சனி, 14 செப்டம்பர், 2013

“புலிகள் இல்லை என்றவுடன் விக்னேஸ்வரன் என்ற பூனை நட(ன)மாடுகிறது” -சீமானின் நாம் தமிழர் கட்சி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனை ‘பூனை’ என்று தெரிவித்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி, “விக்னேஸ்வரன் கொழும்புவில் நீதிபதியாக வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்தவர். அவரெல்லாம் தமிழினத்தின் முதலமைச்சர் வேட்பாளரா?” என்று போட்டுத் தாக்கியுள்ளது.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைவிடத்தில் பதுங்கியுள்ளார். அவர் விரையில் வந்து தமிழ் மக்களுக்கு ஆவன செய்வார்” என்ற கொள்கையுடைய நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே, “புலிகள் இல்லை என்றவுடன் விக்னேஸ்வரன் பூனை நடமாடுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. (என்னது… புலிகள் இல்லையா?)

இந்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள்.

ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரி்யாதோ?

ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ?

அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.

இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர்.


எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.

“இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம்” என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்!

சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.

இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது?

இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது” என்று கூறப்பட்டுள்ளது.

விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதே ‘சதித் திட்டம்’ என்று செந்தமிழன் சீமான் கட்சி கூறியுள்ளதால், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றிய கயவர்கள் யார் என்பதையும், சீமான் படையணி தெரிவிக்கும் என்ற நம்பிக்கை ஈழத் தமிழர்களுக்கு ஏற்படலாம்.

முன்பெல்லாம், தமக்கு எதிராக அரசியல் செய்தவர்களை ‘மேலே அனுப்பி வைப்பது’ விடுதலைப் புலிகளின் வழக்கம். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் எம்.பி. ஆகியோரில் இருந்து அந்தப் பட்டியல் நீளமானது.

சீமானின் நாம் தமிழர் கட்சி கூறுவதுபோல விக்கினேஸ்வரன் ‘தமிழினத்தின் துரோகி’ என்றால், அதே சீமானின் நாம் தமிழர் கட்சி கூறுவதுபோல, ‘மறைவிடத்தில் பதுங்கியுள்ள’ பிரபாகரன், விக்கினேஸ்வரனுக்கு செய்ய வேண்டிய ‘சிருஷையை’ செய்வார் அல்லவா?

எனவே விக்கினேஸ்வரன் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. தலைவர் பார்த்துக்கொள்வார்.

நாம் தமிழர் கட்சி, “விக்கினேஸ்வரன் வெறும் பூனை என்பதை, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறுவது உண்மையாக இருந்தால், அப்போதும், விக்கினேஸ்வரன் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டும் நடைபெறாவிட்டால்தான் கவலைப்பட வேண்டும், நாம் தமிழர் கட்சியும், சீமானும்.

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல