திங்கள், 28 நவம்பர், 2016

எலெக்ட்ரானிக் தேசம் தாய்வான்!

தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவான தாய்வானும் இந்தியாவும் இப்போது ஒன்றை ஒன்று வாஞ்சையோடு பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியா மென்பொருள் உற்பத்தியில் வலிமையான நாடு. தாய்வானோ வன்பொருள் (Hardware) உற்பத்தியின் அசைக்கமுடியாத சக்தி. வன்பொருள் உடல் என்றால், மென்பொருள் உயிர். உடலோடு உயிர் ஒன்று சேர்ந்தால் இரு நாட்டுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகம் உயிர்ப்பு பெறும். பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பது இரு நாட்டுக்குமே இருக்கும் எதிர்பார்ப்பு.



இந்தியாவும் தாய்வானும் பொருளாதார ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்கி வருவதற்கு ஏற்ற மாதிரி சாதகமான பல மாற்றங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மற்ற எந்த நாட்டையும்விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக வளர்வது தாய்வானை இந்தியா நோக்கி ஈர்க்கிறது. இந்தியா, தாய்வானின் நெருக்கமான பொருளாதார உறவை விரும்புவதற்கு முக்கிய காரணம், அது ஒரு பணக்கார நாடு.


இந்தியாவைவிட தாய்வான் 21 மடங்கு பணக்கார நாடு. நம்முடைய ஜிடிபி வெறும் 1.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், தாய்வானின் ஜிடிபியோ 32 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். (ஆனால், பரப்பளவில் அது தமிழ்நாட்டில் கால் பங்குகூட கிடையாது. மக்கள் தொகை வெறும் 2.3 கோடிதான்.)

இந்தியாவோடு இணைந்து பொருளாதார நடவடிக்கைகளை பெருக்கிக்கொள்ள தாய்வான் விரும்புவதற்கு அரசியல் காரணங்களும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, தாய்வான் ஒரு நாடே அல்ல. அது சீனாவின் ஒரு அங்கம்தான். ஆனால், தாய்வானோ, ‘நான்தான் உண்மையான சீனா’ என்று அந்தப் பெயருக்கு உரிமை கொண்டாடுகிறது.

தாய்வானின் அதிகாரபூர்வமான பெயர்கூட சீனக் குடியரசுதான். ஆக சீனாவும் தாய்வானும் எலியும் பூனையும் மாதிரி இருந்தாலும், ‘வியாபாரம் என்று வந்துவிட்டால் அதுதான் முக்கியம்; அரசியல் பார்க்கக் கூடாது’ என்று நினைத்த தாய்வான், கடந்த பல வருடங்களாக பழைய பகையை எல்லாம் மறந்து சீனாவோடு அதிகமான பொருளாதார இணக்கம் காட்டிவிட்டது. இந்த காலகட்டத்தில் தாய்வானின் மிகப் பெரிய கம்பெனிகள் பலவும் சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்து வியாபாரம் நடத்த ஆரம்பித்துவிட்டன.

இதை வெகு தாமதமாக இப்போது தாய்வான் உணர்ந்திருக்கிறது. ஆகவே, சீனாவோடு ஒப்பிடும் அளவுக்கு பெரிய நாடாக மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியிலும் மேல்நோக்கிக் போய்க்கொண்டிருக்கும் இந்தியாவோடு உறவை மேம்படுத்திக்கொள்ள அது விரும்புகிறது. சீனாவில் இருக்கும் தனது மொபைல், கம்ப்யூட்டர் மற்றும் மின்னனு தொழிற்சாலைகளைப் போல இந்தியாவிலும் தொழிற்சாலைகள் தொடங்கலாமா என்று ஆய்வு செய்து வருகிறது.
தாய்வானில் சமீபத்தில்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இப்போது தாய்வானில் புதிதாக பதவியேற்றிருக்கும் பசுமைக் கட்சிக்கும் (Green Party) சீனாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் இரு நாடுகளுக்கும் இடையே இப்போது பணிப்போர் துவங்கி இருக்கிறது. அதனால் சீனாவில் இருந்து தாய்வான் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை திடீர் என்று பல மடங்கு குறைய ஆரம்பித்திருக்கிறது. இனிமேலும் சீனாவை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று தாய்வானின் புதிய அரசு கருதுவதும் இந்திய - தாய்வான் பொருளாதார உறவு மேலும் மேம்பட காரணமாக அமைந்துவிட்டது.

இதை முன்கூட்டியே கணித்துத்தான் தாய்வான் ஜனாதிபதியாக சாய் இங் வென் கடந்த மே மாதம் பதவியேற்றபோது, ‘New South Bound Policy’ என்ற புதிய கொள்கையை அறிவித்தார். தொழில்நுட்பம், வர்த்தகம், கலாசாரம் ஆகிய மூன்று துறைகளிலும் இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள தாய்வான் விரும்புவதாக குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இனி தாய்வான்தான் புதிய தென்கொரியா. சில தசாப்தங்களுக்கு முன்னர்... சாம்சங், ஹூண்டாய், எல்.ஜி. போன்ற தென் கொரியா கம்பெனிகள் எப்படி இந்தியாவுக்கு வந்ததோ, அதே போன்ற வேகத்தில் தாய்வானின் எலெக்ட்ரானிக் தாதாக்களான அசூஸ், ஏஸர், ஃபாக்ஸ்கான் போன்ற கம்பெனிகள் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவுபடுத்த நிறைய திட்டங்கள் வைத்திருக்கின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அமெரிக்காவின் ஆப்பிள் போன்களைக்கூட இன்று தாய்வான் கம்பெனிகள் தான் பெரும் அளவில் தயாரிக்கின்றன. உலகின் எந்த பெரிய மொபைல் போன் கம்பெனியானலும் சரி, தாய்வானுக்கு சென்றால் போதும். அவர்கள் கேட்கும் லோகோவைப் பொறித்து, எத்தனை லட்சம் போனைக் கேட்டாலும் உற்பத்தி செய்து தர தாய்வான் கம்பெனிகள் தயார்.
ஆப்பிள் போனுக்கு இணையாக அதே சமயம் ஆப்பிள் போனைவிட குறைந்த விலையில், ஸ்மார்ட் போன்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் தாய்வான் ஸ்மார்ட் போன் கம்பெனிகளின் மிகப் பெரியத் திட்டம். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா அந்த கம்பெனிகளுக்கு உகந்த நாடாக இருக்கிறது.

காரணம், இப்போது நம் நாட்டில் நூறு கோடி மொபைல் போன்கள் இருக்கின்றன. இதில் 22 கோடி மட்டும்தான் ஸ்மார்ட் போன். கூடிய விரைவிலேயே 20 கோடி சாதா போன்களை வைத்திருப்பவர்கள் அதை கை கழுவிவிட்டு ஸ்மார்ட் போனுக்கு மாறுவார்கள் என்று தாய்வான் நிறுவனங்கள் உறுதியாக நம்புகிறது.

காகிதப் பணத்தை ஒழித்துவிட்டு, கிரெடிட் கார்டுகள் வந்தன. காகிதப் பணத்துக்கு மாற்றாக இப்போது பேடிஎம் போன்று டிஜிட்டல் பணம் வேகமாக புழக்கத்தில் வந்த கொண்டிருக்கிறது. இந்திய அரசின் கொள்கையும் காகிதப் பணத்தின் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதுதான்.

டிஜிட்டல் பணம் புழக்கத்தில் வந்தால் ஆட்டோ துவங்கி ஐம்பது ரூபாய் அறுபது ரூபாய்க்குகூட ஸ்மார்ட் போனில் இருந்து இன்னொரு ஸ்மார்ட் போனுக்கு பணத்தை அனுப்பிவிட முடியும்.

ஆக, காலம், நேரம், அரசியல் என்று அனைத்தும் தாய்வான் கம்பெனிகள் இந்தியாவில் கிளைகள் பரப்ப இப்போது உகந்ததாக இருக்கிறது.

 இந்தியா - தாய்வான் இரு தரப்பு வர்த்தகம் 480 கோடி டாலர்.

இந்தியாவிலிருந்து தாய்வானுக்கு ஏற்றுமதி 187 கோடி டாலர்.

தாய்வானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி 293 கோடி டாலர்.


vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல