திங்கள், 30 ஜனவரி, 2017

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 2

சாதாரண பிஸ்கால் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

வாசுதேவன், தவவயேந்திரன், குலேந்திரன் மற்றும் அஜந்தன் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் ரி.ஐ.டி அவர்களை ஜனவரி 20ந் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தியது. வழக்கத்துக்கு மாறான ஒரு நகர்வாக அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவர்கள் வெடி மருந்துகளையும் மற்றும் போதைப் பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற உறப்பினா திரு.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக விசேடமான குறிப்புகள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை தாக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதாக மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த நால்வரும் காவல்துறையின் கீழான பிஸ்கால் கைதுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.


காவல்துறை அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தாதது ஏன் என்று இதுவரை தெளிவற்றதாகவே உள்ளது. மேலும் புதிராக உள்ளது, திரு.சுமந்திரனது அடையாளத்தை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக முக்கிய அரசியல் பிரமுகர் என்கிற தெளிவில்லாத விளக்கத்தை கொடுத்திருப்பதுதான். ஒரு காரணம் கடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எவரையும் குற்றம் சாட்ட தயக்கம் காட்டுவது, அந்தச் சட்டம் விரைவிலேயே நீக்கப்பட்டு மாற்றப்படப் போகிறது என்பதினாலாக இருக்கலாம். மற்றொரு காரணம் ரி.ஐ.டி இந்த விடயத்தில் மேலும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு இதில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு விரிவான தொடர்பு உள்ளது என்பதை தெளிவாக்க மேற்கொண்ட வடிவமைப்பாக இருக்கலாம்.

இதில் மற்றொரு நோக்கம் கூட இருக்கலாம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் பல விடயங்களில் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது அரசாங்கம் மேற்கொண்ட அதன் பல்வேறுபட்ட தவறான நடவடிக்கைகள் காரணமாக பிரிவினைவாத - பயங்கரவாத சக்திகள் எழுச்சி பெறுவதற்கான சூழலை உருவாக்கி தேசிய பாதுகாப்பை ஆபத்துக்கு உட்படுத்தியுள்ளது என்கிற குற்றச்சாட்டு. சுமந்திரனை கொலை செய்வதற்கு மேற்கொண்ட சதி முயற்சியை எதிர்க்கட்சியினரால் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுகிறது என்று பிரகடனப் படுத்தி அதை காரணமாக்கி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிசக்கலாம். சந்தேக நபர்கள்மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததின் பின்னணியில் உள்ள நியாயங்கள் எதுவாக இருந்தாலும் அது பயனற்ற முயற்சியை குறிக்கும் பழமொழியான “முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது” என்பதைத்தான் நினைவு படுத்துகிறது.

தற்பொழுது நடைபெறும் விசாரணை தொடர்பாக பாதுகாப்புடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து சில விவரங்களை என்னால் சேகரிக்க முடிந்தது. இந்த நான்கு பேரைக் கொண்ட குழுவிடமிருந்து வெளிவந்த தகவல்களின்படி, மூன்று வெளிநாட்டு புலி செயற்பாட்டாளர்கள் பணத்தை அனுப்பியும் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியும் அவர்களை கையாண்டு வந்துள்ளார்கள். அவர்கள் வெற்றி, மாறன், மற்றும் அமுதன் என்பவர்களாவர். இந்த மூவரும் நோர்வேயை தளமாக கொண்டியங்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரனின் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பிரிவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப் படுகிறார்கள். வெற்றி பிரான்சையும் மற்றும் மாறன் அவுஸ்திரேலியாவையும் தளமாகக் கொண்டவர்கள். மலேசியாவை சேர்ந்த அமுதன் உண்மையில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் மூத்த உதவியாளரான சிரஞ்சீவி மாஸ்ரர் ஆவார், இவரது உண்மையான பெயர் ஜீவரட்னம் ஜீவகுமார். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தனித்தனியாக விசாரிக்கப் பட்டார்கள்.

அதிகாரிகளுக்கு அவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான விபரங்களையே வெளிப்படுத்தினார்கள். சேகரிக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துவது, ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்வதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது என்பதையே. துல்லியமான ஒரு வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் தொடர்பும் இதற்காக உருவாக்கப் பட்டிருந்தது. புலனாய்வு துப்பறிவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது என்னவென்றால் கொலை செய்யவிருந்தவர்கள் சுமந்திரனைக் கொல்வதில் வெற்றி பெற்றிருப்பார்கள், ஆனால் விதியின் ஒரு தற்செயலான திடீர் திருப்பம் அல்லது இந்த விஷயங்களை எப்படி நடத்தவேண்டும் என்பது தெய்வத்தின் செயலில் தங்கியிருந்ததின் காரணத்தால் அது நடைபெறாமல் போய்விட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசம்

சுமந்திரன், ரி.என்.ஏயின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதி காரணமாக தேர்தல் தொகுதிகளான உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய இரண்டையும் கவனித்து வருகிறார். இந்த இரண்டு பகுதியும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியில் உள்ளடங்கியதாகும். இந்த இரண்டு தேர்தல் தொகுதிகளுக்குள்ளும் மருதங்கேணி, கரவெட்டி மற்றும் பருத்தித்துறை என்று மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. மருதங்கேணி பிரிவு பிரதானமாக வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கியது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய கடற்கரையை அடுத்துள்ள நிலப்பரப்புகளுடன் ஒப்பிடுகையில் மருதங்கேணி அபிவிருத்தி குறைந்த ஒரு பகுதியாகும். ஆகவே ஒரு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சுமந்திரன் அந்தப் பகுதியில் தனது நேரத்தின் கணிசமான பகுதியை அந்தப் பிரதேசத்துக்காக ஒதுக்கி, அதன்மூலம் அபிவிருத்தியடையாத அந்தப் பிரதேச மக்களின் தேவைகளை கூடியளவு பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறார். அதன் காரணமாக அவர் தான் வடபகுதியில் இருக்கும் நேரத்தில் மருதங்கேணிக்கு ஒழுங்காக விஜயம் செய்து வந்தார்.

மருதங்கேணி கொழும்பிலிருந்து 306 கி.மீ, யாழ்ப்பாண நகரத்திலிருந்து 43 கி.மீ மற்றும் பருத்தித்துறையில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது. மருதங்கேணியை இரண்டு ‘பி’ தர பாதைகளுடாக weஅடையலாம். ஒன்று 28.96 கி.மீ நீளமான பருத்தித்துறை - மருதங்கேணி பாதை, இது பி 371 என அழைக்கப்படும். மற்றது 7.48 கி.மீ நீளமான பி 402 என அழைக்கப்படும் சொர்ணப்பற்று - தாழையடி வீதி. இந்த சொர்ணப்பற்று - தாழையடி வீதி, புதுக்காட்டு சந்தியில் கிழக்கு பக்கமாக கிளை பிரிந்து ஏ 9 என அழைக்கப்படும் முக்கிய நெடுஞ்சாலையான யாழ்ப்பாணம் - கண்டி வீதியை அடைகிறது. இந்த வீதி தென்னந்தோட்டங்கள், பற்றைக் காடுகள், சமவெளிகள் மற்றும் சில நெல்வயல்கள் என்பனவற்றை ஊடறுத்து செல்கிறது. இந்த பிரதேசம் அடர்த்தி குறைவான குடிசனப் பரம்பல் உள்ள கிராமங்களான சொர்ணப்பற்று மற்றும் மசார் என்பனவற்றை உள்ளடக்கியது. புதுக்காட்டு சந்தியில் இருந்து கிழக்கு கரையோரம் வழியாக தாழையடியை நோக்கிச் செல்லும் வீதி தாழையடியில் வைத்து மருதங்கேணி சந்தியை சந்திக்கிறது. மருதங்கேணி தாழையடியை அடுத்துள்ள பிரதேசம். யாழ்ப்பாணத்திலிருந்து மருதங்கேணிக்கு போக்குவரத்து செய்யும் அநேகம் பேர் பி 307 ஐ விட பி 402 ஐ பயன்படுத்துவதையே அதிகம் விரும்புவார்கள். மருதங்கேணியை அடைவதற்கு சுமந்திரன் இந்த வீதியைத்தான் வழக்கமாக பயன்படுத்துவார்.

பாதுகாப்பு தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ குழு நால்வரும், சுமந்திரனை அவர் இந்த சொர்ணப்பற்று - தாழையடி வீதி வழியாக பயணம் செய்து திரும்பும்போதே கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியிருந்தார்கள். நீண்ட வீதி சனநெருக்கம் குறைவான பகுதியுடாக ஓடுகிறது, பாதையின் இருபுறமும் மறைவான பற்றைகள் இருப்பதால் நெருங்கி வரும் வாகனத்தை கண்ணிவெடி மூலமாக வெடிக்க வைப்பதற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. கண்ணிவெடியை வெடிக்க வைத்து சுமந்திரனை கொல்வதற்கு இரண்டு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. சுமந்திரன் மீது இலக்கு வைத்து திட்டமிடப்பட்ட இரண்டு தாக்குதல் திட்டங்களும் அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

முதல் சந்தர்ப்பத்தில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மருதங்கேணியில் நடத்த ஏற்பாடு செய்திருந்த கலாச்சார விழாவில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்கு திட்டமிடப் பட்டிருந்தது. அந்த விழா 2016 டிசம்பர் 2016ல் பி.ப 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்றைய தினம் கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் சொhணப்பற்று - தாழையடி வீதியில் பதுங்கியபடியே காத்திருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி சுமந்திரனின் வாகனம் அந்த வழியாக முன்னேறிச் செல்லவில்லை. எனவே முன்பு அட்டவணையிட்டபடி சுமந்திரன் அந்த விழாவில் பங்கு பெறப் போவதில்லை என அவர்களால் நம்பப் பட்டது. எனினும் சதிகாரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படி சுமந்திரன் திட்டமிட்டபடி அந்த விழாவுக்கு வந்து பங்குபற்றிவிட்டு சென்றுவிட்டார் என்கிற செய்தியை பின்னர் அவர்களால் கேட்க நேர்ந்தது.

பி 402 சொர்ணப்பற்று - தாழையடி வீதி

இரண்டாவது சந்தர்ப்பம் ஜனவரி 13, 2017ல் நடந்தது. தாழையடி கரையோரத்தில் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான ஒரு திட்டம் ஏற்பாடாகி இருந்தது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு கலவையான வரவேற்பு இருந்தது. தவிரவும் உத்தேச திட்டம் தொடர்பான விபரங்களைப் பற்றி அதிகமான ஒரு குழப்பம் காணப்பட்டது. அதனால் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டம் ஒன்று ஜனவரி 13ல் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அந்தக் கூட்டத்தில் சில எண்ணிக்கையான அறிவார்ந்த நிபுணர்கள் பேசுவதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு சுமந்திரன் தலைமைதாங்க இருந்தார். வெளிப்படையாவே சதித்திட்டம் தீட்டியவர்கள் சுமந்திரன் எதிர்பார்க்கப் படுகிறார் என்பதை அறிந்திருந்ததினால் பி 402 சொர்ணப்பற்று - தாழையடி பாதையில் கண்ணிவெடி வெடிக்க வைப்பதற்கு ஆயத்தங்களை செய்து ரி.என்.ஏ பாராளுமன்ற உறப்பினரை கொலை செய்ய தயாராக இருந்தார்கள். திரும்பவும் எதிர்பார்த்தபடி சுமந்திரன் வரவில்லை. இந்த முறை யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை சுமந்திரன் இரத்துச் செய்துவிட்டார்.

நிகழ்வுகள் வித்தியாசமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒன்றில் சுமந்திரன் கொல்லப்பட்டிருக்க கூடும். ரி.என்.ஏ சட்டத்தரணியோ அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளோ சுமந்திரனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கொடிய சதியினைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அப்படியானால் அந்த துரதிருஷ்டமான நாட்களாகிய டிசம்பர் 12, 2016 மற்றும் ஜனவரி 13, 2017 ல் பி 402 வீதியில் நிச்சயமாக உயிராபத்தோ அல்லது அங்கவீனமோ எற்படுத்தக் கூடிய ஒரு தாக்குதலில் இருந்து சுமந்திரன் எப்படித் தப்பினார்.

இதைப்பற்றி இன்னும் ஓரளவு தெரிந்து கொள்வதற்காக நான் சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். காவல்துறையினர் அதேபோல அரச உயர் மட்டத்தினர், அவரது உயிருக்கு உலைவைக்க மேற்கொண்ட கொலை சதித்திட்டம் மற்றும் கைவிடப்பட்ட கொலை முயற்சிகள் பற்றி அறிவித்ததை சுமந்திரன் உறுதிப்படுத்தினார். எனினும் இந்தக் கட்டத்தில் அதைப்பற்றி மேலும் கருத்து தெரிவிக்க சுமந்திரன் தயங்கினார், இந்த சதி பற்றி மேலும் விபரங்கள் கிடைக்கும்வரை காத்திருக்கவே விரும்பினார். அப்போது, டிசம்பர் 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய நாட்களில் அவருக்கு வைக்கப்பட்ட மரணப் பொறியில் இருந்து அவர் எப்படித் தப்பினார் என்ன நடந்தது என்று கேட்டேன். சுமந்திரன் சொன்னது இதுதான்:

“நான் கொழும்பிலிருந்து வடக்குக்கு போகும்போதெல்லாம் வழமையாக பயணிக்கும் வாகனம் கடந்தவருடம் டிசம்பர் மாதம் நான் யாழ்ப்பாணம் போனபோது கிடைக்கவில்லை. எனவே அந்த நோக்கத்துக்காக நான் வேறு ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினேன். டிசம்பர் 12 காலை நான் நல்லூரில் தற்பொழுது முன்மொழியப் பட்டிருக்கும் உத்தேச அரசியலமைப்பு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தேன், மதியம் வரை அது நடைபெற்றது. ரி.என்.ஏ வட மாகாண சபை உறுப்பினரும் மற்றும் சக சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனும் அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவர் சில விஷயங்களை என்னுடன் கலந்தாலோசிக்க விரும்பினார். சயந்தன் தானும் மருதங்கேணி கலாச்சார விழாவிற்கு செல்ல இருப்பதாகவும் நாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்தபடியே விவாதிக்கலாம் என்று சொன்னார். ஆகவே நான் சயந்தனுடன் அவரது வாகனத்தில் செல்வதற்கு தீர்மானித்தேன். எனது வாகனமும் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் அதைப் பின் தொடாந்தன. நாங்கள் ஏ - 9 பாதையில் புதுக்காட்டு சந்திவரை சென்று தாழையடி வீதியில் திரும்பி மருதங்கேணியை அடைந்தோம். நாங்கள் வழி நெடுக நல்ல விவாதத்தில் ஈடுபட்டு இருந்ததால் சந்தேகத்துக்குரிய எதையோ அல்லது எவரையோ அவதானிக்கவில்லை. அதன்பின் சயந்தன் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சற்று முன்கூட்டியே திரும்பினார் ஆனால் நான் தொடர்ந்து அங்கிருந்தேன். பின்னர் நான் எனது வாகனத்திலேயே யாழ்ப்பாணம் திரும்பினேன்”. பின்னர் நான் சுமந்திரனிடம் அன்றைய தினம் அவரது உயிரைப் பறிக்க மேற்கொண்ட திட்டமிட்ட முயற்சி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பினார் என்பது பற்றிக் கேட்டேன். ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு இப்படி பதிலளித்தார்: அந்த சதி பற்றிய விபரங்கள் புலனாய்வாளர்களினால் வெளியிடப் படும்வரை நானும்கூட எதையும் தீர்க்கமாக கூற முடியாதவனாக உள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து, எனது வழக்கமான வாகனம் வீதியால் வரும்வரை அவர்கள் காத்திருந்தார்கள் என்று தெரிகிறது. ஆகவே நான் சயந்தனின் வாகனத்தில் சென்றதால் அவர்கள் தயாராக இருக்கவில்லை போலும் அதனால் அவர்கள் என்னைத் தவற விட்டுவிட்டார்கள். நான் யாழ்ப்பாணத்துக்கு அதே வழியால் திரும்பிச் சென்றபோது, அவர்கள் எனக்காக பதுங்கியிருந்து காத்திருந்தார்களா என்பது எனக்குத் தெளிவில்லை. அவர்கள் எனக்காக காத்திருப்பார்களாயின் அவர்கள் எனது வழமையான வாகனத்தை தேடியிருப்பார்கள், அது யாழ்ப்பாணத்தில் நன்கு பிரபலமானது. நான் வித்தியாசமான வாடகை வாகனத்தை பயன்படுத்தி இருந்ததால், திரும்பவும் அவர்கள் என்னைத் தவற விட்டிருப்பார்கள்”.

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல