புதன், 25 ஜூன், 2014

இனவாதத்தை கைவிடாதவரை இலங்கைக்கு விடிவில்லை

இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை ஊக்கப்படுத்துது. பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது. அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் எண்டு அது நினைக்குது. முந்தி இப்பிடித்தான் நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது' எண்;டு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ...

இதைக் கேட்டபோது எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

இது என்ன பெரிய கண்டு பிடிப்பு? முந்தநாள் பிறந்த சின்னக்குழந்தைக்குக்கும் இந்தச் சங்கதிகள் நல்லாய்த்தெரியும்.

இப்பிடியிருக்க இந்தக் கண்டு பிடிப்பைச் செய்யிறதுக்கு விமல் வீரவன்ச தேவையா? இதைச் சொல்லிறதுக்கு ஒரு தகுதி இந்த விமல் வீரவன்சவுக்கு இருக்கோ...

இலங்கையின் இனப்பிரச்சினையைச் சிக்கலாக்கியதில விமல் வீரவன்சவுக்கும் அவரைப்போல இருக்கிற இன்னும் கொஞ்சப்பேருக்குப் பெரிய பொறுப்பிருக்கு.

இந்த இனப்பிரச்சினையைத் தீர்க்கக் கூடாது எண்டு கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு வீரவன்ச தெருவில் நிண்டு கொண்டு நாட்டாண்மை செய்ததை ஆரும் மறந்து விடேல்ல.

இப்ப கூட சிங்களவர்களைத் தவிர, மற்றச் சனங்களைப் பற்றி – பிற இனங்களைப் பற்றி ஒரு நாள்தன்னும் விமல் சிந்திச்சிருப்பரோ? அவரைப்போல இருக்கிற சம்பிக்க ரணவக்க போன்ற ஆட்களும் மற்றவையளப்பற்றிச் சிந்திக்கிறது குறைவு.

எப்ப பாத்தாலும் ஏதோ சிங்கள ஆட்களுக்குத்தான் ஐம்புலன்களும் ஐஞ்சு வாசலும் இருக்கெண்ட மாதிரி ஒரு கதை.

இதைக் கேட்டால் மற்றப்பக்கத்தில இருக்கிற எல்லாரும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருப்பினமோ...

அவையும் கச்சையை இறுக்கிக் கட்டிக்கொண்டு தெருவில இறங்கி யாரிக்கு நிக்கினம்...

இப்பிடி இனவாதமாகச் சிந்திச்சுக் கொண்டு, ஆளாளுக்கு வெட்டுக்குத்துப் பட்டால் அமெரிக்கக்காரன் மட்டுமில்லை, மரஅட்டைகூட நம்மட தலையில அரப்பு வைக்கும்.

இனவாதப்பேயைக் கை விட்டால் பொதுபலசேனாவோடயும் கோவிக்கத் தேவையில்லை. அமெரிக்கக்காரனுக்குப் பயப்பிடத்தேவையுமில்லை.

இஞ்ச உள்ளுருக்க தமிழாக்களோடயும் முஸ்லிம் ஆக்களோடயும் புடுங்குப்பட வேண்டிவராது.

இதையெல்லாம் செய்யாமல் விட்டதாலதான் இந்தியா கூட வந்து மூக்கை நுழைச்சுது.

இப்ப கூட மோடியும் தமிழ்நாட்டு லேடியும் இலங்கையை வெருட்டிக்கொண்டிருக்கிறதுக்கும் என்ன காரணம்? இந்த இனப்பிரச்சினைதானே.

இந்த இனப்பிரச்சினையை வைச்சுத்தானே நோர்வேக்காரன்ர வடிவில அமெரிக்கக்காரன் இஞ்ச மூக்கை நுழைச்சவன்.

ஐ.நா கூட இதை வைச்சுத்தான் போர்க்குற்றங்களுக்கு விசாரணை வேண்டும் என்கிது.

போரும் போர்க்குற்றங்களும் ஏன் வந்தது? இனப்பிரச்சினையாலதானே!

இதையெல்லாம் விளங்காமல்தான் இந்த வீரவன்ச குழு அண்டைக்கு நோர்வேக்கு எதிராக கொழும்பில நிண்டு கலகம் செய்ததோ.

இதொண்டும் தனியே விமல் வீரவன்சவுக்கு இருக்கிற வருத்தம் இல்லை.

இலங்கையில கனபேருக்கு இந்த வருத்தம் இருக்கு.

இது ஒரு தீராத வியாதியாக அவையோட கூடிக் கொண்டிருக்கு. கனபேருக்கு இது ஒரு பரம்பரை வியாதியாகக் கூட மாறியிருக்கு.

இதில தமிழ் சிங்கள முஸ்லிம் எண்ட வேறுபாடெல்லாம் கிடையாது.

பொதுபலசேனாவுக்கு இவைதான் தாயும் தகப்பனும் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, அண்ணன், தம்பி எல்லாம்.

இந்த வருத்தக்காரை – நோய்க்கிருமியளை அழிக்காத வரையில இலங்கைக்குத் துன்பம்தான்.

ஊர் ரண்டு பட்டால் கூத்தாட்டிக்குக் கொண்டாட்டமாம். இது நாலுபட்டெல்லோ இருக்குது...

அப்பிடியெண்டால் எப்பிடியிருக்கும் எண்டு நினைச்சுப் பாருங்கோ...

- வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல