வெள்ளி, 5 ஏப்ரல், 2013

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அநேக பாலச்சந்திரன்கள்

- பி.ஜெயராம்

ஸ்ரீலங்காப் படைகளால் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பயங்கரத்தை கிளப்பியுள்ளது, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் பீரங்கித் தீவனமாக மாறி தங்கள் இன்னுயிர்களை பலிகொடுத்த சிறுவர்களையும் மறந்துவிடக் கூடாது.

1994ன் கடந்த காலத்துக்கு பின்னோக்கிச் சென்றால், கொழும்பை தளமாகக் கொண்ட நான்கு இந்திய பத்திரிகையாளர்களும் மற்றும் ஒரு சர்வதேச செய்தி நிறுவனத்தை சேர்ந்த சிங்கள நிருபர் ஒருவரும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஒரு அபூர்வமான அனுமதியை பெற்றிருந்தோம். அது அபூர்வமானது எதனாலென்றால், அந்த நேரத்தில் வட குடாநாடு கிட்டத்தட்ட முற்றாக தமிழ் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது, அவர்கள் அரசாங்கப் படைகளை மரபுவழி யுத்தங்கள் மூலம் அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்கள். பத்திரிகையாளர்கள், குடாநாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு, தீவின் புரையோடிப் போயிருந்த மோதல்களுக்கு பொறுப்பான அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினரிடமிருந்தும் மற்றும் அந்தப் பிரதேசத்துக்குள் செல்வதற்கு, புலிகள் பாதை அனுமதி வழங்கியிருந்த ஒரேயொரு நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுவினரிடமும் அனுமதி பெறவேண்டியது அவசியம்.

அந்த நேரம்தான் புலிகள் தங்கள் நோக்கமான ஈழ அரசாங்த்தை ஒரு தலைப்பட்சமாக சுதந்திர பிரகடனம் செய்வதற்கு அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட நேரம், ஆனால் இந்தியாவின் பிரதிபலிப்புக்கு மாத்திரம் அஞ்சி, அதை செய்யாமல் பின்வாங்கியிருந்தார்கள். புதுதில்லியின் சம்மதம் இல்லாவிட்டால்,சர்வதேச சமூகம் தங்கள் சுதந்திரப் பிரகடனத்தை அலட்சியப்படுத்திவிடும் என்பதை அவர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் அதற்கு ஒரு சிறு காலம் தேவை என்று புலிகள் நம்பினார்கள். எனவே பத்திரிகையாளர்களின் வருகைக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் அவர்களது கடவுச்சீட்டை உடன் கொண்டுவரும்படி அவர்களிடம் சொல்லப் பட்டிருந்தது, ஏனெனில் ஈழத்துக்குள் நுழைவதற்கு குடியேற்ற அனுமதி பெறவேண்டும் என்பது கட்டாயம்.

ஆதலால் ஒரு செப்டம்பர் மாத அழகிய காலை நேரத்தில், த ஹிந்துவின் வி.ஜெயந்த், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் அப்ராட்டிம் முகர்ஜி, பி.ரி.ஐ யின் விஜய் சதோக்கர், பிரான்சிய செய்தி நிறுவனமான ஏ.எப்.பி யை சேர்ந்த அமால் ஜயசிங்க, மற்றும் அப்போது யு.என்.ஐ யின் ஸ்ரீலங்கா நிருபராக இருந்த இந்த எழுத்தாளர் ஆகியோர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான பலாலி விமானத் தளத்துக்கு விமானப்படையினாரால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக விமான சேவை மூலம் சென்றடைந்தோம்.

பலாலி இராணுவ முகாம்,மற்றும் அந்த சுற்றாடலில் ஒருகாலத்தில் உள்ளுர் மக்களின் வீடுகளாக இருந்து இப்போது பாழடைந்து கிடக்கும் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டிடங்கள், என்பன அந்த மூலோபாயம் வாய்ந்த தளத்தை கைப்பற்றுவதற்காக புலிகள் வருடக்கணக்காக தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆனால் சாத்தியமடையாமல் போன தாக்குதல்களின் வடுக்களை கொண்டிருந்தன. தளத்திலிருந்து நாங்கள் விரைவாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வெள்ளை நிற கொடி பறக்கும் வாகனம் ஒன்றின் மூலம் சில கி.மீட்டர் தூரத்திலுள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான ஒரு கப்பல் எங்களை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, குடாநாட்டின் உச்சியில் அமைந்துள்ள பருத்தித்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றது.

ஆயுதம் தாங்கிய புலி அங்கத்தவர்கள் எங்கள் குழவினரை பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டது. அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் காரணமாக, அந்தப் பிரதேசத்தில் மின்சாரம் இல்லை,பெற்றோல், டீசல் எதுவும் இல்லை, உணவு இல்லை, எதுவும் இல்லை. அப்படியான ஒரு சூழலில் தாங்கள் எப்படி வெற்றிகரமாக பிடித்து நிற்கிறோம் என்பதை எங்களுக்கு விளக்குவதற்காக அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒரு இரண்டு நாள் சுற்றுப் பணத்தை நாங்கள் நடத்தினோம்.

உண்மையை அறிவிப்பது child soldiers2

அந்த சுற்றுலா யாழ்ப்பாண மனிதர்களின் புதுப்புனைவுத் திறமையின் உண்மை நிலையை அறிவிப்பதாக இருந்தது - தேங்காய் எண்ணெயில் இயங்கும் முச்சக்கர வண்டிகள், சுறுசுறுப்பு மிக்க சாரதிகள் தங்கள் சட்டைப் பைகளில் தயாரக வைத்திருக்கும் பெற்றோல் நிரம்பிய கைக்கடக்கமான துளி சொட்டியிலிருந்து இரண்டு மூன்று சொட்டு பெற்றோலை விட்டு இயந்திரத்தை ஆரம்பித்த பின்னர் அதை தேங்காயெண்ணைக்கு மாற்றுவதன் மூலம் இது நடைபெறுகிறது, சில துளி மண்ணெண்ணை மற்றும் கடதாசி திரி, என்பன மூலம் விசேடமாக வடிவமைக்கப்பட்ட களிமண் விளக்குகள் மூலம் சிறுவர்களுக்கு ஒளியை வழங்குவது போன்ற அநேக புதுப்புனைவுகளை அவர்கள் செய்திருந்தார்கள். யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில், இன்னமும் தனது பதின்ம வயதுகளில் உள்ளவரைப் போல தோற்றமுள்ள ஒரு பெண் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் நீதிபதியாக அமர்ந்திருந்தார், அவரது முன்னால் அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் தங்களது கறுப்பு அங்கியை அணிந்தவாறு சில வழக்குகளை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கைவிடப்பட்டிருந்த ஒரு சிறுவர் கேளிக்கை பூங்காவில் இருந்த ஏற்ற இறக்க விளையாட்டு சாதனத்தின் கைபிடியில் ஏகே 47ன் பிரதிமை வடிவமைக்கப் பட்டிருந்தது, அதேவேளை பரிசுத்தமாக வைக்கப்பட்டிருந்த புலிகளின் சவச்சாலையில் போரில் கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் கல்லறைகள் வரிசையாக நீண்டிருந்தன. ஆனால் ஸ்ரீலங்கா இராணுவத்தால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டதாக தோன்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் 12 வயது நிரம்பிய பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் கசப்பான துயரம் நிரம்பிய படங்களை பார்த்தபோது, அந்த சுற்றுலாவைப் பற்றிய ஒரு அழிவில்லாத நினைவாக, சமீபத்தில் என் நினைவில் ஒரு விடயம் பொறிகிளப்பியது.

நல்லூர் கந்தசாமி கோவில் மைதானத்தில் புலிகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கண்காட்சியை காண நாங்கள் சென்றிருந்தோம்,அங்கு பாலச்சந்திரனைவிட இளமையான தோற்றத்தில் உள்ள 15 - 20 சிறுவர்கள் குழுவினரை காண நேர்ந்தது, அவர்கள் இராணுவ உடைகளுடன் தலையில் தொப்பி அணிந்து ஒற்றை வரிசையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். எங்கள் ஆச்சரியம் கலந்த பார்வையை கண்ட வழிகாட்டி, அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்சிப் படையினர் என விளக்கமளித்தார்.

அப்படியான நூற்றுக்கணக்கான சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகளிலிருந்து பலவந்தமாக கடத்தி வரப்பட்டு, பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகளினது வெறித்தனமான குறிக்கோள் மிக்க கனவுகளை நிறைவேற்றுவதற்காக பீரங்கித் தீவனம் போல பலியாக்கப்பட்டவர்கள். உண்மையில் எங்களில் சிலர் நாங்கள் தங்கியிருந்த சுபாஷ் தங்கு விடுதியிலிருந்து மெல்ல நழுவி வந்தபோது, சிறுவர் ஆட்சேர்ப்பு புலிகளினால் மிகவும் மூர்க்கத்தனமாக நடைபெறுவதால், இந்த குழந்தை அபகரிப்பை தடுப்பதற்காக அவர்களின் தாய் மற்றும் தந்தையர் பாடசாலை வாயிலுக்கு வெளியில் நின்று காவல்காத்து வருகிறார்கள் என்று நீண்டகாலமாக அங்கு தொடர்புள்ளவர்களால் எங்களுக்குச் சொல்லப்பட்டது.

அதேவேளை அநேகமான சிறுவர்கள் யுத்தத்துக்கு அனுப்பப்பட்டு தங்கள் விதியினால் பாதிப்புக்கு உள்ளானபோது, அப்போது பாலச்சந்திரன் இறந்தபோதுள்ள வயதளவில் இருந்த பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ், மற்றவர்கள் கனவில் மட்டுமே காணக்கூடியதாக உள்ள, விலையுயாந்த உடைகளும் மற்றும் காலணிகளும் அணிந்து ஒரு குளிருட்டப்பட்ட சொகுசு வாகனத்தில் பாடசாலைக்கு கொண்டுவந்து விடப்படுவதாக இரகசிய கிசு கிசுக்கள் உலவின.

எனவே விடுக்கப்படும் இந்த வேண்டுகோள், பாலச்சந்திரனுக்காக மட்டும் இல்லாமல், ஆனால் ஸ்ரீலங்கா மோதலில் ஏற்பட்ட போரில் தங்கள் உயிர்களை நீத்த பெயர் தெரியாத அந்த சிறுவர்களுக்காகவும் இருக்கவேண்டும்.

(பி.ஜெயராம் ஒரு மூத்த பத்திரிகையாளரும் மற்றும் கோயம்புத்தூர் அமிர்தா கல்வி நிறுவனத்தின் தொடர்பாடல் கல்வி பீடத்தின் தலைவரும் ஆவார்)

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல