வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி!

எமோஜி

இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா?



1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் அடித்த ஸ்பார்க்தான் இன்று எல்லா மொபைல்களிலும் மின்னிக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஜப்பான் கலாசாரத்திலே படங்களுக்கு முக்கியத்துவம் அதிகம். அவர்கள் எழுத்துருவே சித்திரங்கள் தான்.

ஜப்பான் நாட்டு ரமணன் “இன்று கனமழை பெய்யும்” என சொல்ல மாட்டார். ஒரு குடை போட்டு, அதன் மேல் லிட்டர் கணக்கில் நீர் ஊற்றுவது போல் காட்டுவார். அந்த லிட்டரின் அளவை வைத்துதான் மழையின் அளவை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். “இது ரொம்ப ஈசியா இருக்கே” என நினைத்த ஷிகேடிகா பல விஷயங்களுக்கு படங்களை பயன்படுத்த நினைத்தார். ஆனால், அன்றைய டெக்னாலஜிபடி அதிக சைஸில் படங்களை அனுப்புவது சாத்தியமில்லை. அதற்காக அவர் யோசித்து உருவாக்கியதுதான் எமோஜி.

முதல் கட்டமாக, மக்கள் அன்றாடும் வெளிப்படுத்தும் உணர்வுகளை பட்டியல் போட்டார் குரிடா. அதில் இருந்து 180 விஷயங்களை தேர்வு செய்து அதற்கு எமோஜிக்களை உருவாக்கினார். அங்கிருந்து ‘படிப்படியாக’ மெருகேறி இன்றைய எமோஜிக்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இன்று ஆப்பிள் நிறுவனம் முதல் ஒவ்வொரு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் பிரத்யேகமாக பல எமோஜி கீ-போர்டுகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், விதை.... ஷிகேடிகா குரிடா போட்டது.





எமோஜிக்களுக்கு பாட்டன் ஒருத்தன் இருக்கிறார் தெரியுமா? அதன் பெயர் எமோட்டிக்கான். எமோட் + ஐகான் என்பதுதான் அதன் அர்த்தம். இதில் நம் கீபோர்டில் இருக்கும் சிறப்பு கேரக்டர்கள் வைத்தே நமது எக்ஸ்பிரஷனை கொண்டு வரலாம். :) என்றால் சிரிப்பு, :( என்றால் அழுகை.. இது போல குறிப்பிட்ட சில உணர்ச்சிகளை மட்டும் எமோட்டிகானில் கொண்டு வரலாம். எமோட்டிக்கான் என்பது டைப்ரைட்டர் என்றால், எமோஜிக்கள் சூப்பர் கம்ப்யூட்டர்.

எமோஜிக்களுக்கு மொழி கிடையாது என்பதுதான் அதன் முக்கிய சிறப்பு. இந்த எமோஜி வெளிப்படுத்தும் உணர்வை, உலகின் எந்த நாட்டுக்காரரும், எந்த மொழி பேசுபவரும் புரிந்துக் கொள்ள முடியும். சொற்களே இல்லாமல், வெறும் எமோஜிக்கள் மட்டுமே வைத்து எழுதப்படும் கவிதைகள் இன்று ஏராளம். http://emojipoems.tumblr.com/ என்ற தளத்தில் எமோஜி கவிதைகளை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், மன்னிக்க, டைப்பலாம்.

படங்கள் மூலம் ஒரு விஷயத்தை புரிய வைப்பது நமக்கு புதிதல்ல. ஆதிகாலத்தில் மனிதன் இதைத்தான் செய்துக் கொண்டிருந்தான். மீண்டும் அந்த நிலைக்கு போக வேண்டுமா என எமோஜிக்களுக்கு எதிராக கருப்புக்கொடி பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். ”இந்த ரேஞ்சுல போனா எதுக்குப்பா லேங்குவேஜு” என கேள்வி கேட்கும் நிலை வரலாம் என்ற அவர்கள் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் மனித இனம் தோன்றிய நாள் முதலே இருந்து வரும் ஒரே விதி “சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்” என்பதுதானே? எமோஜிக்கள் மொழியை வெல்ல முடியுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல முடியும்.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல