புதன், 22 ஏப்ரல், 2015

தொடர்ந்து சிறுநீர் வெளியேறி அவதியுற்ற சிறுமி.. ஆபரேஷனில் சரி செய்து சாதனை படைத்த சென்னை ஜி.எச்.!

சென்னை: தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் தொல்லையால் அவதிப்பட்ட சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் கூடுதல் சிறுநீர் குழாயை வழக்கமான குழாயுடன் இணைத்து, அச்சிறுமிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளனர் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள்.


சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மதிவாணன் என்பவரின் மகள் தேன்மொழி (13). தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினையால் இவர் தவித்து வந்துள்ளார். இதற்கான சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தேன்மொழி. அங்கு அவரது பிரச்சினையை, அரிய அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தீர்த்து வைத்துள்ளனர்.

இது குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனை, 'டீன்' விமலா, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:-

தொடர்ந்து சிறுநீர் வெளியேறியதால் சிறுமி அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக அறுவை சிகிச்சை துறை மூலம் பரிசோதனைகள் செய்ததில், இடது பக்க சிறுநீரகம் ஒன்றாக இருந்தாலும் இரண்டு அறைகள் கொண்டிருந்தன. வழக்கமாக இருக்கும் ஒரு சிறுநீர் குழாய்க்கு பதிலாக ஒவ்வொரு அறையிலும் ஒரு சிறுநீர் குழாய் இருந்தது.

அதில் ஒன்று சிறுநீர் பையில் இணையாமல் பிறப்பு உறுப்பை ஒட்டி சிறு துளையில் இணைந்திருந்தது. இதனால், சிறுநீர் பைக்கு செல்லாமல் சிறுநீர் தொடர்ந்து வெளியேறியது தெரிய வந்தது.

இதையடுத்து இரண்டாவது சிறுநீர் குழாயைத் துண்டித்து வழக்கமான பாதையுடன் இணைத்தோம். மிகவும் அரிய வகை அறுவைச் சிகிச்சை இது.

மூன்று மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டன; சிறுமி நலமாக உள்ளார். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில், மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், இது தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

பிறவியில் ஏற்படும் மாறுபட்ட சிறுநீரகக் குழாய்கள் இருப்பது உலக வரலாற்றில் இது முதல் முறை. இதுவரை பதிவுகள் இல்லை. இதை பதிவு செய்ய அனுப்பி உள்ளோம்' என்றனர்.

சென்னை அரசு மருத்துவர்களின் ஆபரேஷன் மூலம் நலம் பெற்ற சிறுமி தேன்மொழி கூறுகையில், "சிறு வயதில் இருந்தே தொடர்ந்து சிறுநீர் வெளியேறும். வகுப்பறையிலும் சிறுநீர் கழித்து விடுவேன். எல்லாரும் கிண்டல் செய்ததால் பள்ளி செல்ல தயக்கமாக இருந்தது. இப்போது, என் பிரச்னை தீர்ந்து விட்டது. நிம்மதியாக உள்ளேன். இனி என்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். 9ம் வகுப்புக்கு தடையின்றி செல்வேன். அரசுக்கும், டாக்டர்களுக்கும் நன்றி'' என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல