ஞாயிறு, 12 ஜனவரி, 2014

உடைந்த வீட்டின் சுயசரிதையுடன் செஞ்சோலை மாணவி!

குமரன் பத்மநாதனால் நடத்தப்படுகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளில் ஒருவர் தங்கரத்தினம் தனுசியா. இவர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் படிப்பவர்.

உடைந்த வீட்டின் சுயசரிதை என்கிற தலைப்பில் வட மாகாண பரீட்சைக்காக இவர் எழுதிய கட்டுரை இதுதான்......



"நான் ஒரு வீதி ஓரமாய் சென்று கொண்டிருந்தபோது பரிதாபமான குரல் ஒலித்தது. திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தேன் யாருமில்லை. யாருமில்லையே என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பிச் சென்றேன். அப்பொழுதும் ஒரு குரல் ஒலித்தது. சற்று திரும்பிப் பார்த்தேன். வீதியருகில் ஒரு உடைந்த வீடு இருப்பதைக் கண்டேன். எனக்குள் ஒரு உணர்வு எழுந்தது. இந்த வீடுதான் என்னைக் கூப்பிடுகிறதோ! என்று.

அப்போது அந்த வீடு, நான்தான் உன்னை அழைத்தேன் என்று கூறியது. அந்த உடைந்த வீட்டை பார்க்கும்போது பரிதாபமாகவும், இரக்கமாகவும் இருந்தது. நீ ஏன் என்னை அழைத்தாய்? என்று கேட்டபொழுது உடனே தன் சுயசரிதையை சொல்லலாயிற்று.

நான் முன்னொரு காலத்தில் அழகான, மிகவும் எல்லோர் மனதையும் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தேன். குரங்கு தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது போல நானும் ஒரு குடும்பத்தைச் சுமந்து வந்தேன். அப்போது நான் அழகு என்றபடியால் என்னை மிகவும் அந்த குடும்பத்தார் நேசித்தார்கள். இவ்வாறு நானும் அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக இருந்தேன்.

இப்படியாக எனது வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென்று ஒரு யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் காரணத்தால் எல்லோரும் பாதுகாப்புக் கருதி தங்களுடைய வீடுகளையும், உடைமைகளையும் விட்டு இடம்பெயர்ந்து சென்றார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் என்னோடு இருந்தவர்களும் என்னைத் தன்னந்தனியாக விட்டு விட்டு வேறொரு இடத்திற்குச் சென்றுவிட்டார்கள்.

அப்போது என்னை தனிமை வாட்டியது. இந்த யுத்தத்தால் எனது உடற்பாகங்கள் ஒவ்வொன்றாக படுகாயங்களுக்கு உட்பட்டு சேதம் அடைந்தன.

சேதமடைந்ததால் நான் வருந்தவில்லை. என்னோடு கூட இருந்தவர்கள் இல்லாமல் போனதை நினைத்து வருந்துகிறேன்.

முதல் பூஞ்சோலை வனமாக காணப்பட்ட நான் இப்போது செடி, கொடிகள் படர்ந்து காடுகளாகி அழகற்றவனாக தோற்றமளிக்கிறேன். முதல் என்னைப் பராமரித்தவர்கள் இப்போது இல்லாதபடியால்தான் இவ்வாறு தோற்றமளிக்கிறேன்.

தனியாக இருக்கிறேன் என்று நினைத்து வருந்தி அழுது கொண்டிருக்கும் வேளையில் நீ வீதி ஓரத்தில் சென்றாய்.

நான் இதை ஒருவரிடம் கூறினால்தான் என் மனம் ஆறுதலடைந்து இன்புறும் என்று உன்னை அழைத்து என்னுடைய வாழ்க்கையை உன்னிடம் கூறினேன் என்று அந்த உடைந்த வீடு தன் சுயசரிதையை கூறியது.

நான் இதை கேட்டவுடன் கவலையுடன் எனது வீட்டுக்குச் சென்றேன். இந்தக் கதையை மறக்க முடியாமல் தவித்தேன். இப்போது ஆறுதலடைகிறேன்."
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல