சனி, 27 டிசம்பர், 2014

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.



எப்போதும் இணைப்பில் வேண்டாம்: உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் செய்திடவும். அதன் பின்னர், அதன் சார்ஜ் 40% முதல் 80% வரை என்ற அளவில் இருக்க வேண்டும். பேட்டரியில் உள்ள எலக்ட்ரான்கள் எப்போதாவது அங்கும் இங்கும் நகர்வதற்கான இடம் இருக்க வேண்டும். இந்த குறிப்பினை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பேட்டரியை வைத்திருந்தால், பேட்டரியின் வாழ்நாள் நான்கு பங்கு அதிகரிக்கும். எப்படி இந்த அளவினைக் கண்காணித்து வைத்திருப்பது? என்று கேட்கிறீர்களா? இதனை கம்ப்யூட்டர் திரையின் ஓரமாகக் கவனிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கவில்லையா? உடன் அதனை ஆப் செய்து, மூடி, மின்சக்தியிலிருந்து விடுவித்து, வீட்டில் வைக்கவும். இதனை வைத்திடும்போது, ஏதேனும் ஒரு மேஜை அல்லது அதைப் போன்ற பரப்பில் வைக்கவும். மெத்தை போன்றவற்றில் வைக்க வேண்டாம். பேட்டரியின் வெப்பம் வெளியேறுவதனை மெத்தை போன்ற பரப்பு தடுக்கும். இது பேட்டரியின் வாழ்நாள் பயன்பாட்டினைக் குறைக்கும். அப்படிப்பட்ட பரப்பில் வைத்து இயக்குவதும் தவறு.

சார்ஜ் செய்தல்: மாதம் ஒருமுறையேனும், பேட்டரியை முழுமையாக (100%) சார்ஜ் செய்திட வேண்டும். அதே போல, ஒரு முறையேனும், முழுமையாக அதன் மின்சக்தியைக் காலி செய்து பின் சக்தி ஏற்ற வேண்டும். இந்த 'மாதம் ஒரு முறை' என்பதனை எதிலேனும், குறிப்பாக மொபைல் போனில், அல்லது கம்ப்யூட்டர் திரையில் உள்ள ஸ்டிக்கி குறிப்பில், எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் இது நினைவிற்கு வரும்.

குளிர்ச்சியாக இருக்கட்டுமே: தற்போது வரும் நவீன பேட்டரிகள் அனைத்தும், லித்தியம் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. எனவே இவற்றை 50 முதல் 95 பாரன்ஹீட் டிகிரி (10 முதல் 30 டிகிரி செல்சியஸ்) அளவில் வைத்திருக்க வேண்டும். இதனை நாம் எப்போதும் அளந்து வைத்திருக்க முடியாது. எனவே, நாம் பணியாற்றும் அறையைச் சற்றுக் குளிர் தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் காற்று வெளியேறும் வழிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெப்பக் காற்று விரைவாக வெளியேறுகிறதா என்பதனைக் கண்காணிக்க வேண்டும்.

அப்டேட் செய்திடுக: பல நிறுவனங்கள், தங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை மேம்படுத்துகையில், பேட்டரியின் திறனை மேம்படுத்தும் வழிகளையும் தங்கள் பைல்களில் தருகின்றன. எனவே, நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும் அவ்வப்போது, அப்டேட் செய்திடுவது பேட்டரியின் வாழ்நாட்களையும் அதிகரிக்கும்.

நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதல்ல: ஏதேனும் காரணத்தினால், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல், பல மாதங்கள் விட்டுவிடுவதாக இருந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும். பேட்டரியில் 50% மின் சக்தியுடன், குளிர்ச்சியான இடத்தில் அது வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தமாக மின் சக்தி இல்லாத நிலையில் உள்ள பேட்டரிகளுடன், லேப் டாப் கம்ப்யூட்டரைப் பல மாதங்கள் விட்டு வைப்பது, பின் எப்போதும் பயன்படுத்த இயலாத நிலைக்கு பேட்டரியைக் கொண்டு சென்றுவிடும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் மிக எளிமையாக மேற்கொள்ளக் கூடிய செயல்பாடுகளாகத் தெரிகிறதா? அப்படியானால், பின்பற்றத் தொடங்குகளேன்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல