ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

பால்கனியில் தொங்கிய பச்சிளம் குழந்தை... பத்திரமாக மீட்ட தமிழர்களுக்கு விருது

சிங்கப்பூர்: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியின் மாடியில் தவறிவிழுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாக மாறியுள்ளனர் இரண்டு தமிழர்கள். சிங்கப்பூரில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி கவுரவித்துள்ளது.



சிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கம்பித் தடுப்பைத் தாண்டி தவறி விழுந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டிக்கொண்டது. மேலே ஏறவும் முடியாமல் கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்தது அந்தக்குழந்தை.

குழந்தை கதறி அழுததைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அந்த கட்டிடத்தின் அருகே புதிய கட்டிடம் கட்டும் பணியில் வேலை செய்து வந்த, சுப்பிரமணியன் சண்முகநாதன் (வயது 35), பொன்னன் முத்துகுமார் (24). ஆகியோரின் காதில் இந்த அழுகுரல் கேட்டது. இது குறித்து அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், தவறி விழுந்து விடக்கூடாதே என்று கருதிய அவர்கள், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வரும்வரையில் காத்திருக்காமல் தாங்களே களத்தில் இறங்கினர்.

குழந்தையை மீட்பு

சண்முகநாதன் உயிரைப் பணயம் வைத்து, இரண்டாவது மாடியில் முதலில் ஏறினார். அவரை தொடர்ந்து முத்துகுமார் ஏறினார். இருவரும் சேர்ந்து குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதன்பின்னரே சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் சண்முகநாதனையும், முத்துகுமாரையும் பாராட்டினர். அந்தக் குழந்தை ‘ஐ பாட்' வைத்து கேம்ஸ் விளையாடியபோது தவறி விழுந்துவிட்டதாக தெரியவந்தது.

விருது வழங்கி கவுரவம்

குழந்தையின் உயிரை தீரமுடன் செயல்பட்டு காப்பாற்றிய சண்முகநாதனுக்கும், முத்து குமாருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி சிறப்பித்தது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் 4-வது பிரிவு துணை கமாண்டர் மைக்கேல் சுவா, சண்முகநாதனையும், முத்துகுமாரையும் வெகுவாக பாராட்டி விருது வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது உள்ளூர் எம்.பி., ஆங் வெய் நெங்கும் உடனிருந்தார்.
உற்சாகம் தந்த விருது

"இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற வீர தீர செயலை பலரும் முன்வந்து செய்ய இது உந்துதலாக அமையும். இப்படி செய்கிறபோது, நாளை என் பிள்ளைக்கு ஒரு அபாயகரமான நிலையில், மற்றவர்கள் உதவுவார்கள்" என்று விருது பெற்ற முத்துகுமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு கவுரவம்

குழந்தையின் உயிரை காப்பாற்றி இருவரும் தமிழர்கள் என்பது சிறப்பம்சம். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா கலவரத்தைத் தொடர்ந்து, உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல