செவ்வாய், 16 ஜூலை, 2013

பொலிவான முகம் வேண்டுமா?

சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அத்தகைய அழகுப் பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் இதற்கு உதாரணம், ஒவ்வொரு நாளும் அன்றைய நாள் முடிவில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும்.

ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.

இதனால் சிலர் முகத்திற்கு சவர்க்காரம் அல்லது 'ஃபேஸ் வாஷ்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இருப்பினும், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்காமல், அவை வறட்சியான சருமத்திற்கு தான் வழிவகுக்கும்.

ஆகவே, பலர் இதற்காக 'ஃபேஸ் மாஸ்க்', 'ஸ்கரப்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆவி பிடிப்பதற்கு சமமாகாது. ஏனெனில் ஒருமுறை முகத்திற்கு ஆவிபிடித்தாலும், சருமத்துளைகள் நன்கு தளர்ந்து, அங்கு தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை முற்றிலும் அகற்ற முடியும்.

மேலும் ஆவி பிடித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை போக்கலாம். பொதுவாக ஆவி பிடிப்பது என்பது மிகவும் எளிமையானது. அத்தகைய ஆவி பிடிப்பதில் பல வழிகள் உள்ளன. அந்த ஆவி பிடித்தலின் பல்வேறு வழிகளைப் பார்ப்போம்.

சூடான நீர் ஆவி

ஆவி பிடிப்பதற்கு முன்பு, கூந்தலை நன்கு கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நன்கு கொதித்த சூடான நீரை ஊற்றி, அதற்கு அருகில் நீராவி முகத்தில் படுமாறு உட்கார்ந்து, வெளிக்காற்று உள்ளே புகாதவாறு ஒரு போர்வையைக் கொண்டு முற்றிலும் உடலை மூடிக் கொண்டு, 10- -15 நிமிடம் உட்கார வேண்டும். பின் முகத்தை ஒரு சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, பஞ்சில் சிறிது வினிகரை நனைத்து, முகத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

மூலிகை நீராவி

மூலிகை நீராவி, ஆவி பிடித்தலை இன்னும் சிறந்ததாக மாற்றுவதற்கு, கொதிக்கும் நீரில் சிறிது மூலிகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களானால், 'லாவெண்டர்' அல்லது சீமைச்சாமந்தி சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், 'சேஜ்' அல்லது ரோஸ்மேரியை சேர்த்துக் கொள்ளலாம். சாதாரண சருமம் உள்ளவர்கள், 'லாவெண்டர்' அல்லது ரோஸ் சேர்த்து, ஆவி பிடிக்கலாம்.

நீராவி இஸ்திரி பெட்டி

கொதிக்கும் நீரைக் கொண்டு ஆவி பிடிப்பதற்கு பதிலாக, நீராவி இஸ்திரிப் பெட்டி கொண்டும் ஆவி பிடிக்கலாம். இதுவும் சருமத்தில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் சருமத்துளைகளை அடைத்திருக்கும் தூசிகளை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, ஆவி பிடித்தப் பின்னர் மறக்காமல் 'மாய்ஸ்சுரைசர்' பூச வேண்டும்.

சுடுநீர் குளியல்

இன்னும் ஒரு சிறந்த வழியென்றால், சுடுநீரில் குளிக்கும் போது கூட, முகத்திற்கு எளிமையாக ஆவி பிடிக்கலாம். அதற்கு குளிக்கும் முன், குளியலறையின் ஜன்னல்களை நன்கு மூடி விட்டு, மிகவும் சூடான நீரிலிருந்து வெளிவரும் நீராவியில் சிறிது நேரம் முகத்தை வைத்து, பின் நீரை வெதுவெதுப்பாக்கி குளியலைத் தொடங்கலாம். இதனால் முகம் நன்கு சுத்தமாக புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

சுடுநீர் 'ஷவர்'

சுடுநீர் ஷவர் இருந்தால், ஷவரிலிருந்து வெளிவரும் நீர் மிகவும் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கதவுகள் மற்றும் ஜன்னல்களை காற்று புகாதவாறு நன்கு மூடி, சிறிது நேரம் ஆவி பிடித்து விட்டு, பின் முகத்தை நன்கு ஒரு சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரை தடவினால், முகம் பளிச்சென்று காணப்படும்.

குறிப்பு முகத்தை பொலிவாக்கும் வழிகளிலேயே ஆவி பிடித்தல் தான் மிகவும் சிறந்தது. எனவே, அவ்வப்போது முகத்திற்கு ஆவி பிடித்து வந்தால், முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல