திங்கள், 27 மார்ச், 2017

மிக துணிச்சலான நமது பாரதப்பெண்கள் மூவர் செய்யும் சாகசம்

கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் சாகசப் பயணத்தை துவங்கிய பெண்கள்!

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாடுவததற்காக காரில் சாகசப் பயணத்தை துவங்கி இருக்கின்றனர் கோவையை சேர்ந்த பெண்கள். இந்த பயணத்திற்கான வழி அனுப்பு விழா, கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயணத்தை துவங்கி வைத்ததுடன், பெண்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.



கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த், பொள்ளாச்சியை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பால் ஆகியோர் இந்த சாகச பயணக் குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர். பொதுவாக இதுபோன்ற சாகச பயணத்தின்போது உதவிக்காக மற்றொரு வாகனம் பின்தொடர்ந்து வரும். ஆனால், இவர்கள் தங்களது காரை முழுமையாக நம்பி இந்த மெகா பயணத்தை துவங்கி இருக்கின்றனர்.

பெண் உரிமை மற்றும் ரோட்டரி கல்வி ஆண்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முடிவில் லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கும் இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மியான்மர், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா, மேசிடோனியா, செர்பியா, குரோஷியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்பட 24 நாடுகளை கடந்து லண்டனை அடைய திட்டமிட்டுள்ளனர். பின்னர், அங்கிருந்து விமானம் மூலமாக நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

மொத்தம் 24,000 கிமீ தூரத்தை 70 நாட்களில் கடக்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். உடல் வலிமை மட்டுமின்றி, சர்வதேச ஓட்டுனர் பெர்மிட், 11 நாடுகளுக்கான விசா, உணவு, விமான டிக்கெட், எரிபொருள் செலவு, கார் பராமரிப்பு செலவு என்று இந்த பயணத்திற்கு ரூ.60 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு போதிய நிதி உதவி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் சமூக வலைதளங்கள் மற்றும் பலரின் உதவியுடன் நிதியையும், கார் மற்றும் உபகரணங்களுக்கு ஸ்பான்சர்களை பெற்று இந்த பயணத்தை துவங்கி இருக்கின்றனர்.

இந்த பயணத்தை கின்னஸ் சாதனையில் இடம்பெற வைக்க மேலும் ரூ.10 லட்சம் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டதால், அந்த முயற்சியை கைவிட்டதாகவும் அவர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அடுத்த முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்திற்கு டாடா ஹெக்ஸா கார் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரிபார்ப்பதற்காக இந்த மூன்று பெண்களுக்கும் புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பயணத்திற்காக டாடா ஹெக்ஸா காரில் கேரியர் மற்றும் பழுது நீக்கும் டூல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பல்வேறு கால நிலைகளை சமாளித்து இந்த பயணத்தை சிறக்க வைப்பதில் டாடா ஹெக்ஸா காரும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

XPD2470 என்று குறிப்பிடப்படும் இந்த பயணத்திற்காக, ஃபேஸ்புக்கில் துவங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக பக்கத்தில் தங்களது பயணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். சாகசங்களும், சவால்களும் நிறைந்த இந்த பயணம் வெற்றி பெறுவதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சார்பில் வாழ்த்துகள்!!




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல