திங்கள், 30 ஜனவரி, 2017

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 1

“நல்லவன்”(உண்மையான பெயர் அல்ல) வட பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு தமிழ் இளைஞன். அவன் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் ஒரு முன்னாள் உறுப்பினர் மற்றும் அவன் மே 2009ல் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவன். அவனை ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்து, புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தியதின் பின்னர் விடுதலை செய்தார்கள். யுத்தத்துக்குப் பின்னான வட பகுதி சூழல் வலி நிறைந்த கடினமான ஒன்று ஏனென்றால் நல்லவனால் வருமானம் தரும் ஒரு வேலையை எங்கு தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாடு செல்வதற்கும் போதுமான பொருளாதார வளமும் கூட அவனிடம் இருக்கவில்லை. நல்லவன் வயதான ஒரு சித்தியுடன் வசித்தபடி சாத்தியமான போதெல்லாம் அடிக்கடி ஒரு தற்காலிக தொழிலாளியாக உடல் உழைப்பை மேற்கொண்டு வந்தான்.



கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் மாஸ்ரர் என அழைக்கப்படும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் நல்லவனை அணுகினான். நவம்பர் 26 ந்திகதி இரவு கிளிநொச்சியின் சில குறிப்பிட்ட இடங்களில் எல்.ரீ.ரீ.ஈ கொடியினை இரகசியமாக ஏற்றும்படி மாஸ்ரர் நல்லவனிடம் கேட்டுக் கொண்டான். அடுத்த நாளான நவம்பர் 27 ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யினரின் மாவீரர் நாள் ஆகும். அதற்காக அவனுக்கு 5,000 ரூபா வழங்குவதாக வாக்களிக்கப்பட்டது. கடினமான அழுத்தத்தில் இருந்த நல்லவன் அந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டு ஏற்ற பணியை நிறைவேற்றினான், அதன்படி அவனுக்கு வாக்களிக்கப்பட்ட பணமும் உறுதியாக வழங்கப்பட்டது. சில நாட்களின் பின்னர் மாஸ்ரர் கையில்லாத மற்றொரு முன்னாள் புலி உறுப்பினருடன் நல்லவனைச் சந்திக்க வந்தான். அவர்களிடம் ஒரு திட்டம் இருந்தது. ஒரு புதிய நடவடிக்கையில் அவர்களுடன் இணைந்து செயல்படும்படி நல்லவன் கேட்டுக்கொள்ளப் பட்டான். ஒருமுக்கிய தமிழ் அரசியல்வாதியை கொல்வதற்கான ஒரு”ஒப்பந்தம்” கிடைத்திருப்பதாக நல்லவனிடம் சொல்லப்பட்டது. அதற்காக நல்லவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய்கள் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. தேவைப்பட்டால், இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து தெற்காசிய நாடு ஒன்றின் வழியாக ஐரோப்பா செல்வதற்கு அவனுக்கு பாதுகாப்பான ஒரு பயணத்துக்கான வழியும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவனிடம் சொல்லப்பட்டது. வெளிநாட்டில் வாழும் சில புலித் தலைவர்கள் இதைச் செய்வதற்கு விரும்புவதாகவும் மற்றும் அவர்கள் கொடுப்பனவு மற்றும் பாதுகாப்பான பயணம் என்பனவற்றுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக அந்த இருவரும் தெரிவித்தார்கள். அந்த இலக்கு யார் என்று அறிந்தால் மட்டுமே தன்னால் ஒரு முடிவுக்கு வரமுடியும் என நல்லவன் அவர்களிடம் சொன்னான். அந்த முன்னாள் புலிகள் இருவரும் இலக்காக உள்ளவரின் பெயரை வெளிப்படுத்தியதும் நல்லவன் அதிர்ச்சி அடைந்தான்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். அந்த ஒப்பந்தம் சுமந்திரனைக் கொல்வதற்குத்தான் என்று சொல்லப்பட்டதும் பயங்கர அதிர்ச்சி அடைந்த நல்லவன் அதற்கு கடுமையாக மறுத்துவிட்டான். சமீப காலங்களாக தான் சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து வருவதாகவும் அதனால் அவரிடம் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நல்லவன் சொன்னான். யுத்தம் இப்போது முடிவடைந்து விட்டதாகவும் மற்றும் தமிழர்கள் ஸ்ரீலங்காவில் சம உரிமைகளுடன் வாழவேண்டும் என்று அவன் மேலும் சொன்னான். சுமந்திரன், சம்பந்தன் மற்றும் சேனாதிராஜா போன்றவர்களுடன் இணைந்து தமிழர்கள் இழந்த உரிமைகளைத் திரும்பவும் வெல்வதற்காக வன்முறையற்ற ஜனநாயக முறைகளில்,தங்களால் இயன்றளவு பாடுபடுகிறார்; என்றும் அவன் சொன்னான். தவிரவும் ஒரு சட்டத்தரணியாக உள்ள சுமந்திரன், முன்னாள் புலி உறுப்பினர்கள் உட்பட அநேக தமிழர்களின் வழக்குகளில் உதவி செய்து வருகிறார் என்று சொன்ன நல்லவன், சுமந்திரனைப் போன்ற ஒருவர்மீது கை வைப்பது தற்பொழுது நிலவும் உடையத்தக்க நிலையில் உள்ள சமாதானத்தை குழப்புவதுடன்,தீவிரமான அரச அடக்கு முறையை வரவேற்பதாகவும் ஆகிவிடும் என்றும் சொன்னான்.

மற்ற இருவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சுமந்திரன் ஒரு துரோகி அவர் களையெடுக்கப்பட வேண்டிய ஒருவர் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். எனினும் நல்லவன் தனது தொடர்ந்து வாதாடும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதுடன் பொதுவாக எந்த ஒருவரது உயிரையும் குறிப்பாக சுமந்திரனது உயிரை பறிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது, என்று அவர்களிடம் சொன்னான். நல்லனின் உறுதிப்பாட்டையும் தீர்க்கமான முடிவையும் கண்ட மற்ற இருவரும் சரி நாங்கள் இந்த யோசனையை கைவிடுவோம் என்று சொன்னார்கள். விஷயம் இத்துடன் முடிந்தவிட்டது நடந்ததை எல்லாம் மறந்து விடு என்று அவர்கள் நல்லவனிடம் சொன்னார்கள்.

அவர்கள் சென்றதின் பின்னர் மேலதிகமாக எதையும் கேள்விப்படாததால், அந்த படுகொலைத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்று நல்லவன் நினைத்தான். எனினும் சில வாரங்களின் பின்னர் மாஸ்ரர் என அழைக்கப்படும் நபரை நல்லவன் சந்திக்க நேர்ந்தபோது வெறுமே அவனிடம் “விஷயங்கள் எப்படிப் போகின்றன?” எனக் கேட்டான். கிடைத்த பதிலோ பூடகமான முறையில் “விஷயங்கள் எப்படி நடக்கவேண்டுமோ அப்படியே நடக்கிறது” என்றவாறு இருந்தது. இது நல்லவனின் மூளையில் எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்தது, “சுமந்திரனை படுகொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் திட்டமிடுகிறார்களோ” என அவன் கவலைப்படத் தொடங்கினான்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு

சிலநாட்கள் அதுபற்றி தாங்கொணா கவலையில் மூழ்கியிருந்த நல்லவன், தான் அறிந்தவற்றையும் மற்றும் சந்தேகிப்பதையும் பற்றி அதிகாரிகளிடம் தெரிவிப்பது சிறந்தது என நினைத்தான். தான் மிகப்பெரிய ஆபத்தை கையாள்வதாக அவன் அறிவான் ஆனாலும் அதைச் செய்ய வேண்டியது தனது கடமை என நல்லவன் எண்ணினான். நல்லவன் தனது தூரத்து உறவினரான மற்றும் காவல்துறையினருக்கு நன்கு அறிமுகமான ஒரு அரசாங்க அதிகாரியை அணுகினான். நல்லவன் சொல்லுவதைக் கேட்டதின் பின்னர் உறவுக்காரரான அந்த அரசாங்க அதிகாரி கலக்கமடைந்ததுடன் நாம் இதைப்பற்றி காவல்துறையினரிடம் சொல்லவேண்டும் எனத் தெரிவித்தார். எனவே வவுனியாவில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நல்லவன் என்ன நடந்தது என்பதையும் மற்றும் என்ன நடக்கிறது என்று தான் சந்தேகிப்பதையும் பற்றி தான் அறிந்தவற்றை அவர்களிடம் விபரித்தான். இது டிசம்பர் 23, 2016ல் நடந்தது.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு(ரி.ஐ.டி) அதிகாரிகள் ஆரம்பத்தித்தில் நல்லவனின் நல்ல நோக்கத்தை சந்தேகித்தார்கள் ஆனால் அவனிடம் தொடர்ந்து விசாரித்ததின் பின்னர் அவன் உண்மையைத்தான் சொல்கிறான் என உணர்ந்தார்கள். கொழும்பிலுள்ள ரி.ஐ.டி தலைமையகத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது உயிருக்கு உள்ள சாத்தியமான ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்துக்கும் கூட அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24ல் சுமந்திரன், கரவெட்டியில் தான் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த திரு.சாந்த பண்டார, யாழ்ப்பாணம் செல்லும் வழியிலுள்ள சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியம் உள்ளதை தெரிவித்து யாழ்ப்பாணம் போகாமல் திரும்பிவிடும்படி கேட்டுக் கொண்டார். எனினும் சுமந்திரன் அந்த நேரத்தில் வவுனியாவுக்கு அப்பால் சென்றுவிட்டதால், திட்டமிட்டபடியே பயணத்தை தொடர்வது என முடிவு செய்தார்.

சுமந்திரன் யாழ்ப்பாணத்தை அடைந்து விழாவுக்காக கரவெட்டிக்குச் சென்றார். அந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருப்பதையும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் அணியினர் மேடையையும் அந்த வளாகத்தையும் சுற்றி தீவிர தேடுதல் மேற்கொள்வதையும் அவர் அவதானித்தார். அன்றைய தினம் மேலதிகமாக அல்லது அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை. சுமந்திரன் கிறிஸ்மசுக்காக கொழும்புக்கு திரும்பி அதன்பின்னர் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக தெற்காசிய நாடொன்றுக்கு சென்றுவிட்டார். இந்த பயணம் பாதுகாப்பு அச்சுறுத்தல் பயம் ஏற்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட ஒன்றாகும். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் முக்கிய அங்கமான இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டினதும் உத்தியோகபூர்வ பேச்சாளாரும் ஆவார், தனது விடுமுறையை கழித்த பின் தனது குடும்பத்தினருடன் புதுவருடத்தின் முதல் வாரத்தில் ஸ்ரீலங்காவுக்கு திரும்பினார்.

இதற்கிடையில் ரி.ஐ.டி யினர் நல்லவனிடம் இதைப்பற்றி பேசாமல் மௌனமாக இருக்கும்படியும் மற்றும் அவரது தினசரி கடமைகளை வழக்கம் போல செய்துவரும்படியும் அறிவுரை வழங்கினார்கள். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் நல்லவனுடன் தொடர்பு கொண்ட முன்னாள் புலி அங்கத்தவர்களின் இருப்பிடங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை இரகசியமாக அவதானித்து வரலானார்கள். காவல்துறை மற்றும் இராணுவம் ஆகிய இரண்டினதும் புலனாய்வு பிரிவுகள் உளவாளிகள், தகவல் சொல்வோர் மற்றும் முகவர்களைக் கொண்ட வலையமைப்பு ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிறுவி அதை பராமரித்து வந்தார்கள். நல்லவனால் சிக்க வைக்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இருவரினதும் அசைவுகள் தனிப்பட்ட ஆர்வத்துக்காக பரிசீலிக்கப் பட்டதுடன் சந்தேகப்படாத வகையில் அவர்கள் கண்காணிக்கப்பட்டும் வந்தார்கள். அவர்கள் இருவரினதும் நடவடிக்கைகள் ஜனவரி 12 மற்றும் 13ந் திகதிகளில் சந்தேகத்துக்கான அடித்தளத்தை தோற்றுவித்தன. ரி.ஐ.டி யினர் நடவடிக்கையில் இறங்க முடிவு செய்தார்கள்.

மூன்று காவல்துறையினர் - இருவர் சீருடையிலும் மற்றவர் சாதாரண உடையிலும் - கொண்ட குழு ஒன்று கிளிநொச்சி, திருவையாறில் உள்ள வீடொன்றுக்குள் 2017 ஜனவரி 14ஃ15 நள்ளிரவில் சென்றார்கள். அந்த மூவரும் தங்களை வவுனியாவில் உள்ள ரி.ஐ.டி யினர் என அடையாளப்படுத்திய பின்னர்ஈ அங்கிருந்த 32 வயதான தவவயேந்தன் என்கிற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரைக் கைது செய்தார்கள். தவவயேந்தன் மே 18 2009ல் ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தார், அவரை 10 மாதங்கள் வரை நெலுக்குளம் முகாமில் தடுப்புக்காவலில் வைத்த பின்னர் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தி மார்ச் 7, 2010 ல் விடுதலை செய்தார்கள். அவர் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு செல்லப் பட்டார்.

கிளிநொச்சியில் உள்ள திருவையாறு

ஜனவரி 16, 2017ல் ரி.ஐ.டி அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்துக்குச் சென்று, அங்கு பணியாற்றி வரும் 37 வயதான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவரைக் கைது செய்தார்கள்.

 Karalasingham Kulendran-File pic via Tamil media

அந்த நபர் மாஸ்ரர் என்கிற காராளசிங்கம் குலேந்திரன் ஆவார். அவரும் கிளிநொச்சி திருவையாற்றில் வசிப்பவராவார். அவரும் கூட மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.Kulasingam

32 வயதான முருகையா தவவயேந்தன் மற்றும் 37 வயதான காராளசிங்கம் குலேந்திரன் ஆகியோரை விசாரணை செய்ததில் ரி.ஐ.டி யினர் மேலதிக பல விளைவுகளை அறுவடை செய்தனர். விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி செயல்பட்ட ரி.ஐ.டி காவல்துறை அதிகாரிகள் மாஸ்ரர் என்கிற குலேந்திரனின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான கிளிநொச்சி ஊற்றுப்பாலத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு நிலக்கண்ணி வெடிகளை மீட்டார்கள். அதில் ஒன்று குறிப்பாக மிகவும் சக்திவாய்ந்தது. திருவையாற்றில் வசிப்பவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் விளைவாக காவல்துறையினர் மேலும் இரண்டு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை முறையே திருகோணமலையிலும் மற்றும் தாளையடியிலும் வைத்து கைது செய்தார்கள்.

மதன் என்கிற சந்திரசேகரலிங்கம் வாசுதேவன் என்பவரை திருகோணமலை, அலஸ்தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தலா இரண்டு கிலோ எடையுள்ள இரண்டு கேரள கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டன.அந்த வீட்டில் வசித்த கணவன் மனைவி உள்பட வேறு மூன்று பேரும் கூடக் கைது செய்யப்பட்டார்கள் மற்றும் அவர்கள்மீது போதை மருந்து குற்றங்கள் சுமத்தப் பட்டன. வாசுதேவன் என்கிற மாதன் என்கிற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினரும்; மேலதிக விசாரணைக்காக ரி.ஐ.டி யினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

ரி.ஐ.டி உத்தியோகத்தர்கள் நான்காவது நபரை யாழ்ப்பாணத்தின் கிழக்கு கரையோர பகுதியான மருதங்கேணியல் வைத்து கைது செய்தார்கள். அவர் ஒரு புனர்வாழ்வு வழங்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர், இப்போது முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். அந்த மனிதரின் பெயர் மரியநாயகம் லூயிஸ் அஜந்தன், அவருடைய புனைபெயர் ஜனா என்பதாகும். அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்தபோது அவருடைய இயக்கப் பெயர் கடலவன் என்பதாகும். காவல்துறையினர் ஆறு வெடிபொருட்களையம் மற்றும் அவை தொடர்பான உபகரணங்களையும் அஜந்தனின் இருப்பிடத்தில் வைத்து கண்டெடுத்தார்கள். மேலும் சுவராஸ்யமான முறையில் 8 முதல் 10 கிலோ வரையான கேரள கஞ்சாவும் இங்கிருந்து கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு உள்ளவர்கள். தவவயேந்திரன் மற்றும் குலேந்திரன் ஆகியோர் திருவையாறு வாசிகளாக இருந்தபடியால் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தார்கள். வாசுதேவனும் கூட கிளிநொச்சிக்கு ஒழுங்காக விஜயம் செய்பவர் மற்றும் தொடர்ச்சியாக பல வாரங்கள் தங்கியிருப்பார். 2017 தைப்பொங்கல் திருநாளின்போது கூட அவர் கிளிநொச்சியில் இருந்தார். வெளிப்படையாக வாசுதேவன் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்ட ஊற்றுப்பாலம் வீட்டில்தான் தங்குவார். புலனாய்வாளர்களுக்குத் தெரியவந்தது என்னவென்றால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவை தாளையடி கரையோரப் பகுதிக்கு கொண்டுவந்து பின்னர் அதை திருகோணமலைக்கு எடுத்துச் சென்று வினியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள் என்று. இந்த குழுவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தலைவர் வாசு.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல