சனி, 29 ஜூலை, 2017

'நன்றாக துயில்கொள் அழகிய மகனே'; சார்லியின் பெற்றோர் உருக்கம்


குழந்தை சார்லிக்கு மிகவும் அரிதான மரபியல் நோய் இருந்தது
மருத்துவ சிகிச்சை தொடர்பாக சட்டப் போராட்டத்தில் சிக்கியிருந்த குழந்தை சார்லி கார்டு இறந்துவிட்டதாக, அந்தக் குழந்தையினர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 11 மாத குழந்தையான சார்லி கார்டை நல்வாழ்வு மையத்திற்கு மாற்றினர்.



குழந்தை சார்லிக்கு மூளைச் சிதைவையும் தசை தொடர்பான பாதிப்பையும் ஏற்படுத்தும் மிகவும் அரிதான மரபியல் நோய் இருந்தது.

குழந்தையின் பெற்றோர் கோன்னி யேட்ஸ் மற்றும் கிறிஸ் கார்டு சிகிச்சைக்காக தனது குழந்தையை அமெரிக்கா கொண்டு செல்ல அனுமதிக்குமாறு கிரேட் ஆர்மோண்ட் மருத்துவமனையுடன் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், குழந்தைக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்த அமெரிக்க நரம்பியல் மருத்துவர், மிச்சியோ ஹிரனோ சிகிச்சை அளிப்பதற்கான காலம் கடந்துவிட்டதாக தெரிவித்தபின் குழந்தையின் பெற்றோர் சட்டப் போராட்டத்தை கடந்த திங்களன்று கைவிட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை குழந்தையின் தாய் யேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது அழகிய குழந்தை பிரிந்து சென்றுவிட்டான், உன்னால் நாங்கள் பெருமையடைகிறோம் சார்லி" என தெரிவித்துள்ளார்.
குழந்தை சார்லியை "முழுமையான போர்வீரன்" என்று குறிப்பிட்டுள்ள பெற்றோர்.

பிரதமர் தெரீசா மே இது குறித்து தெரிவிக்கையில், " சார்லி கார்டின் இறப்பால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் பெற்றோர் கிரிஷ் மற்றும் கோன்னிக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் வேண்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

போப் ஃப்ரான்சிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், " ஆண்டவருக்கு அந்தக் குழந்தையை ஒப்படைத்துவிட்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் நேசித்தவர்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையும் குழந்தை சார்லியின் பெற்றோர் மற்றும் நேசித்தவர்கள அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர் நியுக்ளியோசைடு பைபாஸ் தெரபி சிகிச்சைக்காக, சார்லியை அமெரிக்கா கொண்டு செல்ல விரும்பினர், ஆனால் குழந்தைக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவமனை மருத்துவர், அமெரிக்காவில் அளிக்கவுள்ள சிகிச்சை பயனளிக்காது என்றும் குழந்தை சார்லி மீள முடியாத மூளைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குழந்தையின் பெற்றோருக்கு ஆதரவளித்த நூற்றுக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் அளிக்கப்படவுள்ள சிகிச்சைக்காக பணம் வசூல் செய்தும் உதவினர்.

குழந்தையின் சிகிச்சைக்காக கடந்த ஐந்து மாதங்களாக பெற்றோர்கள் நடத்திய சட்டப்போராடட்த்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐரோப்பிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் என அனைவரும், இந்த சிகிச்சை குழந்தைக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
குழந்தையின் சிகிச்சைக்காக ஐந்து மாதங்களாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.

சார்லியின் இந்த அவல நிலை போப் ஃப்ரான்சிஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கவனத்தையும் எட்டியது.

சார்லிக்கு அஞ்சலி

இதனையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தை சார்லியை சோதனை செய்த அமெரிக்க நரம்பியல் மருத்துவர் ஹிரானோ குழந்தை சார்லியின் உடலில் சில பகுதிகளில் தசைகள் இல்லையென்றும் சிகிச்சை பலனளிப்பதற்கான காலம் கடந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

மேற்கு லண்டலில் பெட்ஃபோண்ட் பகுதியில் வசித்து வரும் குழந்தையின் பெற்றோர், சார்லிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனது குழந்தையை "முழுமையான போர்வீரன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

சார்லியின் தந்தை கார்டு, " அம்மாவும், அப்பாவும் உன்னை மிகவும் விரும்புகிறோம், நாங்கள் உன்னுடன் எப்போதும் இருப்போம், உன்னைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கோருகிறோம்" என்று கடந்த திங்களன்று தெரிவித்தார்.

"எங்களுக்கு வாய்ப்பு இருந்தது ஆனால், அந்த வாய்ப்பினை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நன்றாக துயில்கொள் எனது அழகிய மகனே" என்றும் சார்லியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல