செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானத்தின் பாகம்... குழப்பும் ஆஸி. கடலாய்வு நிறுவனம்

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.


இந்நிலையில், இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட்டை தலைமையமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவனம் கூறியதாக ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கடலாய்வு நிறுவனம் சுமார் 2,000,000 சதுர கிலோ மீட்டர் பகுதியில் தேடியுள்ளதாகவும், செயற்கைக்கோள் மற்றும்விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர் என்று கடலாய்வு நிறுனவத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறியுள்ளார்.

அதேபோல், விமானத்தைத் தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை கடலாய்வு நிறுவனம் பயன்படுத்தியதாக டேவிட் தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானம் மாயமாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது மார்ச் 5ம் தேதி இந்நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில் எதுவும் காணப்படவில்லை. ஆனால், இப்போது சில பாகங்கள் மிதக்கின்றன. அதற்காக இவை மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் எந்த கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரகுமான், நாங்கள் இந்த தகவலை ஆய்வு செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல