வியாழன், 20 ஆகஸ்ட், 2020

எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!

கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.அப்படியான அகோரமான வெயிலின் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு நாட்டிற்கு அனுப்புவோர் பட்டியலில் நமது பெயரையும் உள்வாங்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு காலை ஆறு மணி தொடக்கம் இந்நேரம் வரை கத்தார் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் முன்னால் வரிசையில் நிற்கும் இவர்கள் என்னதான் சாபம் பெற்று வந்தனரோ யாரும் அறியார்.

சுமார் ஆறு மாதங்கள் ஆகி விட்டது கொரோனாவின் தாக்கம் கத்தாரில் வெளிப்படத்தொடங்கி. அன்று முதல் இன்று வரை படிப்படியாக வேலையை இழந்து ,சம்பளம் இன்றி, தங்குவதற்கு இடம் இன்றி, உண்னுவதற்கு உணவும் இன்றி அறிந்தோர் அறியாதோர், நம் நாட்டினர் அல்லது வேறு ஒரு நாட்டினர் என்று அவர்களிடம் உதவி பெற்று ஒட்டுண்ணியாக வாழ்க்கையை கழிக்கும் பலரை இங்கு கண்கூடாக காணக்கிடைக்கின்றது.

என்பது வீதத்திற்கும் அதிகமானோருக்கு போதியளவு வருவாயை பெற்றுக்கொள்ளும் இடம் வெளிநாடு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லைதான். ஆனாலும் வருவாயோடு சேர்த்து செலவும் நத்தை போல் ஒட்டிக்கொள்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

மாதாமாதம் பெறும் சம்பளத்தை தன் தேவை பற்றி சிந்தியாமல் முழுவதுமாக குடும்பத்திற்கு அனுப்பி விட்டு பிறரிடம் கடனுக்காக கையேந்துபவர்கள் எத்தனையோ பேர் இங்குள்ளனர். இவ்வாறான கடன்கள் வருட முடிவில் பெரும் சுமையாக வந்து நிற்கும்போது அவர்கள் படும் வேதனை சொல்லிலடங்காது.

ஊரில் ஒழுங்கான வருவாய் இல்லாத போது மூன்று வேலைகளும் மூக்கு புடைக்க திண்டவர்கள் இங்கு வந்த பின் போதிய வருவாய் இருந்தும் குடும்பத்தின் தேவை கருதி காலை உணவாக வெறும் டீ யை மட்டும் அருந்துவோர் பலர் உண்டு. ஒரு வேளை மட்டுமே சோற்றை உணவாக உட்கொள்வோரும் இங்குண்டு.

இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் ஊரில் பிறருக்கு ஏதும் உதவி தேவை என்றாலும் கடன் பட்டேனும் சமூக சேவையாளர்களுக்கோ, ஊரின் அமைப்புகளுக்கோ உதவிகளை வழங்கி வைப்பதிலும் இவர்கள் பின் நின்றதே இல்லை.

இப்படியான துன்பத்தையே காலாதிகாலமாக அனுபவித்து வரும் நம்மவர்கள் பலர் தற்போது அதை விட பலமடங்கு வேதனையை அனுபவித்து வருவது சொல்லிலடங்காத ஒரு விடயமாகும்.

ஆறு மாதங்களாக தனக்கும் ஏதுமின்றி ஊரிலுள்ள தன் குடும்பத்திற்கும் அனுப்பி வைக்க ஏதுமின்றி நடைப்பிணமாக வாழ்ந்து வருவதென்பது துன்பத்தின் உச்ச கட்டமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

நாட்டிற்கு சென்று ஏதாவது கூலி வேலை செய்தாவது குடும்பத்தை காப்போம் என நினைத்து இலங்கையின் தூதுவராலயம் சொல்வோருக்கு ஒரே பதில்தான் கிடைக்கின்றது. அரசாங்கம் விமானத்தை அனுப்பினால் உங்களை நாங்கள் அனுப்பி வைப்போம். ஆறு மாதங்களாக இதே பதிலை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பலர் இழந்து விட்டனர்.

தற்கொலையை தவறென்று மட்டும் வேதங்கள் கூறியிரா விட்டால் இற்றை வரை எத்தனையோ உயிர்கள் தூதுவராலய வாயிலின் முன் நீங்கியிருக்கும்.

மனம் ஒரு குரங்கு.
அதன் தன்மை மாறி விடுவதற்கு முன் இங்குள்ளோரை நாட்டிற்கு எடுப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் ,அதிமேதகு பிரதமரும் முன் வர வேண்டும். இல்லையெனில் அனாதைப்பிணங்களைத்தான் விமானத்தில் ஏற்றி இறக்க வேண்டி வரும்.

இது பார்த்து விட்டு கடந்து செல்ல வேண்டிய விடயம் அல்ல. குறிப்பிட்டோரை சென்றடையும் வரை செயார் செய்யுங்கள். முடியுமானால் இதை ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் மொழி பெயர்த்து விடுங்கள். கடல் கடந்து வாழும் நம் உறவுகளுக்காக உங்களால் இச்சிறிய உதவியை மட்டுமாவது செய்திட முன்வாருங்கள்.

நன்றி.
அப்துல் ஹபீழ்
கத்தார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல