சனி, 25 ஜனவரி, 2014

அங்கே என்ன தெரிகிறது... ?

நாசாவின் ஆப்பர்சூனிட்டி செவ்வாய் விண்கலம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆப்பர்சூனிட்டியை செவ்வாய்க்கு அனுப்பி 10 வருடங்களாகி விட்ட நிலையில் தொடர்ந்து அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை அவ்வப்போது நாசாவுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய விஷயத்தை நாசாவுக்கு அது தெரிவித்துள்ளது.



வெறும் 3 மாத காலத்திற்குத்தான் இதைத் திட்டமிட்டு நாசா அனுப்பி வைத்தது. ஆனால் பத்து ஆண்டுகளாக இது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு சிறிய பாறை போன்ற துண்டின் வடிவத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது ஆப்பர்சூனிட்டி. இந்த மாதிரியான பாறை, செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் வேறு எங்கும் இதுவரை பார்க்கப்படவில்லை என்பதால் இது கியூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது.

ஜனவரி 8ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாறை உள்ள இடத்தில் 2 வாரங்களுக்கு முன்பும் ஆப்பர்சூனிட்டி ஒரு படம் எடுத்திருந்தது. அப்போது இந்தப் பாறை வடிவம் அந்த இடத்தில் இல்லை. இதனால் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பர்சூனிட்டியின் முதன்மை ஆய்வாளர் ஸ்டீவன் ஸ்கியர்ஸ் கூறுகையில், இது வினோதமாக உள்ளது. ஆனால் மிகப் பெரிய அதிசயம் எதுவும் அந்த இடத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.

ஆப்பர்சூனிட்டி விண்கலமானது, உயர்ந்த இடத்தில் உள்ளது. அதாவது ஒரு குன்றுப் பகுதியில் உள்ளது. விண்கலத்தின் முன்சக்கரம் பல காலமாக இயங்காமல் இருந்து வருகிறது. அது தற்போது நகர்ந்திருக்கிறது. எனவே அதில் சிக்கி பாறைத் துண்டு கீழே வந்து விழுந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்றார்.

ஆனால் இதுபோன்ற பாறையை இதுவரை எந்த இடத்திலும் பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே இந்த பாறை உருவம் நிச்சயம் புதிய விஷயம்தான் என்பது நாசாவின் கருத்தாகும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி தொடர்ந்து ஏதாவது ஒரு புதிய விஷயத்தை அனுப்பியபடியே உள்ளது. இது அனுப்பப்பட்ட சில மாதங்களிலேயே ஒரு பிரச்சினையை சந்தித்தது. அதாவது இதன் சூரிய தகடுகளில் தூசி படிந்தது. இதனால் அது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பேட்டரியும் தீரும் நிலைக்குப் போனது. ஆனால் திடீரென ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றத்தால் பலத்த காற்று அடித்து சூரிய தகடுகளில் படிந்திருந்த தூசி அகன்றது, பேட்டரியும் தப்பியது. அதன் பிறகு தங்கு தடையின்றி அது செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆப்பர்சூனிட்டியுடன் சேர்த்து அனுப்பப்பட்ட ஸ்பிரிட் 2009ம் ஆண்டு மணலில் சிக்கிக் கொண்டது. 2010ம் ஆண்டு அது செயலிழந்து போனது.

முதலில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரைக்குத்தான் ஆப்பர்சூனிட்டி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இதுவரை 38.7 கிலோமீட்டர் வரை நகர்ந்து போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் படங்களையும் அது அனுப்பி குவித்துள்ளது.

தற்போதும் அது நல்ல நிலையில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதேசமயம், அதில் பொருத்தப்பட்டிருந்த 2 அறிவியல் உபகரணங்களும், ஒரு ரோபோட்டிக் கையும் செயல்படவில்லை, செயலிழந்து போய் விட்டன. மற்ற பாகங்கள் நல்ல நிலையில் உள்ளன.

சில நேரங்களில் இதற்கு அம்னீஷியா பிரச்சினையும் வந்து விடும். அதற்குக் காரணம், அதில் உள்ள மெமரி சிப்கள் பொருத்தி நீண்ட காலமாகி விட்டதால். பின்னர் அதுவாகவே செயல்படத் தொடங்கும்.

ஆப்பர்சூனிட்டியால் வருடத்திற்கு 14 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல