாமல் மெளனம் காப்பது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் அயோக்கியத்தனம். வேறொரு இனமாக இருந்திருந்தால் முதல்பக்கத்தில் 130 பக்க ஐ. நாவின் உள்ளக அறிக்கையை வெளியிட்டு இனத்தினை போராட்டத்திற்கு தயாராக்கி இருப்பார்கள். மிகக் கவனமாக அனைத்து ஊடகங்களும் ஐ. நாவினை எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிற விவரங்களை ஒரு விவாதத்திற்கு கூட எடுக்கவில்லை..... மூன்று மாத கடுமையான உடல் நலக்கோளாரின் ஊடாக இந்த அறிக்கைகளை வெளிக்கொணர்ந்த தோழர். உமரின் உழைப்பினை போகிற போக்கில் தூக்கி எறியும் தர்மம் வியக்க வைக்கிறது.

பாலச்சந்திரன் பற்றிப் பேசுவது மிகச்சிறந்த வணிகமாக இருக்கும் என்பதால் நமது வலி வியாபாரமாக்கப்படுகிறது. இவற்றின் ஊடாக ’ரணில்’ இலங்கையின் அதிபராக மாற்றப்பட்டு நல்லிணக்கம் கொணரப்படும். ஒன்று பட்ட இலங்கைக்குள் அமைதியாக சவக்கிடங்கினைப்போல நாம் வாழலாம். எதிரியை அடையாளம் காட்டாமல் தீர்வினை முன்மொழியாமல் காலம் கடத்துவதும், நமது உணர்வினை பகடைக்காயாக பயன்படுத்துவதும் தமிழன் திரும்ப திரும்ப பாடம் கற்க மறுக்கிறான் என்பதன் அடையாளம் என எழுதப்பட்டிருக்கும் இந்தக் குறிப்பும் முழுமையானது எனச் சொல்லமுடியாவிட்டாலும், உணர்ச்சிவசப்படுதலில் இருந்து விலகி நிதானமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சிறிலங்காவின் அரசியல் நகர்வுகள் மேலும் மேலும் உணர்த்துகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.

உண்மைநிலை இவ்வாறாக இருக்கையில் தமிழர்களது செயல்நிலை...?

நன்றி: திருமுருகன் காந்தி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல