செவ்வாய், 28 மார்ச், 2017

எம்.ஜி.ஆர்-ன் பிரபல வெள்ளை தொப்பி பற்றிய இரகசியங்களும் உண்மைகளும்!

சிறு வயது முதலே தொப்பி மற்றும் கண்ணாடி மீது அதிக ஈர்ப்பும், ஆசையும் கொண்டிருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நடிக்க வந்த பிறகு தனது பாகவதர் ஸ்டைல் சிகையை மறைக்க வெளியிடங்களுக்கு வரும் போது தொப்பியும், அல்லது துண்டை முண்டாசு போல கட்டியும் வரும் வழக்கமும் கொண்டிருந்தாராம்.



எம்.ஜிஆர் தனது பல படங்களில் பாடல்களில் விதவிதமான தொப்பிகளை அணிந்து நடித்திருப்பார். மற்ற நடிகர்களை காட்டிலும் எம்.ஜி.ஆர்-க்கு தான தொப்பி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என சினிமா துறையினரே பரவலாக பேசிய காலமும் இருந்தது.

என்ன இருந்தாலும், எம்.ஜி.ஆர் தனது அரசியல் காலக்கட்டத்தில் தொடங்கி கடைசி வரையில் அணிந்திருந்த அந்த வெள்ளை தொப்பி தான் அவரது அடையாளமாக மாறியது. எம்.ஜி.ஆர் படத்தை வரைய வேண்டும் என்றால் மிகவும் எளிது, தொப்பியும், கண்ணாடியும் வரைந்தால் போதுமானது.

இந்தளவு பிரபலமான தொப்பிக்கு பின்னால் சில இரகசியங்களும், உண்மைகளும் மறைந்திருக்கின்றன...

படங்களில் மட்டும் தொப்பி பயன்படுத்தி வந்த எம்ஜிஆர்-ஐ நிஜ வாழ்க்கையிலும் தொப்பி பயன்படுத்த வைத்த படம் அடிமைப்பெண். ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்துவந்த நேரத்தில் அதிக வெயில் வாட்டி எடுத்தது. அதனால் எம்ஜிஆர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

புஸ்குல்லா!
படப்பிடிப்பு காண வந்த நபர் இதை கவனித்து எம்ஜிஆர்-க்கு வெள்ளை நிற புஸ்குல்லா பரிசளித்தார்.இந்த தொப்பியால் எம்ஜிஆர் அந்த வெயிலில் சற்று இலகுவாக பணியாற்ற முடிந்தது.

மேலும், இந்த தொப்பி எம்ஜிஆர்-க்கு பொருத்தமாகவும்,, அழகாகவும் இருப்பதாகவும் குவிந்த பாராட்டுக்கள், இந்த தொப்பி எம்.ஜி.ஆர் தலையில் நிரந்தர இடம் பிடிக்க காரணம் ஆனது.

பின்னாட்களில் இந்த வெள்ளை புஸ்குல்லா தொப்பியுடன் அதிகம் வெளிவர துவங்கினார் எம்ஜிஆர். இந்த தொப்பி இல்லாமல் புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்தார். எம்ஜிஆர்-உடன் மிகவும் ஒன்றிப்போனது இந்த வெள்ளை தொப்பி.

எம்ஜிஆர்-க்கு மிகவும் பிடித்துப்போன இந்த தொப்பியை ரசாக் எனும் தொப்பி தயாரிப்பாளர் பிரத்யேகமாக தயாரித்து தர துவங்கினார். இறுதி காலம் வரை இவர் தான் எம்ஜிஆர்-க்கு தொப்பி தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

செம்மறி ஆட்டின் முடிகளை பதப்படுத்தி, அதை மேம்படுத்தி, அதனுள் மூன்று அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைத்து ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது இந்த தொப்பி. காற்று உள்ளே செல்லவும், வியர்வை தங்காமல் இருக்கவும் சிறு சிறு துவாரங்கள் இடம் பெற்றிருந்தன.

திமுக-வை விட்டு எம்ஜிஆர் வெளியேறிய போது, எம்ஜிஆர்-ஐ தொப்பியை வைத்து கிண்டலடித்து திமுக-வினர் விமர்சனம் செய்து வந்தனர் என்றும் பல செய்தி கோப்புகள் மூலம் அறியப்படுகிறது.

1984-ல் எம்ஜிஆர்-க்குக் உடல் நலம் குன்றி அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் இறந்துவிட்டார் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எம்ஜிஆர்-ன் படங்கள், வீடியோ காட்சிகள் வெளியிட தீர்மானித்தனர்.

ஆனால், மருத்துவர்கள் தொப்பி அணிய மறுத்ததால், தொப்பி இல்லாமல், பல வருடங்கள் கழித்து எம்ஜிஆர் தோற்றம் வெளியானது. உடல்நல குறைபாட்டின் காரணத்தால் மெலிந்து காணப்பட்ட எம்ஜிஆர் படங்களை கண்டு மக்கள் மிகவும் வருந்தினர்.

எம்ஜிஆர் என்றால் அனைவருக்கும் மனதில் தோன்றும் தோற்றத்தில் பெரும்பங்கு இந்த தொப்பியும், கருப்பு கண்ணாடியும் தான் இடம்பெறும். அந்தளவிற்கு எம்ஜிஆர்-ன் அடையாளமாக மாறியது இந்த வெள்ளை தொப்பி. எம்ஜிஆர் இறந்த போதிலும் கூட இந்த வெள்ளை தொப்பியுடன் தான் அடக்கம் செய்தனர்.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல