தனது வீட்டிற்கு அருகில் கனரக தோண்டும் வாகனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலத்தை தோண்டும் நடவடிக்கையால் தனது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்ட ஈடு பெற அந்த வாகனத்தின் சாரதியை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணொருவர் தவறுதலாக அந்த வாகனத்தின் கீழ் சிக்கி நசுங்குண்டு உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஹுபி மாகாணத்தில் யிசெங் நகரிலுள்ள கொங்வான் எனும் இடத்தைச் சேர்ந்த ஸென் சங் (48 வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.
ஒரு வாரத்துக்கு முன்னர் கொங்வான் பிராந்தியத்தில் நிலக்கீழ் எண்ணெய் குழாயொன்றை பொருத்துவதற்காக நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் யு பின் (29 வயது) என்ற சாரதி ஈடுபட்ட போது, ஸென்னின் வீட்டு சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சினமடைந்த ஸென்னும் அவரது கணவர் யு சங்கும் (49 வயது) தமது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்துக்காக நஷ்டஈடு தர வலியுறுத்தி யு பின்னின் தோண்டும் வாகனத்தை அங்கிருந்து செல்ல விடாது தடுத்துள்ளனர்.
இந்நிலையில் நஷ்டஈட்டு பணத்தை வழங்கி வாகனத்தை மீட்டு செல்வதாக கூறிச் சென்ற யு பின், மறுநாள் அதிகாலை அங்கு வந்து இரகசியமாக அந்த வாகனத்தை செலுத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதன் போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஸென், வாகனம் அங்கிருந்து செல்வதை தடுக்கும் முகமாக அதற்கு குறுக்கே படுத்துள்ளார். அவரைக் கவனிக்காத யு பின் வாகனத்தைச் செலுத்தவும் வாகனம் ஸென்னின் உடலில் ஏறி அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக