வெள்ளி, 7 ஜூன், 2013

வெளிப்படுத்தாத அன்பால் யாருக்கு என்ன பலன்?- திருமதி சுஜாதா

நாடறிந்த எழுத்தாளர். தமிழ் உரைநடையை முற்றிலும் மாற்றி அமைத்தவர். ஒரு தலைமுறையையே வளர்த்து எடுத்தவர். நவீன அறிவியலை தமிழ் வாசகனுக்கு எளிமையாக புரிய வைத்தவர்… என்றெல்லாம் எழுத்தாளர் சுஜாதா குறித்து பக்கம் பக்கமாக பேசலாம். பாராட்டலாம். அப்படிப்பட்டவர், காலமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் ஒரு கணவனாகவும், தகப்பனாகவும் அவர் எப்படி இருந்தார் என்று மனம் திறந்து சொல்கிறார் திருமதி சுஜாதா. ‘‘சொந்த ஊர் வேலூர். அப்பா மின்சார வாரியத்தில் மேலதிகாரியா இருந்தார். கூட பிறந்தவங்க ஒரு தங்கை, இரண்டு தம்பி. நான்தான் மூத்தவள். வேலை காரணமா அப்பா அடிக்கடி டிரான்ஸ்பர்ல இருப்பார். அதனால நிறைய ஊர்களுக்கு போயிருக்கேன். பலதரப்பட்ட மக்களை சந்திச்சிருக்கேன்.

அரசுப் பள்ளிகள்லதான் படிச்சேன். எனக்கு வரையப் பிடிக்கும். சுமாரா வரையவும் செய்வேன். அதனாலயே விலங்கியல் துறைல பட்டப்படிப்பு முடிச்சேன். படிப்பு முடிந்ததும் கல்யாணமும் நடந்தது. எங்க திருமணம் நடந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். என் மாமனாரும் மின்சார வாரியத்துல உயர் பதவிலதான் இருந்தார். அதனால எங்க இரண்டு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அவங்க வீட்ல பெண் தேடிட்டு இருந்தாங்க. எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க.

ஒரு கட்டத்துல அவங்க வீட்ல என்னையே பெண் கேட்டாங்க. அவங்க வசதியான குடும்பம். அதனால அப்பா தயங்கினார். உடனே என் மாமனார், ‘உன் பெண்ணைத்தான் கேட்டேன். என்ன செய்யப் போறேன்னு கேட்கலை’னு சொல்லிட்டார். நல்ல சம்மந்தம் கிடைச்ச திருப்தியோட அப்பா எனக்கு திருமணம் செஞ்சு வைச்சார். 1963, ஜனவரில எங்க கல்யாணம் நடந்தது…’’ என மலரும் நினைவுகளில் மூழ்கிய திருமதி சுஜாதா, தன் குடும்ப வாழ்க்கையை குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘அவர் இயற்பியல் பட்டதாரி. பிறகு மின்னணுவியல் துறைல பொறியியல் படிப்பை முடிச்சிருந்தார். திருமணமானப்ப அவர் இந்திய சேவை தேர்வை எழுதி, பாசாகியிருந்தார். அதனால தில்லி விமான போக்குவரத்து துறைல அவருக்கு வேலை கிடைச்சது. அப்புறம் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துல வேலை பார்த்தார். ரிடையர் ஆனதும் சென்னை வந்துட்டோம். கல்லூரில படிச்சப்ப ‘சிவாஜி’னு ஒரு சிறுகதையை எழுதியிருக்கார். மாணவர்கள் மத்தில அது பிரபலம் ஆச்சு.

இந்தப் பாராட்டுத்தான் அவர் தொடர்ந்து எழுத தூண்டுகோலா அமைஞ்சது. அதுக்கு பிறகு வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு சிறுகதையை எழுதி வார இதழுக்கு அனுப்பினாரு. அது பிரசுரம் ஆச்சு. அப்ப அவர் முகத்துல பூத்த சந்தோஷம் இன்னமும் நினைவுல இருக்கு. தொடக்கத்துல ‘ரங்கராஜன்’னு தன்னோட இயற்பெயர்லதான் கதைகள் எழுதினாரு. ஆனா, ஏற்கனவே ரா.கி.ரங்கராஜன் புகழ்பெற்ற எழுத்தாளரா இருந்ததால என் பெயரை, தனக்கு புனைப் பெயரா வைச்சுகிட்டார்.

தொடர்ந்து அவர் எழுதின சிறுகதைகளும், குறுநாவல்களும், தொடர்கதைகளும் பத்திரிகைகள்ல வர ஆரம்பிச்சுது. ஆனா, வேலை பார்த்துகிட்டே அவரால நினைச்சா மாதிரி அதிகம் எழுத முடியலை. ஓய்வு பெற்று சென்னைக்கு நாங்க வந்த பிறகு தான் முழு நேர எழுத்தாளரா மாறினாரு. அவரோட சினிமா பயணமும் முழு வீச்சோட இந்த காலகட்டத்துலதான் நடந்தது. இடைல ஒரு வார இதழுக்கு ஆசிரியராகவும் ஓராண்டு இருந்தாரு…’’ என்று எழுத்தாளர் சுஜாதாவின் பயணத்தை சொல்லி முடித்த திருமதி சுஜாதா, தன் கணவர் ரங்கராஜன் குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘பொதுவா கலை உலகை சேர்ந்தவங்க வேற உலகத்துல வாழ்வாங்கனு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடா பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதிச்சதில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன்னு ஒரு வட்டத்துக்குள்ளயே இருப்பார்.

மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்கு கிடையாது. சுருக்கமா சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படி படிச்சாங்கனு கூட அவருக்கு தெரியாது. பசங்களா படிச்சாங்க… அவங்களா வேலையை தேடிக்கிட்டாங்க… அவங்களா பிடிச்ச பெண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை. இந்த மனநிலையை மனைவியான என்கிட்டயும் செலுத்தினாரு. நான் சாப்பிட்டனா, தூங்கினனா, எனக்கு என்ன வேணும்… எதையும் அவர் கேட்டதில்லை; செஞ்சதில்லை. அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்கு பிடிக்காது.

எப்பவும் சிந்தனைலயே இருப்பார். அவரை, அவர் போக்குல விட்டுடணும். தொந்தரவு செஞ்சா பிடிக்காது. குடும்பத்தை தாண்டி பெண்கள் வெளில வரக் கூடாதுனு நினைப்பார். இதுக்கு காரணம், அவர் வளர்ந்த விதம். அவரோட உலகம் ரொம்ப சின்னது. ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அஹ்ரகாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்த பிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகார பையனாதான் இருந்தார்.

ஆனா, எங்க வீட்ல அப்படி கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர்கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா கத்துக் கொடுத்தார். இதுக்காக ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரை கூட பிரைவேட்டா நியமிச்சார்னா பார்த்துக்குங்க. என் தங்கை டாக்டருக்கு படிச்சுட்டு அமெரிக்கால இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்காவுல செட்டிலாயிட்டான்.

இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான். இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைஞ்சதும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்ப சிரமப்பட்டேன். அப்புறம், என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்கு தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன். பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன்.

ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது. அட்ஜஸ் பண்ணிக்கன்னு சொல்வாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா, நிச்சயம் எங்கம்மாகிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்…’’ என்று சொன்னவரிடம், ‘உங்களிடம் அன்பு இல்லாமையா உங்கள் பெயரில் கதை எழுத ஆரம்பித்தார்?’ என்று கேட்டோம். நிதானமாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘அவருக்கு மனைவி, குழந்தைகள் மேல அன்பு இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்த தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? அவரை முழுசா புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷங்களாச்சு. அதுக்கு பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும் தனியா போக முடியாது. துணையா நான் இருந்தேன்…’’ என்றவர், தன் பிள்ளைகள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன், அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள், தமிழ்ப் பெண்களா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கலை. பெரியவன், பஞ்சாபி பெண்ணையும், சின்னவன் ஜப்பானிய பெண்ணையும் விரும்பி கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா, ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.

கிட்டத்தட்ட தென்னிந்திய பெண்களாவே மாறிட்டாங்க. என்னை கைல வச்சு தாங்கறாங்க…’’ என்று மலர்ச்சியுடன் சொன்னவர், இப்போதுதான் தனக்காக வாழ்ந்து வருவதாக சொல்கிறார். ‘‘இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பத்தான் எனக்காக வாழ ஆரம்பிச்சிருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கிற சின்னவனையும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போயிட்டு வர்றேன்.

விருப்பப்பட்ட புத்தகங்களை படிக்கறேன். ஆசைப்பட்ட டிவி நிகழ்ச்சிகளை பார்க்கறேன். என்னோட நேரங்கள், எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்கு கிடையாது. அதனாலயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்கு கத்துக் கொடுத்த பாடம் இது…’’ என்று சொல்லும் திருமதி சுஜாதா, கடைசி வரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.

- ப்ரியா @ தினகரன்
படம்: :பரணி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல