சனி, 8 மார்ச், 2014

மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்?: வியத்தகு அனுபவமொன்றை புத்தகமாக எழுதியுள்ள அமெரிக்க தாதி

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு தாதி ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் தொடர்பிலான ஒரு புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.



மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க தாதி ஒருவர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு தாதி என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அபூர்வமான நிகழ்வை கண்டேன்.

'டொம் கென்னார்ட் எனும் 60 வயதுடைய புற்று நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. என்னுடைய எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை.


வெகுவேகமாக அவரது தோல் ஈரமானது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஏனைய தாதியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டொம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டொமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டொம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் அதிர்ச்சியடைந்தேன்.

அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். அதாவது முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான்(தாதி) லொலிபொப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டொம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன்.

திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் உடற்பயிற்சி (பிசியோதெரபி) மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டொம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை குறித்த தாதி தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல