ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யாழில் ஒரு திருநங்கையின் வாழ்வியல்…!! தொடரும் மோனிஷாவின் நிஜக் கதை….

அவர் என் சொந்தக்காரன். வயதானவர். மனைவியுடன் வசித்து வந்தார். எனது வீட்டில் நெருக்கடி அதிகரிக்க அவர்களின் வீட்டில் தங்க சென்றபோதுதான் அந்த கொடுமை நிகழ்ந்தது. என்னோடு மிக நல்லவர் போல் ஆறுதல் கூறி நன்றாக பழகுவார். என்னை அன்பால் அரவனைக்கின்றார் என்று நினைத்தேன். ஒருநாள் அவரது மனைவி இல்லை.



வெளியே போயிருந்தார். அன்று அவரும் நானும்தான். படம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ‘பிள்ளஞ்தண்ணி கொஞ்சம் கொண்டு வா’ என்றார். தண்ணீரை எடுத்து கொண்டு சென்றேன். அவர் சாய்மனை கதிரையில் உட்கார்ந்திருந்தார்.

நான் தண்ணீரை கொடுக்க வாங்கவில்லை. எல்லைமீற முயன்றார். எனக்கு உடம்பெல்லாம் நடுநடுங்க தொடங்கிவிட்டது. அவரை உதறிவிட்டு அறைக்குள் ஓடிச்சென்று தாளிட்டு விட்டேன். அவரது மனைவி வீட்டுக்கு வந்த பின்னர்தான் வெளியில் வந்தேன். ‘என்னடா முகம் எல்லாம் வேர்த்திருக்கு. என்னாச்சு’ என்று கேட்டார்.

நடந்ததை கூறினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எல்லோருடனும் அப்படிதான், பாசமாக பிள்ளை என்று அணைத்திருப்பார் என்று சொல்லி, என்னை திட்டினார். நான் சொல்வது உண்மையாக இருக்காதென்ற முன்முடிவுடன் இருந்தார். நான் அந்த வீட்டை விட்டும் வெளியேறினேன்.

திருநங்கைகள் என்பவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்லவென்றுதான் இந்த சமூகம் நினைக்கிறது. திருநங்கைகள் இழிவானவர்கள், அவர்கள் பொருட்படுத்த தக்கவர்கள் அல்ல, உண்மை பேசமாட்டார்கள் என பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். எல்லா சுய சமாதானங்களையும் விடுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என இரண்டு இடங்களில் கருத்தமர்வு நடக்கிறது.

இரண்டு இடங்களிலும் உங்களிற்கு அறிமுகமற்றவர்கள் கருத்தமர்வில் கலந்து கொள்கிறார்கள். ஒரு இடத்தில் கலந்து கொள்பவர் திருநங்கை.

நீங்கள் எங்கு போவீர்கள்? நிச்சயம் திருநங்கை வளவாளராக இருக்குமிடத்திற்கு செல்லப்போவதில்லை. ஒரு திருநங்கை நமக்கு எதை கற்றுத்தரப் போகிறதென நினைப்பீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் போலத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்.

அதனால்த்தான் இந்த சமூகமே திருநங்கைகளிற்கு எதிரானது என்றேன். இந்த சமூகத்தை எதிர்கொள்ள எவ்வளவு விலைகள் கொடுக்க வேண்டுமென்பதை திருநங்கையாக நான் உணர்ந்து கொண்டுள்ளேன். எனக்கு முன்பாக நின்று பேசும் ஒவ்வொரு மனிதனும் கேலியும், கிண்டலும், வசையும்தான் பேசினார்கள். என்னை புரிந்து கொண்டவர்கள் இந்த சமூகத்தில் மிகச்சிலர்தான்.

என் ஒற்றைக்கை விரல்களே போதும், இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை கணக்கிட. என்னை முழுமையாக புரிந்து எனக்கு இன்றுவரை ஆறுதலாக இருக்கும் அம்மம்மாதான் என் உலகம். அவருக்கு வரும் ஓய்வூதியத்தில் என்னுடன் வாழ்கிறார். உலகமும், உறவுகளும் என்னை அவமானச் சின்னமாக பார்த்தபோதும், அவர் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

என் தாய்போல, தந்தைபோல, சகோதரி போல, நண்பி போல அவரே இருக்கிறார்.உலகத்தில் நான் படும் அவமானங்களையெல்லாம் அம்மம்மாவின் மடியில் இறக்கி வைத்துவிட்டுத்தான் உறங்கச் செல்கிறேன்.

இந்த உலகத்தின் சவால்களையெல்லாம் வென்றுவர அவர் புத்திசொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது அச்சமெல்லாம், நான் சின்னவயதாக இருப்பதும், அவர் அந்திமகாலத்தில் இருப்பதும். தனக்குப்பின்னால் நான் என்ன செய்வேன் என கவலைப்பட தொடங்கிவிட்டார்.

ஏனெனில், இந்த சமூகத்தின் சவால்களை கடப்பது இன்னும் எனக்கு சிரமமாகத்தான் உள்ளது. வீதிக்கிறங்கினால் சூப்பி, அலி, ஒன்பது என விதவிதமாக கொச்சையாக கூப்பிடுவார்கள். அவர்களின் பாலியல் வக்கிரம் வெளிப்படும்.

நீங்கள் இப்பொழுது இசைப்பிரியா பற்றி பேசுகிறீர்கள். ஆயுதம் தூக்காத ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கான ஆண்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, மனவக்கிரங்களை தீர்த்து கொண்டார்கள் என்கிறீர்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு ஆணும் உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். நான் வீதியில் தனிமையில் செல்லும் போது நல்லூரடி, அரசடி, கந்தர்மடம், ஆரியகுளம், யாழ்நகரத்தில் வீதியோரம் நிற்கும் ஆண்களின் சுயரூபத்தை பார்த்திருக்கிறேன்.

யாருமில்லாத சமயத்தில் ஒரு திருநங்கையிடம் எப்படி வக்கிரப் பேச்சு பேசுகிறீர்கள் என்பதற்கு என் ஒவ்வொரு பயணமும் சாட்சி.

ஓவ்வொரு நாளும் நான் யாராவது ஒருவனால் பாலுறவிற்கு அழைக்கப்படுகிறேன். வீதியில் அழைத்துவிட்டு, வெடித்து சிரிப்பார்கள். இதனால் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியில் செல்வதென்றாலே அடிவயிறு குமையும். வாசலை கடக்க, கால்களின் கீழே நெருப்பு பற்றிக்கொள்ளும்.

எனது அச்சம் நியாயமானதென்பது ஒருமுறை நிரூபணமானது. எப்பொழுதும் வீதியில் சுற்றித்திரியும் சிலர் என்னை கடத்தினார்கள். கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்வதுதான் அவர்களின் நோக்கம்.

அதனால் யாழ்ப்பாண பத்திரிகைகள், இணையங்களின் முதல்பக்க செய்தியாகவும் ஆனேன். என தனது பதிவில் குறிப்பிடுகிறார் தொடரும் எனப் படுகிறது….
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல