திங்கள், 12 அக்டோபர், 2015

முற்றிய சண்டை, என்ன தான் பிரச்சனை? ஆரம்பம் முதல் இறுதி வரை ஸ்பெஷல் தொகுப்பு

ஊர் இரண்டு பட்டால் கூத்து கட்டுபவர்களுக்கு கொண்டாட்டம் என்பார்கள், ஆனால் இங்கு அப்படியே தலைக்கீழாக உள்ளது. சட்டசபை தேர்தல் அறிக்கை, கட்சிக்கொள்கை கூட தெரியாத சில மக்களுக்கு கூட இந்த நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சனை தெரிந்துவிடும் போல. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலாக வளர்ந்து அடுத்த வாரத்தில் கிளைமேக்ஸை சந்திக்கவிருக்கின்றது. இப்படி 4 சுவற்றிற்குள் நடந்துக்கொண்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது நாடே தெரியும் படி செய்து விட்டனர். கோலிவுட்டே பரபரப்பில் இருக்கும் இந்த நடிகர் சங்க தேர்தலின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடந்தது? என்பதன் தொகுப்பு தான் இந்த பகுதி.


கட்டிடம் உருவான கதை

திரைப்படம் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 3500 பேரை உள்ளடக்கியது தான் இந்த நடிகர் சங்கம். இதன் தலைவர்களாக எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து கேப்டன், தற்போது இருக்கும் சரத்குமார் வரை அனைவரையும் பலரும் அறிந்தது தான். சுமூகமாக சென்றிருந்த இந்த சங்கத்தில் பிரச்சனை வெடித்தது. பில்டிங்கில் விரிசல் விழுந்து தான் பார்த்துள்ளோம், ஆனால், ஒரு பில்டிங்கால் நடிகர் சங்கமே விரிசலானது இது தான் முதல் முறை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைவராக இருந்த போது சென்னையின் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஏரியாவான டி.நகரில் 18 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டது. அப்போது அதனுடைய விலை ரூ. 40,000. அந்த இடத்தில் ஒரு பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. வட்டி குட்டிப்போடும் கதையாக யாரும் கண்டுக்கொள்ளாத போது இந்த தொகை சுமார் ரூ. 4 கோடி கடனாக வந்து நின்றது.

இந்த கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று நினைத்த நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் அவர்கள், சூப்பர் ஸ்டார் முதல் அப்போது இருந்த சுள்ளான் ஸ்டார் வரை ஒரு குரூப்பையே கிளப்பி மலேசியா, லண்டன் என விழா நடத்தி அதில் வந்த பணத்தை வைத்து சங்கத்து கடனை அடைத்தார்.

விஜயகாந்தின் தீவிர அரசியலால் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக, அந்த இடத்திற்கு சரத்குமார் வந்தார். எல்லாம் நன்றாக தான் சென்றது, ஆனால், 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் இணைந்து சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாவிற்கு இந்த இடத்தை குத்தகைக்கு விடுவதாக முடிவு செய்தனர். அதில் நடிகர் சங்கத்திற்கான அலுவலகம் அமைத்துக் கொள்ள மட்டும் ஒப்புதல் வாங்கிகொண்டு பழைய கட்டிடத்தை இடித்தனர்.

பிரச்சனையின் ஆரம்பம்

ஆனால், பிரச்சனையே இங்கு தான், டி.நகர் போன்ற ஏரியாக்களில் மக்கள் தலை நகர்ந்தால் தான் ரோடு என்று ஒன்று இருப்பதே தெரியும், அப்படியிருக்க, அங்கு சுற்றி மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் இருக்க, விழுந்தது செக். இந்த நேரத்தில் தான் இந்த ஒப்பந்தத்தில் இருந்த சில குளறுபடிகளை அறிந்து நியமன பொதுக்குழு உறுப்பினராக இருந்த நடிகர் பூச்சி முருகன் கேள்விகேட்க பிரச்சனை வெடித்தது.

இதேபோல் முன்பே இதுகுறித்து நேரடியாக கேள்வி கேட்ட குமரிமுத்துவை சங்கத்தை பற்றி அவதூறு பரப்புகிறார் என நடிகர் சங்கத்திலிருந்தே நீக்கினர். இதையெல்லாம் பொறுமையாக பார்த்து வந்த நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் இந்த இடத்தில் என்ன தான் சிக்கல், சரி மால் (Mall) தான் வரக்கூடாது, நமக்கு நாமே ஒரு மண்டபம் கட்டிக்கொள்வோம், அவை நம் நாடக நடிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டனர்.

விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை

இதற்கு சற்றும் செவி சாய்க்காத சரத்குமார் அணியினிரை எதிர்த்து முதன் முதலாக விஷால் அணியினர் கையெழுத்து வேட்டை நடத்தினர். இது சரத்குமார் தரப்பை மிகவும் கோபப்படுத்தியது. உடனே ராதாரவி செல்லும் இடத்தில் எல்லாம் விஷாலை மிகவும் தரக்குறையாவாக பேச, படத்தில் மட்டும் ஆக்‌ஷன் செய்து வந்த விஷால் முதன் முதலாக தமிழகமே பார்க்க, ஒரு தொலைக்காட்சியில் இந்த முறை நான் போட்டியிடுகிறேன், உங்களை எதிர்த்து என சவால் விட்டார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஒரு வார நாட்களில் நடத்தவேண்டும் என சரத்குமார் தரப்பு போராட, அது எப்படி ஞாயிற்றுகிழமைகளில் தான் நடிகர், நடிகை, நாடக நடிகர் என அனைவருக்கும் விடுமுறை. அதனால், ஞாயிறு தான் வைக்க வேண்டும் என விஷால் கோரிக்கை வைக்க, ஆனால், இதை ஒரு பொருட்டாகவே சரத்குமார் அணி கண்டுக்கொள்ளவில்லை. இதனால், கோபமடைத்த விஷால், நாசர் அணியினர் நீதிமன்றத்திற்கு நியாயம் கேட்டு சென்றனர். விஷாலின் முதல் வெற்றி நீதிமன்றத்திலேயே கிடைத்தது. ஆம், விஷால் அணியினர் கேட்டது போலவே ஞாயிறு (அக்டோபர் 17) அன்று தேர்தல் நடத்த அனுமதி கிடைத்தது.

இதை தொடர்ந்து கவுன்சிலர் எலெக்ஷ்ன் போல் இவர் அவர்களை குறை சொல்ல, அவர் இவர்களை குறை சொல்ல என்று நீண்டு கொண்டே போனது, ஒரு கட்டத்தில் இளம் நடிகர்கள் முழுவதும் விஷால் பக்கத்தில் வந்து நிற்க, வடிவேலு, மனோரமா என முன்னணி நட்சத்திரங்களையும் விஷாலின் பாண்டவர் அணி டார்க்கெட் செய்தது. மகுடத்திற்கு எல்லாம் மகுடமாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் தன் ஆதரவை வெளிப்படையாக பாண்டவர் அணிக்கு அறிவிக்க விஷாலுக்கு யானை பலம் வந்தது.

இளம் நடிகர்களின் மோதல்

உடனே சற்றும் அசராத சரத்குமார் அணி திடிரென்று நாங்களும் இளைஞர்களை இறக்கி காட்டுகிறோம் என சிம்பு, தனுஷ், ஷாம் என தன் பங்கிற்கு ஒரு சில இளைஞர்களை கொண்டுவந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் தீவிரமாக நாடக நடிகர்களின் ஓட்டுகளை பெற இரு அணியினரும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

இதில் விஷால், சரத்குமார் கண்டிப்பாக ஊழல் செய்திருக்கிறார் என கூற, கோபமான அவர் விஷால் மீது மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். ஆனால், விஷால் தொடர்ந்து சரத்குமாரை ஊழல் செய்தவர் என கூற, கோபமாகிய அவருடைய தரப்பு விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணையை இன்று அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றியுள்ளார். இதுப்போதாது என்று இவரை யார் பேச சொன்னார் என்பது போல் திடிரென்று உள்ளே வந்து சிம்பு, பதவி ஆசை பிடித்தவர் விஷால், என் குடும்பத்தை பிரித்து விட்டார், என வெறுங்காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல் பேச வழக்கம் போல் அந்த வீடியோ ட்ரண்ட் ஆனது.

இதுமட்டுமின்றி ராதிகா அதே கூட்டத்தில் விஷால் ரெட்டி என ஜாதிப்பெயரை சொல்லி கூப்பிட்டது இன்னும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போ நாளை அவர் ரஜினியை சிவாஜிராவ் என்று அழைப்பாரா? என்று எதிர்தரப்பு கேட்க, கேள்விகள் சரத்குமார் அணியை அம்பாக தாக்கி வருகின்றது. ஆனால், யார் பக்கம் நியாயம், அநியாயம் இருப்பது என்பது யாருக்கும் தெரியவில்லை.

ராதிகா பதிலடி

ஆனால், அந்த கூட்டத்தில் ராதிகா பேசிய போது ‘இத்தனை பிரச்சனை வந்ததே, ஏன் ஆரம்பத்திலேயே ரஜினி, கமல் எல்லாம் வரவில்லை என கேட்டார். உண்மையாகவே பலரும் கேட்க நினைத்த கேள்வி தான். இதுநாள் வரை எந்த பிரச்சனையிலும் வாய் திறக்காத கமல்ஹாசன் திடிரென்று விஷால் அணியினருக்கு ஆதரவு மட்டும் தருவது வேறு ஏதும் உள்நோக்கமா என்று பலராலும் யோசிக்க வைக்கின்றது.

இதற்கு சரத்குமார் நான் அவருடைய விஸ்வரூபம், உத்தம வில்லன் படத்திற்கு எத்தனை உதவி செய்திருப்பேன், அவர் நன்றி மறந்தவர் என தன் பங்கிற்கு கொதித்து எழுந்து கருத்துக்களை அள்ளிவிட்டார். தற்போது அனைவரின் கவனமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு என்பது தான். சரி இந்த விஜய், அஜித், விக்ரம், சூர்யா எல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? அவர்கள் தான் இப்படி ஒரு பிரச்சனை போகின்றதா என்ற அளவிற்கு தான் ரியாக்‌ஷன் காட்டியுள்ளனர்.

விஷால் இவர்களை நேரில் கூட சந்திக்க முயற்சி செய்தார், ஆனால், அஜித் எல்லாம் நட்பாக வாருங்கள், ஆனால், தேர்தல் என்று உள்ளே வராதீர்கள் என்று ஒரே அடியாக சொல்லிவிட்டார். இப்படி குழாயடி சண்டை போல் ஆகி, பக்கத்து ஊர் சினிமாக்காரர்கள் சிரிக்கும் படி வந்துவிட்டது நம் நடிகர் சங்க தேர்தல்.

சினி உலகம் கருத்துக்கணிப்பு

எப்படியோ பிரச்சனை தெருவிற்கு வந்துவிட்டது, சமீபத்தில் பாண்டவர் அணியினருக்கு கொலை மிரட்டல் எல்லாம் வருவதாக விஷால் கூறி வருகிறார். உங்களுக்கே புரிந்திருக்கும் இது எத்தனை சீரியஸ் பிரச்சனை என்று. அடுத்து என்ன மக்களுக்கு சம்மந்தேமே இல்லையென்றாலும் கருத்து கேட்பது நம் கடமையல்லாவா? அப்படி சினி உலகம் நடத்திய கருத்துக்கணிப்பில் பலரும் ‘ஏன் இத்தனை வருடம் அவர்கள் இருந்தார்கள் தானே, இனி இளைஞர்கள் வரட்டுமே என விஷால் தரப்பிற்கு தான் ஆதரவு குவிகின்றது.

ஹிம்ம்..இந்த நடிகர் சங்க இறுதிக்கட்ட போர் வரும் ஞாயிறு அன்று நடக்கின்றது. இரு அணியினர்களும் தங்கள் போட்டியாளர்களை அறிவித்து விட்டனர். வெற்றி நாட்டமைக்கா? இல்லை கேப்டனுக்கா? அட கிரிக்கெட் கேப்டன தாங்க சொன்னோம் என்று பார்த்து விடுவோம்...







cineulagam
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல