வியாழன், 15 ஜனவரி, 2015

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும


கேபி மற்றும் கருணா ஆகியோரிடம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயகsarath-fonsekaமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அந்த விசாரணை கைப்பற்றப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் சொத்துக்களின் இருப்பிடத்தை கண்டறிவதிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா கூறுகிறார்.



தமிழ் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராகிய குமரன் பத்மநாதன் அல்லது கேபி என்பவர் இராணுவத்தின் காவலின் கீழ் இருந்தபடியே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக கிளிநொச்சியில் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். கருணா அம்மான் என்று பொதுவாக அழைக்கப்படும் முரளிதரன், முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யு.பி.எப்.ஏ) அரசாங்கத்தில் ஒரு பிரதி அமைச்சராக இருந்துள்ளார்.

டைம்ஸ் ஒப் இந்தியாவுடனான ஒரு நேர்காணலில், தற்போது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் இராணுவத் தலைவர், கேபி மற்றும் கருணா ஆகியோர் சட்ட நடவடிக்கைக்கு முகங் கொடுக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் “கடும் போக்கு பயங்கரவாதிகள்” என்று சொன்னார்.

எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைப் பற்றிக் கேட்டபோது, எல்.ரீ.ரீ.ஈயின் பெரும் பகுதி பணம் மற்றும் தங்கம் என்பன கேபி வசம் இருந்தன அந்தக் காரணத்தால்தான் அவர் ராஜபக்ஸ அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு வந்தார் என்று பொன்சேகா தெரிவித்தார்.

“கேபி மூலமாக தொன் கணக்கான தங்கம் ராஜபக்ஸ குடும்பத்தாரால் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக நிச்சயம் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று அவர் சொன்னார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள புதிய அரசாங்கத்தில் அவரது பொறுப்புகள் பற்றிக் கேட்டபோது, பாதுகாப்பு அம்சத்தில் தான் ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்று முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு சேவையில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் தற்சமயம் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் நான் ஒரு அரசியல் பதவியை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் சொன்னார்.

பொன்சேகா மேலும் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது ஏற்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் பற்றி சட்டபூர்வமான விசாரணைகள் எதற்கும் முகங்கொடுக்கத் தான் தயார் என்றார்.

“சட்டபூர்வமான விசாரணை ஒன்று இருக்குமானால், அப்போது கள நடவடிக்கைகளை மேற்கொண்டவன் என்பதால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார். யுத்த வெற்றி வீரர்கள் விசாரணையை எதிர்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்பன போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் ராஜபக்ஸ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தார். இதுபோன்ற முட்டாள் தனமான அநேக அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் போரைப்பற்றியும் மற்றும் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு கொஞ்சமே உள்ளது”

வட பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது பற்றி அவரிடம் வினாவியபோது, “உள்நாட்டு பாதுகாப்புக்காக மட்டுமன்றி வெளிநாட்டு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டும் நாங்கள் இராணுவத்தை அங்கு வைத்திருக்க வேண்டும்” என்று பொன்சேகா தெரிவித்தார்.

இராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளது,மற்றும் “வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும்” என்று அவர் சொன்னார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை கொழும்பில் இருந்து அவர்களின் இராஜதந்திரிகள் மூலமாக மேற்கொள்வதாக வெளியான சமீபத்தைய அறிக்கைகளைப் பற்றி கேட்டபோது, புதிய அரசாங்கம் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இந்தியாவின் தென் பகுதியில் தாக்குதல் நடத்த இலங்கை மண்ணைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் சொன்னார்.

“ அப்படி நடக்குமானால் இறையாண்மை உள்ள ஒரு நாடு என்கிற வகையில் அப்படியான பயங்கரவாத செயற்பாடுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எந்த வகையான பயங்கரவாத செயற்பாடுகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”

அந்த நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:

கேள்வி: தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பொன்சேகா: ராஜபக்ஸ இராணுவம், நீதிச்சேவை, காவல்துறை, அரச நிர்வாகம் போன்ற சகலதையும் அரசியல்மயம் ஆக்கிவிட்டார். அங்கு நல்லாட்சி என்பது ஒருபோதும் கிடையாது. நிருவாகத்தில் அவரது குடும்ப அங்கத்தவர்களே பெருமளவு தொடர்பு கொண்டுள்ளார்கள். ஊழல் மிகவும் உயர்வாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களும் அவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். எனவே மக்கள் அவரை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து விட்டார்கள்.

கேள்வி: புதிய அரசாங்கத்தில் உங்கள் பங்கு என்ன? எந்த வகையான பொறுப்பை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பொன்சேகா: பாதுகாப்பு அம்சத்தில் ஒரு பிரதான பங்கை நான் வகிக்க உள்ளேன். தேசிய பாதுகாப்பு சேவையில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் தற்சமயம் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் நான் ஒரு அரசியல் பதவியை எதிர்பார்க்கிறேன் (பாதுகாப்பு அமைச்சைக் குறிப்பிடுகிறார்).

கேள்வி: ராஜபக்ஸ தோற்கடிக்க முடியாத ஒரு தலைவரைப் போல தோன்றினார். அவரைத் தோற்கடிக்க முடியும் என்று எதிரணி எப்போது நம்பத் தொடங்கியது?

பொன்சேகா: நான் சிறையை விட்டு 2012ல் வெளியே வந்தேன். 2015க்கு முதல் நாங்கள் அவரை விரட்டுவோம் என்று நான் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டேன். பிரதான எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ராஜபக்ஸவுக்கு எதிராக போராட முடிவு செய்தன. சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்கா போன்ற மூத்த தலைவர்கள் மற்றும் நான் ஆகியோர் ஒரு வலிமையான எதிரணிக்கான ஆவலை வெளியிட்டோம் மற்றும் மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஸவை விட்டு வெளியேறினார். ஐக்கியமான இந்த எதிரணியால் அவரைத் தோற்கடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றின் ஆதரவு மிகவும் இன்றியமைததாக இருந்தது. சிறுபான்மையினர் மிகவும் முக்கியமான பங்கினை வகித்தார்கள்.

கேள்வி: ராஜபக்ஸவுக்கு எதிராக ஐக்கியமான ஒரு எதிரணியை அமைக்க சர்வதேச சமூகம் உதவியதாக அறிக்கைகள் உள்ளனவே, அப்படி நடந்ததா?

பொன்சேகா: சர்வதேச சமூகத்தை சேர்ந்த எவரும் எனக்கு வழிகாட்டவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை. ராஜபக்ஸவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உண்மையிலேயே சர்வதேச சமூகம் விரும்பியிருந்தால் அந்த மனிதர் பல நாடுகளையும் விரோதித்துக் கொள்வதற்கு முன்பே அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். அவர் சீனாவுடன் மட்டுமே நட்புறவை வைத்துக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளை அலட்சியம் செய்தார். மற்ற நாடுகளுடனான அவரது உறவு சரியானது அல்ல. அவரது வெளியுறவுக் கொள்கை தவறானது.அவரது ஆட்சியின்போது நாட்டில் மனித உரிமைகள் இருக்கவில்லை.

கேள்வி: நீங்கள் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அநேக சர்வதேச அமைப்புகள் ஸ்ரீலங்காவில் நடந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய உள்ளக விசாரணையை விரும்புகின்றன. இந்த விசாரணைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைக்குமா?

பொன்சேகா: எந்த விசாரணைக்காகவும் எந்த நாட்டுடனும் நாங்கள் எந்த விதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. மனித உரிமை மீறல்களோ அல்லது யுத்தக் குற்றங்களோ இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தால் பின்னர் ஏனைய சர்வதேச சமூகம் அதை விசாரிப்பதில் ஆர்வம் காட்டும். ஒவ்வொருவரையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் ஒவ்வொருவரையும் எங்களால் அனுமதிக்கவும் முடியாது. ஆனால் எங்களது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும். அங்கு திரளான படுகொலைகள் இடம்பெற்றிருந்தால் எங்கள் இராணுவம் அதையும் விசாரிக்கும். அரசாங்கத்தால் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி: ஆனால் யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையை போன்ற மன்றங்கள் ஒரு விசாரணைக்காக கோரிக்கை எழுப்பியபோது, அங்கு வன்முறைகள் இல்லாவிட்டால் அதை எதிர்கொள்வதற்கு ஏன் நீங்கள் தயங்கினீர்கள்?

பொன்சேகா: அங்கு ஒரு நியாயமான விசாரணை இருக்குமானால், அப்போது நாட்டின் ஒரு அங்கத்தவர் என்கிற வகையில் அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். இராணுவத்தை பொறுத்த மட்டில் நான்தான் அதை எதிர்கொள்ள வேண்டும். ஒரு சட்டபூர்வமான விசாரணை நடக்குமானால் அப்போது கள நடவடிக்கைகளை மேற்கொண்டவன் என்பதால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார். யுத்த வெற்றி வீரர்கள் விசாரணையை எதிர்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்பன போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் ராஜபக்ஸ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தார். இதுபோன்ற முட்டாள் தனமான அநேக அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் போரைப்பற்றியும் மற்றும் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு கொஞ்சமே உள்ளது.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ யினை அழித்து பல தசாப்தங்களாக நீண்டுநின்ற போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக ராஜபக்ஸ முன்னிலைப் படுத்தப் படுகிறார்……..

பொன்சேகா: ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் முந்தைய ஜனாதிபதிகள் செய்ததைப் போல அவர் கட்டளைகளை மட்டுமே வழங்கினார். ஆனால் நடவடிக்கைகள் வெற்றியடையவில்லை. தந்திரோபாய மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிக்கவே விரும்பினார்கள். ஆனால் 2005ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தான் பிரபாகரனோடு சமாதானப் பேச்சுக்களை நடத்துவதாக ராஜபக்ஸ சொல்லியுள்ளார். 2007ல் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈயினை துரத்தியபோது போர்க்களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அவருக்குத் தெரியவில்லை. ஆயுத உபகரணங்களுக்காக கூட அவர் பணம் ஒதுக்கவில்லை. மேலதிகமாக 85,000 இராணுவ வீரர்களை நான் நியமித்தேன். நான் தளபதியாக பதவியேற்றதும் ஒரே மாதத்தில் 4,000 பேர்களை நியமித்தேன். முன்பெல்லாம் ஒரு வருடத்தில் 3,000 பேர் மட்டுமே நியமிக்கப் படுவார்கள். முழு நடவடிக்கையையும் நான் திட்டமிட்டதோடு, சகல மட்டங்களிலும் உள்ள இராணுவத்தினரோடும் நான் தொடர்பு கொண்டிருந்தேன்.

கேள்வி: இன்னமும் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியினர் பிரபாகரன் இன்னமும் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்களே. இதில் உண்மை என்ன?

பொன்சேகா: இறந்த உடலை எல்லோரும் கண்டார்கள். பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியினதும் உடல்களை நாங்கள் கண்டோம். அவரது மனைவி மதிவதனி மற்றும் மகளது உடல்களை நாங்கள் காணவில்லை. நான் கண்ட குமரன் பத்மநாதனின் ஒரு நேர்காணலில் அவர்கள் இருவரும் யுத்தத்தில் முன்னணி வரிசையில் இருந்ததாக அவர் சொன்னார். அவர்கள் போர்க்களத்தில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம். பிரபாகரனின் மனைவி போராளிகளுக்கு தளவாடங்கள் வழங்குவதற்கு உதவியுள்ளார் மற்றும் அவரது மகள் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு பெண் போராளி. யுத்த களத்தில் இருந்து யாரும் தப்பியிருக்க முடியாது.

கேள்வி: அவரது இளைய மகன் பாலச்சந்திரனுக்கு என்ன நடந்தது? அவன் ஒரு சிறுவன். இராணுவம் ஏன் அவனைக் கொன்றது?

பொன்சேகா: எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவனை உயிருடன் பிடிக்கவில்லை. ஊடகங்கள் வழியாகத்தான் அவனது உடலின் படங்களை நான் பார்த்தேன். இராணுவம் அவனைக் கொன்றிருந்தால் அது எனக்கு அறிவிக்கப் பட்டிருக்கும்.

கேள்வி: உங்களைப் பொறுத்த மட்டில் இராணுவம் பிரபாகரனையும் அவரது மூத்த மகனையும் மட்டுமே கொன்றதா?

பொன்சேகா: யுத்தம் முடிந்ததின் பின்னர் நாங்கள் அவர்களது உடல்களை மட்டுமே கண்டோம்.

கேள்வி: பின்னாட்களில் ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்ட குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகியோருக்கு என்ன நடக்கும்?

பொன்சேகா: அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் கடும் போக்கு பயங்கரவாதிகள்.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடந்தது?

பொன்சேகா: எல்.ரீ.ரீ.ஈயின் பெரும் பகுதி பணம் மற்றும் தங்கம் என்பன குமரன் பத்மநாதன் (கேபி) வசம் இருந்தன அந்தக் காரணத்தால்தான் அவர் ராஜபக்ஸ அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு வந்தார். கேபி மூலமாக தொன் கணக்கான தங்கம் ராஜபக்ஸ குடும்பத்தாரால் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக நிச்சயம் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும்.

கேள்வி: தமிழர் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை விலக்கும்படி ஒரு கோரிக்கை உள்ளதே இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?

பொன்சேகா: நாங்கள் அங்கு இராணுவத்தை பராமரிக்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புக்காக மட்டுமன்றி வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு வேண்டியும் அது தேவையாக உள்ளது.

கேள்வி: ஸ்ரீலங்காவில் போராளிக் குழுக்களில் ஒரு புத்துயிர்ப்பு எழலாம் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

பொன்சேகா: நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை அப்படி நடப்பதை அனுமதிக்க மாட்டோம்.

கேள்வி: அப்படியானால் பெருமளவு இராணுவத்தை வட மாகாணத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

பொன்சேகா: இராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளது,மற்றும் வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும்.

கேள்வி: புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை என்ன?

பொன்சேகா: நாங்கள் கூட்டுச் சேரா கொள்கையை பின்பற்றுவோம். ஒரு நாட்டுடன் மட்டுமே நாங்கள் நட்புடன் இருக்க மாட்டோம். அனைவருடனும் நல்லுறவைப் பேணுவோம்.

கேள்வி: சமீபத்தைய கடந்த காலத்தில் பாகிஸ்தானின் ஐ.ஏஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை தங்களுடைய இராஜதந்திரிகள் ஊடாக கொழும்பிலிருந்து நடத்தியுள்ளது….

பொன்சேகா: அப்படி நடக்குமானால் இறையாண்மை உள்ள ஒரு நாடு என்கிற வகையில் அப்படியான பயங்கரவாத செயற்பாடுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எந்த வகையான பயங்கரவாத செயற்பாடுகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- சரத் பொன்சேகா

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல