சனி, 30 மார்ச், 2013

அகங்காரப் போக்கினால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படலாம்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி மெளனம் சாதித்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் திரைமறைவில் ஆதரவு தெரிவிக்கும் கொள்கையை மிகவும் சாதூரியமான முறையில் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.அதேவேளையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியின் அதிகார மோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஜெயலலிதா அம்மையார் செய்வதறியாது எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்து இன்று இந்திய அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாக விளங்குகிறார்.

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக விளையாட்டுத்துறையை குறிப்பாக இந்திய மக்களில் சுமார் 90சதவீதமானோரின் அபிமானத்தைப் பெற்ற கிரிக்கட் விளையாட்டை அரசியல் மயப்படுத்தி இந்தப் பெண்மணி அனைத்துலக கிரிக்கட் ரசிகர்களின் கிண்டலுக்கு இலக்காகியிருக்கிறார்.இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் விளையாடுவதை தமிழ்நாடு அரசாங்கம் அனுமதிக்காது என்று ஜெயலலிதா அறிவித்திருப்பது குறித்து இலங்கை வீரரும் சுழல் பந்துவீச்சில் உலக சம்பியனுமான முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கும் கருத்து ஜெயலலிதா அம்மையாரை ஒரு அவமான சின்னமாக மாற்றியிருக்கிறது.

நான் இலங்கை அணியில் 20 ஆண்டுகாலம் விளையாடிய ஒரு தமிழனாகும். வெளிநாடுகளில் எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றிய போது இலங்கை கிரிக்கட் அணியைச் சேர்ந்த எனது சகாக்கள் எனக்காக போராடி என்னை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் எனக்கு சகல உதவிகளையும் செய்ய தயக்கம் காட்டவில்லை என்று முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.

முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட போதிலும் இன்று எனது நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்திய தரப்பினர் இலங்கைக்கு கட்டாயம் வந்து முன்னர் நடந்தவற்றை மறந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை நேரடியாக பார்க்க வேண்டும். அன்றைய நிலைபோல் மீண்டுமொரு யுத்தத்தை இலங்கை மக்கள் விரும்பவில்லை. நாம் கிரிக்கட் வீரர்கள். எமது கிரிக்கட் விளையாட்டின் மூலம் நாம் மக்களை மகிழ்விக்கிறோம். அரசியலுக்கு இறங்க நாம் விரும்பவில்லை என்றும் முரளிதரன் யதார்த்தபூர்வமாக ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு தக்க பதிலை அளித்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.

இப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய வரம்பை மீறி இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவருவதற்கு எத்தனித்து வருகிறார். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று நாம் கூறுவதை நிறுத்த வேண்டும். மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக்குற்றவாளிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும். அடக்கு முறையை நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும்.

இந்த யோசனைகளை இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜெயலலிதா அம்மையார் சர்வாதிகார போக்கில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கும் தொனியில் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கம் துச்சமாக மதித்து அதனை பொருட்படுத்தப் போவதில்லை என்று புதுடில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது பற்றி கருத்து தெரிவிக்கும் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி அதிகார மமதையில் செய்வதறியாது கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் கொட்டத்தை மத்திய அரசாங்கம் அடக்குவது அவசியமாகும். இல்லையானால் ஜெயலலிதா பொறுப்பற்ற விதத்தில் வெளியிடும் கருத்துக்கள் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா இவ்விதம் தொடர்ந்தும் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவந்து தனது அரசியல் ஆதிக்கத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தால் நிச்சயம் ஜெயலலிதா பாதகமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கும் சுப்ரமணிய சுவாமி அவர்கள் ஜெயலலிதாவின் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்தால் ஜெயலலிதாவுக்கு அடங்கிப் போவதை விட வேறென்ன செய்ய முடியுமென்று அவர் கேட்டுள்ளார்.

ஜெனீவா பிரேரணை மீது தமிழ்நாட்டில் மாணவர்களை பகடைக்காய்களாக வைத்து ஆரம்பித்த இலங்கை எதிர்ப்பு போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கை ஓங்கி, கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பார்த்து அச்சம் கொண்ட ஜெயலலிதா திடீரென்று தனது போக்கை மாற்றியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் மீது அன்பும், பாசமும் கொண் டவரைப் போல் சினிமாவில் நடிப்பதை விட சிறப்பாக நடித்து விளையாட்டுத்துறையை அரசியல் மயமாக்கியுள்ளதோடு புதுப் புது கோரிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முன்வை த்து தனது மக்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்கு எடுக்கும் தந்திரோபாயமே இதுவென்று தமிழ்நாட்டின் அரசியல் அவதானிகள் ஜெயலலிதாவைப் பார்த்து இன்று கிண்டல் செய்கிறார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல