திங்கள், 12 அக்டோபர், 2015

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி? அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??

இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா. ஆச்சர்யமா இருக்கா??



உண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார். 14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.

தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா?

கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.

சூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அதில் அவர் வெற்றியும் கண்டார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டஙகளில் கடைசியாக கணிதம் மற்றும் அறிவியல்வகை சார்ந்த ஒன்பது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு.

25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் முதலிடமும், அதிபரின் பாராட்டும் கிடைத்தது வெறும் கண்டுபிடிப்புக்கு மட்டுமல்ல; ”இந்தியா மற்றும் இதுபோன்ற இன்னும் சில நாடுகளில் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளின் நலன் காக்கவே எனது கண்டுபிடிப்பான சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் குவளை பயன்படும்” என்று சொன்ன மனிதமும் தான்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல