ஞாயிறு, 8 நவம்பர், 2015

தீபாவளி பற்றி பலரும் அறியாத புராண கதைகள் மற்றும் ஆச்சரியமான காரணங்கள்!!

 image source: google
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. இருள் நீங்க, ஒளி பொங்க வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருகிறது என்ற ஐதீகம் ஒன்று காலம் காலமாக நம்பப்படுகிறது.



மனிதர்களாகிய நம்முள் ஒவ்வொருவரின் மனத்திலும் இருள் இருக்கத்தான் செய்கிறது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற அந்த இருளை நீக்க வேண்டும், ஒழுக்கம், நற்குணம் போன்ற பண்புகள் ஒளி போல பொங்க வேண்டும் என்று தான் தீப ஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது என்று நாம் அறிவோம். ஆனால், வட இந்தியா, சீக்கியர்கள், சமணர்கள், போன்றவர்கள் வேறு சில நிகழ்வுகள் மற்றும் புராணக் கதைகளை காரணம் கொண்டு தீபாவளியை கொண்டாடுகிறார்கள்...

இராமன் வனவாசம் சென்று பதினான்கு வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது மக்கள் அனைவரும் விளக்கேற்றி வரவேற்றனர். வட இந்திய மக்கள் இதன் காரணமாக தான் தீபாவளி கொண்டாடுவதாய் கூற்றுகள் இருக்கின்றன.

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனுக்கு இரு மனைவியர். இதில் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருஷ்ணன் வராக (பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்த நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று ஒரு வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைத்தான். இதுவும் தீபாவளிக்கு பின்னணில் இருக்கும் ஓர் புராண கதையாகும்.

கிருஷ்ணர், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டான், அந்த வரமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, மனைவி சீதை மற்றும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை தான் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். இந்த விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று கொண்டு அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார். இதுவும் ஓர் காரணமாக கூறப்படுகிறது.

1577-ல் இந்த தினத்தில் தான் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதை வைத்து சீக்கியர்கள் இந்நாளில் தீபாவளி திருநாளாக கொண்டாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இந்த நாளை சமணர்கள் தீப ஒளி திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் இந்துக்கள் பண்டிகை என்று மட்டுமில்லாமல், பல மதங்களின் பண்டிகைகளையும் பொதுவாக கொண்டாடும் முறை உண்டு. கிறிஸ்துமஸ், ரமலான் போல தீபாவளியையும் ஃபெஸ்டிவல் ஆப் லைட்ஸ் (Festivals Of Lights) என்று கொண்டாடுகிறார்கள். தீபாவளி உலகளவில் பல்லினப் பண்பாட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல