செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

கம்ப்யூட்டரில் நாம் தெரிந்தே செய்திடும் தவறுகள் சில....

1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல் வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.



2. ஒரே அழுக்கு: கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?

3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல்: நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால்தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?

4. பேக் அப்பா? அப்படின்னா? நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக்கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரிகள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)

5. விட்டேனா பார் வீடியோ: அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடுகிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?

6.ஷட் டவுண்: லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.

7. படுக்கையே தொழில் கூடமாக: லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்? (குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுடனேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)

8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்: பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்துவிடுகின்றனர். இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக்கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்பதில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றையும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.

9. உங்கள் பாஸ்வேர்ட்: ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன்படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?

10. பேட்டரி ட்யூனிங்: லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமையாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல