சனி, 5 அக்டோபர், 2013

சமஷ்டிக் கோரிக்கை அன்றும் இன்றும்

சமஷ்டி என்னும் தீர்ப்பை இனப்பிரச் சினைக்கு முன் னுரையாக எழுதி யவர்கள் சிங்களத் தலைவர்களே. அதில் பிரதான முன்னோடியாக இருந்தவர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இலங்கை தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றின் மூலமே நாட்டின் இறைமையையும் இனச்சமநிலையையும் பேண முடியுமென்ற கருத்தேற்பு கடந்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த போதும் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களும் கணிப்பீடுகளும் அரசாங்கத்துக்கு அரசாங்கம் மாறுபட்டே வந்துள்ளன.

ஒரு காலத்தில் இத்தகைய தீர்வொன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுவோமென வாக்குறுதி அளிக்கும் நிலையம் மறுகாலத்தில் அதனை மறந்து விடுகின்ற அல்லது தட்டிக் கழிக்கின்ற நிலையையுமே கடந்தகாலங்களில் ஆட்சி பீடமேறிய இலங்கை அரசாங்கங்கள் செய்து வந்திருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின்னுள்ள 14 பொதுத் தேர்தல்களிலும் மாறி மாறி ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரச பீடம் ஏறிக்கொண்டிருந்த போதிலும் தீர்வுக்கான தீர்க்கமான எந்த முன்மொழிவையும் வைக்கவில்லையென்பதே பொதுவான உண்மை. முப்பது வருட கால ஜனநாயக யுத்தமாக இருந்தால் என்ன அதன் பின்னே வெடித்துக் கொண்ட ஆயுதப் போராட்டமாக இருந்தாலென்ன அதைத் தொடர்ந்து பரிணாமம் கொண்டுள்ள இராஜதந்திர வியூகமாக இருந்தாலென்ன எல்லாமே ஒரு வெற்றுப் புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கைங்கரியமாகவே மக்களால் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அகிம்சைப் போர் ஒன்றை தந்தை செல்வா ஆரம்பித்த போது கத்தியின்றி இரத்தமின்றி பெறக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வொன்றைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தது மாத்திரமின்றி தமிழ் மக்களிடமும் தனது தர்க்க ரீதியான நியாயத்தால் அவர்களை ஏற்கவும் வைத்தார், பிரிபட்டுப் போகாத ஒரு நாட்டுக்குள் பிரிபட விரும்பாத ஒரு சமூகம் அல்லது இனம் பெறக்கூடிய உரிமை சார் விடயத்தை அவர் சமஷ்டியென வரைவிலக்கணப்படுத்தியிருந்தார். அதை அன்றைய இனவாதக் கட்சிகளும் தலைவர்களும் வேறுபட்ட வியாக்கியானத்தை கொடுத்து இன விரிவுக்கான பல்வேறு பாடங்களை நடத்தினார்கள்.

13.4.1951 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் தந்தை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சமஷ்டி அமைப்பிலே தமிழ் பேசும் பிரதேசம் மாகாண சுயாட்சி கொண்டு இயங்கும், இதையே நாம் வேண்டி நிற்கின்றோம்.

இதுவே நிறைவான ஜனநாயக முறை ஒவ்வொரு சமூகத்துக்கும் ஆளுகையில் சமபங்கு இருக்க வேண்டும். இரு மொழி வாரி இனங்கள் வசிக்கும் இலங்கையில் இரு இனங்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொரு இனத்துக்கும் மாகாண சுயாட்சி கிடைக்க வேண்டுமென தந்தை மிக தெளிவாக வலியுறுத்தியும் கூறியிருந்தார்.

அவரின் அன்றைய கருத்துக்கு பிழையான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை நடைபெற்று முடிந்த இனக்கலவரங்கள், போராட்டங்கள், சத்தியாக்கிரகம், சிங்கள ‘ஸ்ரீ’ போராட்டம், படுகொலைகள், ஒப்பந்தக் கிழிப்புக்கள் என்ற இன்னோரன்ன கொடூரங்களும் தலையீடுகளும் இல்லாமல் போயிருக்கும்.

சமஷ்டி என்னும் தீர்ப்பை இனப்பிரச்சினைக்கு முன்னுரையாக எழுதியவர்கள் சிங்களத் தலைவர்களே. அதில் பிரதான முன்னோடியாக இருந்தவர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

1926 ஆம் ஆண்டையொட்டி ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தனதாக்கிக்கொள்ள எத்தனித்த புத்திஜீவியான பண்டாரநாயக்கா அரசியல் சமத்துவம் சார் கொள்கை மீது நாட்டம் கொண்டவராக பல்லின சமூக அமைப்பொன்றின் நடுத்தன்மையான அரசியல் வலு சமூகங்களுக்கிடையே பிரிவு வாதத்தைக் கொண்டு வந்து விடும் என்பதை உணர்ந்தவராக சமஷ்டியே இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருத்தமானதும் ஏற்புடையதானதுமென வரிந்து கட்டிக்கொண்டு கூறி வந்தார். கூறி வந்தது மாத்திரமல்லாமல் டொனமூர் குழுவினர் 1931 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சம்பந்தமாக மக்களிடம் அபிப்பிராயம் கோரிய போதும் சிங்கள மகா சபை சார்பில் சாட்சியமளித்த பண்டாரநாயக்க மூன்று அலகுகளைக் கொண்ட கூட்டாட்சி மூலமான அரசியல் தீர்வைத் தருமாறு டொனமூர் ஆணைக்குழுவை கோரியதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இவ்வாறு சிங்களத் தலைவர்களால் முன்னுரை எழுதி தொடக்கப்பட்ட ஒரு விவகாரமாகவே சமஷ்டி அமைப்பு என்னும் கருவூலம் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருட்டுணர்வுகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி என்பதை முன்மொழிந்தார்கள்.

இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் (23.08.1947) கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பண்டாரநாயக்க சுகாதார அமைச்சராக இருந்தவர் 1951 அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி (2.9.1951) 1952 ஆம் ஆண்டு தேர்தலில் இறங்கிய பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கை சமசமாஜ கட்சி, விப்லவக்காரி கட்சி, மொழிகள் முன்னணி, மஹாஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கி சிங்கள பெரும்பான்மையை திருப்திப்படுத்த 5.06.1956 சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து மொழித் தன்மையான பேரினவாதமொன்றை உருவாக்கினார்.

இதனை சமாளிக்கவே பண்டாரநாயக்க பண்டா- செல்வா உடன்படிக்கை (27.7.1957) கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் படி வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும் கிழக்கு மாகாணம் இரண்டிற்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் உள்ளடக்கியதாக அமையுமெனவும் அவர்கள் இணக்கம் கண்டனர். இந்த இணக்கப்பாடானது சமஷ்டித் தன்மை வாய்ந்த ஒரு கூட்டாட்சிக்கு கொண்டு செல்லும் என நம்பப்பட்டது. முடிவில் நடந்ததென்ன ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.

சமஷ்டி முறையொன்றின் மீது தமிழ் பேசும் மக்கள் பிரீதி கொள்ளக் காரணமாக இருந்தவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் என்று வர்ணிக்கப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான சுமூகமானதும் இலகுபடுத்தப்பட்டதுமான ஒரு தீர்வாக சமஷ்டி அமைப்பு முறை உதவ முடியும். உலக சனத்தொகையில் 40 வீதமான மக்களைக் கொண்டுள்ள சுமார் 28 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை சமஷ்டி ஆட்சி கொண்டதாகவோ அல்லது தாங்கள் இவ்வாட்சியை உடையவர்கள் என்று கருதுவது.

அதிக அளவிலான நிலப்பரப்புக்களைக் கொண்டுள்ள அல்லது சனத்தொகையை கொண்டுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்துமே ஒட்டுமொத்தமாக சமஷ்டி நாடுகளாக காணப்படுகின்றமை.

முன்னர் ஒற்றையாட்சி நாடுகளாகக் காணப்பட்ட பெல்ஜியம், எத்தியோப்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தம்மை சமஷ்டி நாடுகளாக மாற்றிக் கொண்டமை. உள்நாட்டுப் போருக்குப் பின் சமஷ்டி முறையை அமுல்படுத்திய நாடுகளாக பொஸ்னியா, கொங்கோ, ஈராக், சூடான் மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகள் காணப்படுகின்றமை ஐரோப்பிய ஒன்றியமும் சமஷ்டி முறையின் பல்வேறு இலக்கணங்களைக் கொண்டுள்ள அனுபவத்தின் அடிப்படையிலேயே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திலும் சமஷ்டி முறையான தீர்வொன்றை தமிழ் மக்கள் கை நீட்டி வரவேற்க முற்பட்டார்கள்.

சமஷ்டியென்பது எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் ஒருமித்த போக்கும் பண்பும் கொண்டதாக இருக்கின்றது எனக் கருதி விட முடியாது.

சமஷ்டி முறைகள் அவற்றின் சமூக பொருளாதார தொகுப்பின் அடிப்படையிலும் நிறுவன அடிப்படையிலும் பாரியளவில் வித்தியாசம் கொண்டவை.

ஒவ்வொரு சமஷ்டி முறையும் தமக்கென்று கொண்டுள்ள நிறுவன ஒழுங்குகள் அடிப்படையில் பெரிதும் வேறுபடலாம். அதிகமான சமஷ்டிகளில் மத்திய அரசாங்கம் சமஷ்டி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அதேவேளை, இந்தியாவில் மத்திய மாநில அரசு என்றும் ஸ்பெயினில் அரசு என்றும் தென்னாபிரிக்காவில் தேசிய அரசாங்கம் என்றும் அவுஸ்திரேலியாவில் பொது நலவாய அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது.

தங்களுக்குள்ள தேசியப் பொறுப்புக்களை குறித்துக் காட்டும் முகமாக மத்திய அரசென்றோ மாநில அரசென்றோ அழைத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணமாக சுவிட்சர்லாந்தில் மூன்று மொழிவாரி இனங்கள் இருக்கின்றன. ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி, அங்கே நிலவுவது சமஷ்டி ஆட்சி முறை அதன் காரணமாக ஒவ்வொரு இனமும் தாம் வாழும் பிரதேச எல்லைக்குள் சுய நிர்ணய உரிமை கொண்டவர்களாக வாழுகிறார்கள். ஜேர்மனியர் 60 வீதத்துக்கு மேற்பட்டோராகக் காணப்படினும் அங்குள்ள கூட்டாட்சி முறை மூன்று இனத்துக்கும் சமவாய்ப்பும் சுய தத்துவ ஆட்சியையும் வழங்கியிருக்கின்றதென்றே கூற வேண்டும். இவ்வாறு சமஷ்டி ஆட்சி நிலவும் ஆர்ெஜன்டீனா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பொஸ்னியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொமோரஸ், கொங்கோ, எத்தியோப்பியா, ஜேர்மன், இந்தியா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, ரஷ்யா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சூடான், சுவிட்சர்லாந்து, வெனிசுலா, எமிரேட்ஸ், அமெரிக்க ஐக்கிய அரசுகள் போன்ற நாடுகளில் சமஷ்டி முறையிலான ஆட்சி மிகவும் தெளிவான அதிகாரப் பகிர்வு கொண்டவைகளாகவும் அதேவேளை, சுய நிர்ணய வலுக்கொண்டவையாக காணப்படுவதையும் அறியக்கூடியதாகவுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டத்துடன் மங்கிப் போன நிலை காணப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வுகளுக்கு அப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் உயிரூட்டம் கொடுக்கப்பட்ட நிலையில்தான் சமஷ்டி பற்றிய கெடுபிடிவாதம் பேரினவாத கட்சிகளாலும் இனவாதத் தலைவர்களாலும் இன்று தலை நீட்டிக் கொண்டு நிற்கின்றது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியீடு செய்யப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில் சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் சமஷ்டியென்னும் ஊற்றுக்கண்ணிலிருந்து தான் அதிகாரப் பகிர்வோ இல்லை இனப்பிரச்சினைக்கான தீர்வோ கொண்டு வரப்பட வேண்டுமென்ற மூல நியதியை கூட்டமைப்பினர் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உருவாக்கியிருந்தார்கள் என்பதே யதார்த்தம். இத்தகைய சமஷ்டி வரைவிலக்கணப்படுத்தல் என்பது தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் மிக நீண்ட சங்கிலித் தொடராகவே இருந்து வந்துள்ளது. ஈழப்போர் முடிவு கட்டப்பட்டதாக கூறப்பட்டு மறு வருடமே வைக்கப்பட்ட 14 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் முன் வைக்கப்பட்ட 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சமஷ்டி என்னும் கருப்பொருளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுக்கப்பட்டதைக் காண்கின்றோம்.

உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியில் அமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டி கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டு எடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்ற கருத்தை 2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனம் வலியுறுத்தி நின்றது.

பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரை சமஷ்டி முறையிலான தீர்வொன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்படுமாயின் அது தனி நாட்டுக்கான நடுகல்லாய் ஆகிவிடும். பிரிவினைக்கான தளமாக அமைந்து விடுமென்ற தவறான அர்த்தப்பாடுகள் அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டதன் காரணமாகவே சமஷ்டியென்னும் வார்த்தைகள் மீது பேரின சமூகம் கடுங்கோபம் கொள்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தங்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பேரின சமூகத்துக்கு இனவாத மகுடியை ஊதி ஊதியே தமது காரியங்களை தேசியக் கட்சிகள் சாதித்து வந்தமையைக்காணுகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியென்ற இரண்டு அச்சாணி கொண்ட தேரில் நகரும் ஆட்சி அமைப்புக்களே சுதந்திர இலங்கையின் வரலாறாகக் காணப்படுகின்றது. இவையிரண்டும் சிறுபான்மைச் சமூகத்தின் மீது கழிவு இரக்கம் கொண்டதாக நடிக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நெகிழ்வு தன்மை கொண்டவையாக தமிழர் தரப்பினர் இருந்து விட்ட காரணத்தினாலேயே இன்றைய இந்த கூட்டு மொத்த விளைவை அனுபவிப்பவர்களாக தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாகாண சபையொன்றின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக தமிழ் மக்கள் ஆரம்பம் முதல் இருந்து வந்துள்ள போதும் வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது (19.11.1988) அதை கையகப்படுத்தும் சுதந்திரம் இல்லா நிலை ஒருபுறமும் அதிகார பகிர்வு வலுக்குறைவாக காணப்படும் இம்மாகாண சபை முறையானது ஆனைப் பசிக்கு சோளப் பொரி போட்ட கதையாகி விடும் என்பதனாலும் வடக்கு - கிழக்கிலுள்ள 80 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் அதை வரவேற்காத நிலையிலேயே அது தோல்வி கண்டது எனப் பேசப்படுகிறது.

இன்னொரு பக்கமாகப் பார்க்கப் போனால் அதிகாரப் பகிர்வை முழுமையாக பெற முடியாத பலவீனம் காரணமாக இதன் மீது கொண்ட நம்பிக்கையை இதை ஆட்சி செய்தவர்களே இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இம்மாகாண சபை ஒன்றின் மூலம் அதிகாரப் பகிர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்ற வாதமும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் ஏற்றுக்கொண்ட மாகாண சபையை ஆள வேண்டுமென்ற சூழ்நிலை விரித்து விடப்பட்டதே தவிர அடுத்த கட்ட நகர்வுக்கான ஒரு சூத்திரம் இந்த மாகாண சபையென்பதை மாகாண ஆட்சியாளர்களும் இந்திய அரசாங்கமும் மக்களுக்கு புரிய வைத்திருப்பார்களேயானால் ஒருவேளை வட கிழக்கு மாகாண சபை சமஷ்டி தீர்வை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கலாம்.

வடமாகாண சபைத் தேர்தலின் போது மாகாண சபை முறையென்பது தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வாக இருக்க முடியா விட்டாலும் அதை அடைவதற்கான படிக்கல்லாக அமைய முடியுமென்ற கருத்து மக்கள் மத்தியில் ஓரளவு விதைக்கப்பட்டதன் காரணமாகவே வடமாகாணத் தேர்தலில் மக்கள் ஒருமித்த ஆதரவை வழங்கியிருப்பதை கண்டு கொண்டோம்.

வட- கிழக்கைப் பொறுத்த வரை சமஷ்டித் தன்மையான ஒரு ஆட்சி முறையை அவர்கள் நீண்டகாலமாக கோரி வந்தமைக்கான காரணிகளின் பின்னணி உள்ளக அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியாப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. குறிப்பாக சிறுபான்மைச்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரசியல் பலாத்காரங்கள் மற்றும் நெருக்கடிகள் அரசியல் இறுக்கங்கள் அவர்களை அந்நியப்படுத்தி விட்டமையே காரணங்களாக இருந்திருக்கின்றன. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதியவர்கள் மனித உரிமையென்ற போர்வையில் பெரிய நாடுகள், சிறிய நாடுகள் மீது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கின்றன எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதே கருத்தை திரும்பி பார்க்கின்ற போது இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் மீது பெரும்பான்மைச் சமூகம் காட்டி வரும் ஆட்சிச்செருக்கு, ஆதிக்க திணிப்புக்கள், சிறுபான்மைச் சமூகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதும் உரிமைகள் மீதும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன என்பதை உணரத் தவறியுள்ளார்களா என வினவ வேண்டியுள்ளது.

இலங்கை போன்ற நாடொன்றில் அங்கு வாழும் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடர்ந்தேர்ச்சியாக திணிக்கப்பட்டு வரும் அரசியல் பலாத்காரங்களும் சமத்தன்மை பேணாத அரசியல் பொருளாதார நடவடி க்கைகளுமே அவர்களை சமஷ்டி போன்ற தீர்வை கோர வைத்துள்ளது என்பது உலகநாடுகளின் அனுபவ ரீதியான உண்மைகளா கும்.

திருமலை நவம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல