வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

காசியில் அப்படி என்னதான் இருக்கு?

வயசானதுக்கு அப்பறம் ஏன் எல்லாம் காசிக்கு போகனும்னு நினைக்கிறாங்க?...காசியில் அப்படி என்னதான் இருக்கு?!......


வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி,தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும் மிகச் சில நகரங்களுள் முக்கியமானது.

இங்கு ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு முக்தி ஸ்தலா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடும் காட்சியானது, இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை வசியப்படுத்துவதாக உள்ளது. வாரணாசியின் முக்கிய படித்துறையில், ஒவ்வொரு மாலை வேளையும் ஆராதனை செய்யப்படுகிறது.

குளியல், ஆராதனைகள் மற்றும் பிணவெரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது. இவை தவிர, யோகா, மசாஜ்கள், சவரம்; ஏன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் கூட நதியோரங்களில் நடந்தேறுவதைக் காணலாம்.

வாரணாசி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


வாரணாசி உங்களுக்கு தெய்வீகத்தோடு உறவாடும் ஒரு நிகரற்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்நகரின் தனிச்சிறப்பு யாதெனின், அது கங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள் போல் அமைந்துள்ள படித்துறைகளே ஆகும்.

இங்கு காணப்படும் சில முக்கிய படித்துறைகளுள் ஒன்றான தசாஸ்வமேத் படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

தர்பங்கா படித்துறை, ஹனுமான் படித்துறை மற்றும் மன்மந்திர் படித்துறை ஆகியன இங்குள்ள மற்றும் சில படித்துறைகளாகும். உலகிலேயே வாரணாசியில் மட்டும் தான் இறப்பு சுற்றுலா வழங்கப்படுகிறது.

பிணங்கள் எரிக்கப்பட்டு பின் அஸ்தியை கங்கை நீரில் கரைக்கும் முழுநீளக்காட்சியைக் காணக்கூடிய மணிகர்னிகா படித்துறையையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிடுகின்றனர்.

அஸ்ஸி படித்துறையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றும் சில படித்துறைகள், துளசி படித்துறை, ஹரிஷ்சந்திரா படித்துறை, ஷிவாலா படித்துறை மற்றும் புகைப்படம் எடுக்கத்தக்க அழகிய காட்சிகளைக் கொண்ட கேதார் படித்துறை ஆகியனவாகும்.

வாரணாசி சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படுவதனால் இங்கு காஷி விஷ்வநாத் கோயில், புதிய விஷ்வநாத் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

துளசி மானஸ் கோயில் மற்றும் துர்க்கை கோயில் ஆகியன இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிற கோயில்களாகும். முஸ்லிம்கள் அலாம்கீர் மசூதி மூலமாக இங்கு தங்கள் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டியுள்ளனர். ஜைனர்கள் இங்குள்ள ஜைனக் கோயிலில் மன ஆறுதல் பெறுகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து, ஆற்றின் மறு கரையில் ராம்நகர் கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் ஒரு ஆய்வகம் ஆகியவற்றையும் வாரணாசியில் காணலாம்.

மிக அமைதியான ஒரு வளாகத்தில் பரந்து விரிந்து காணப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாகவும் இந்நகரம் விளங்குகிறது.

இப்பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அறியப்பட்ட பெருமை வாய்ந்ததாகும். இந்நகரம் பாரம்பரிய நடனம், இசை மற்றும் யோகா ஆகியவற்றிற்கான பிரபலமான மையமாகவும் போற்றப்படுகிறது.

வாரணாசிக்கு செல்வது எப்படி?


சாலை, இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகள் மூலம் வாரணாசியை எளிதாக அடையலாம். இது தனக்கென ஒரு சர்வதேச விமான நிலையத்தைப் பெற்றுள்ள பெருமை வாய்ந்தது.

வாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம்


அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே வாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல