புட்டபர்த்தி சாய்பாபா....
சாய் பாபா ஒரு மனிதன்....
அவர் கடவுள் அல்ல
அவர் மேஜிக் சாமியார்
சாய் பாபா மீது வைத்து இருக்கும் எந்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்லபோவதில்லை..
காரணம் இவைகள் எல்லாம் எனக்கும் தெரியும்தான்...அவர் மீது நீங்கள் வைக்கும் எல்லா விமர்சனங்களும் எனக்கும் உண்டு...
ஆனால் 1998ல் நான் சரவணா வீடியோவில் வேலை செய்து கொண்டு இருந்த போது வருடா வருடம் நடக்கும்... சாய் பாத விளக்கு பூஜைக்கு வீடியோ எடுக்க பத்து நாட்கள் புட்டபர்த்தியில் வேலை நிமித்தமாக இருந்து இருக்கின்றேன்.
புட்டபர்த்தியில் தினமும் பஜனை நடக்கும்.. ஸ்டேண்டில் கேமாராவை பொறுத்தி பிரேம் வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவோம்... நாராயண நாரயண ஓம் சத்திய நாரயண நாராயண ஓம் என்று பாடல் உச்சஸ்தாயில் போகும் போது அதுவரை அமைதியாக உட்கார்ந்து பஜன் கேட்டுக்கொண்டு இருந்த பாபா.. ஒரு கற்பூர தீப ஆராதனை செய்வார்.. கண்களில் நீர்வர பலர் பிரார்த்திக்கொண்டு இருப்பார்கள்..
முக்கியமாக வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து உட்கார்ந்து பஜனை செய்வார்கள்..நாங்கள் வேலை விஷயமாக வந்தாலும் இந்த இடத்தில் வர ஒரு பெரிய புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.....
அந்த பஜைனை ஹாலில் மேலே எல்லாம் தங்க மூலாம் பூசி இருப்பார்கள்..அந்த பத்து நாளில் அமைதியின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டேன்... அத்தனை லட்சம் பேர் இருக்கும் அந்த இடத்தில் இரவு எழு மணிக்கு மேல் ஒரு பொட்டு சத்தம் இருக்காது..சுவர்கோழிகளின் ரீங்காரம் மட்டும் கேட்கும்.....
பிசா உணவு அப்போதுதான் சென்னைக்கு வந்த நேரம்.....100க்கு விற்ற பிசா அங்கு பத்துரூபாய்க்கு கொடுத்தார்கள்... ஆயிரம் ரூபாய்க்கு விலை சொல்லும் கம்பெனி மின்விசிறிகள் 200க்கு கொடுத்தார்கள்..பிராண்ட் டிசர்ட்டுகள் 50க்கு மேல் இல்லை.....அந்த பிரசாந்தியை சுற்றி உள்ளபல்பொருள் சிறப்பங்காடி இப்படித்தான் விற்றார்கள்.. எனக்கு செமை ஆச்சர்யம்...
சாப்பாடு எல்லோருக்கும் இலவசம்.... எச்சில் தட்டை ஐஏஎஸ் ஐபிஎஸ் போலிசார், ஜட்ஜ் மனைவிகள், பெரும்பணக்காரர்கள் மனைவிகள் என்று எல்லோரும் எச்சில் தட்டு கழுவி பாபாவுக்கு சேவை செய்தனர்...சிலரை காட்டி அவர் யார் மகள் தெரியுமா? என்று கேட்டு அடையாளம் தெரியும் போது மிரட்சியாய் இருக்கும்...
எனக்கு தெரிந்து அத்தனை அழகான பணக்கார பெண்களும் எச்சில் தட்டு கழுவிக்கொண்டு இருந்தார்கள்... யாரிடத்திலும் அலட்டல் இல்லை.. ஒரு ஒழுங்கு பிரசாந்தி நிலைய்த்தி சுற்றி இருந்த மக்களிடத்தில் இருந்தது..ஒரு இடத்தில் முனுக் என்று சத்தம் கேட்டதில்லை...அப்படி ஒரு அமைதியான இடம்.....
பிரசாந்தி நிலையத்தின் நுழைவாயில் ஒரு ராமர் சீதை, மற்றும் அனுமர் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு சிலை இருக்கும் அந்த சிலை பிரதிஷ்ட்டையின் போது பாபா வந்தார்...அந்த மேடையில் நாங்கள் வேலை நிமித்தம் வீடியோ எடுத்தோம்... சிலைக்கு அபிஷேகம் செய்தார்... நான் அப்போது நான் நிகழ்வுகளை யூமேட்டிக் டெக்கை கழுத்தில் மாட்டிக்கொண்டு ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்தேன் கேமராமேன் பொள்ளாச்சி சரவணன் காட்சிகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.. பாபா எங்கள் பக்கத்தில் வந்து நின்று கொண்டார்..கைகள் ஆட ஆட எல்லோருக்கும் கை தூக்கி ஆசிர்வாதம் செய்தார்...புது படத்துக்கு டிக்கெட் எடுக்கும் போது முன் இருப்பவர் நமக்கும் இருக்கும் நெருக்கம் அளவுக்கு பாபா என் பக்கத்தில் நின்று இருந்தார்...நான் அவரை பார்ப்பதை விட மக்களைதான் பார்த்தேன்.. அவர்கள் எழுச்சி, அவர்களின் வசியம்....
உலகம் புல்லா இருக்கும் பக்தர்கள்.. பார்க்க அலை மோதும் கூட்டம்.. பட் பாபா பக்கத்தில் நான் இருந்தேன்...மேடை விட்டு கிழே இறங்கி வந்ததும்..இந்த ஒரு வாரத்தில் எனக்கு நட்பான பல வெளிநாட்டு நண்பர்கள் என்னையும் என் சட்டையையும் தொட்டுக்கும்பிட்டார்கள்... சிலர் எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்...பாபா மீதான வெறியை என்னால் உணர முடிந்தது...
ஜெ ஆட்சியில் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் சரி செய்ய பணத்தை அரசிடம் கொடுக்க வேண்டும் என்று ஜெ சொன்னார்... பாபா ஒத்துக்கொள்ளவில்லை.. பணத்தை தனது டிரஸ்ட் மூலம் மட்டுமே செய்யும்...என்றார்....
கலைஞர் வந்தார்... அரசு ஆதரவை கொடுத்தார்.. பாபாவின் டிரஸ்ட் மூலம் பணமும் உழைப்பும் கொடுத்தாகள்... இன்று தண்ணீர் சிந்தாமல் சிதறாமல் சென்னைக்கு வந்துக்கொண்டு இருக்கின்றது...
200 கிராமத்துக்கு மேல் தண்ணீர் கொடுத்து வாழ்வாதாரத்தை கொடுத்த மனிதர்...புட்டபர்த்தியில் செய்யும் சேவைகள் கணக்கிலடங்கா.....
சார் பாபா நம்ம பணத்தை கடவுளின் பெயரால் எடுத்து நம்ம கிட்டயே கொடுக்கறார் அதுக்கு போய் என்ன பீலிங்....சார் அவர் மோடிமஸ்தான் சார்....அவன் திருட்டுபையன்சார்...
எல்லாருமே 100 பர்சென்ட் யோக்கிய பசங்க இல்லை... சொல்லற நீ.. கேக்கற நான்... எல்லாரும்தான்...
சார் உங்களை சொல்லுக்குங்க...
எங்களை அப்படி சொல்லாதிங்க??
ஏன்??
நாங்க ரொம்ப யோக்கியம்...
மன்னிச்சிடுங்க யோக்கியம்......
கடவுளின் பெயரை சொல்லி இன்னமும் அனைத்து மதத்திலும் திருடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்....எல்லா பெரும் சொத்துக்கு பின்னும் ஒரு பெரிய குற்றம் இருப்பதாக சொல்வார்கள்...அதற்கு என்னால் நிறைய உதாரணத்தை சொல்ல முடியும்...இன்னும் நிறைய ஆன்மீக திருட்டுபயல்கள் இருக்கின்றார்கள்.. பாபாவும் திருடன்தான்...
1000ம் கோடி அடிச்சி 500 கோடி மட்டும் செலவு செய்து இருக்கின்றார் பாபா...
நிறைய ஆன்மீக திருடர்கள்..1000ம் கோடி அடிச்சி அப்படியேதான் வச்சி இருக்கானுங்க...இதுல நிறைய என்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாறி ஏழை மாணவர்களிடம் இன்னமும் சுரண்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
நீங்கள் சொல்வது போல கடவுளின் பெயரால் மோசடி செய்து 1000ம் கோடி கொள்ளை அடித்து, 500கோடியை மக்களுக்கு செலவு செய்த, அந்த மோடிமஸ்தான், கடவுள் அவதாரம் நானே என்று சொல்லிய, ஹைடெக் சாமியார் வேஷம் போட்ட ,அந்த இறந்து போன சாய்பாபா திருடனை எனக்கு பிடித்து இருக்கின்றது...
பிரியங்களுடன்..
ஜாக்கிசேகர்..




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக